BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, July 20, 2011

கன்னத்தில் முத்தமிட்டா(ள்)ல், அமுதமாய்!

                                         பள்ளி காலத்திலிருந்தே இருக்கும் ஒரு பழக்கம்,எங்கு சென்றாலும் பையில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை உடன் எடுத்துச்செல்வது.ஏன் என்று தெரிந்ததில்லை, பாரதியின் மீதான காதலா?! அல்லது அந்த எழுத்தில் உள்ள ஒரு வேட்கையா,முதன் முதலில் அப்பா எனக்கு அதை வாங்கித்தந்தது உள்ளூரில் நடந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்க்காக, பாரதியார் பாடல்களைப் பாடுவதுதான் போட்டியே,எங்கள் பள்ளியிலிருந்து ஐவர் கலந்து கொண்டோம் நான் பாடிய பாடல்கள் மூன்று,காணி நிலம் வேண்டும்,முரசு பாடல் மற்றும் மனதில் உறுதி வேண்டும்,பரிசு கிடைக்கவே,அப்படி நாம் என்னதான் பாடினோம் பரிசளித்துவிட்டார்கள் என சிறுவயதில் தோன்றுமே நம்மை நாம் செய்யும் ஏதேனும் ஒரு செயலே வெற்றி கொள்ளச் செய்து ஊக்கப்படுத்தினால் ஏற்படும் தனி ஈர்ப்பு,அது அன்று தொடங்கியது அவ்வரிகள் மீதான கவனம்,கலத்தல் என அனைத்தும்.வீட்டுமாடிப்படியில் அமர்ந்து அப்பக்கங்களைப் புரட்டிய ஞாயிறு மதியங்கள் பல.அதிலிருந்து அதில் வரும் வரிகளை எங்கு எதில் நோக்கினாலும் அதற்கு தனி முக்கியத்துவம் அளிக்கத்தோன்றும்.அப்படித் தோன்றியதுதான் கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் வரியின் மீதான ஈர்ப்பும், அப்படத்தின் சுவரொட்டிகளை அது வெளியான புதிதில் எங்கள் ஊர் தியேட்டர்களில் கண்டபோதும்.இளமைப் பருவத்தின் துவக்க காலம் அது என்று உணர முடியாததான சிறுபிள்ளைப் பருவம் அப்பொழுது,ஆக அது மாதவனின் படமாகவும் எனக்குத் தோன்றவில்லை.சிம்ரனைப் பிடிக்கும் அதில் அவர் மூன்று குழந்தைக்கு தாயாக நடிக்கிறார் என்று அச்சமயம் வீட்டிற்க்கு வந்திருந்த சித்தி கூறிக்கொண்டிருந்தார்.கீர்த்தனா,ஆனந்த விகடனில் தன் அப்பா அம்மாவுடன் ஃபோட்டோவிற்க்கு போஸ் தந்த அதே கீர்த்தனா.இதையெல்லாம் கவனித்துவிட்டுதான் மேலே "மெட்ராஸ் டாக்கீஸ்" என்ற பெயரைப் பார்த்தேன்.கண்கள் மீண்டும் அந்த படத்தின் பெயரைப் பார்த்தது.மனதிற்க்குள் "பாரதி!" என்ற வார்த்தை மட்டும் எங்கோ பாதாளத்தின் அடியிலிருந்து பல பாதைகள் கடந்து வரும் குரல் போல ஒலித்துக்கொண்டிருந்தது.ஆனால் பல காரணங்களால் படத்தை இவர்கள் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக"  திரையிட்டபோதுதான் காணமுடிந்தது.சில நேரங்களில் பாடல்கள் மட்டும்தான் மனதை வருடும்,வலிக்கச்செய்திடும்,மனதிற்கு நெருக்கமானதாகச்செய்திடும்,சிரிக்கச்செய்திடும்,புரட்சி கொள்ளச்செய்திடும்.பத்து நிமிடப் பாடல்கள் செய்வதைப் பல நேரங்களில் இரண்டரை மணிநேரப் படங்கள் செய்வதுண்டு.அத்தகைய படங்களில் ஒன்றாகத்தான் ஆனது இந்த கன்னத்தில் முத்தமிட்டாலும்.பார்த்த முதல் தடவைமுதல்.பார்த்த முதல் கனமே ஒட்டிக்கொண்ட ஒரு அவா "இந்த அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் அப்புறம் இன்னும் பல படங்கள்,இதைப் பற்றி மட்டும் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க வேண்டும்"என்று.வருடங்கள் கடந்து அதற்குப் பிறகு பார்த்து மனதிற்கு மிகவும் நெருக்கமாகிபோன சில படங்களைப் பற்றி எழுதினாலும்.இந்த இரண்டு படங்களைப் பற்றி எழுத நினைக்கும் பொழுது மட்டும் வார்த்தைகள் அடுத்து அடுத்து கரைதொட்டுச் செல்லும் அலைபோலத் தொட்டுவிட்டு மறைந்துவிடும்.இப்படங்களில் எல்லாம் அதைப் பற்றி எழுதுவதையும் தாண்டி என்னமோ ஒன்னு இருக்கு சார்!".அதற்குப் பிறகு மற்றதைப் போல இப்படத்தையும் பலமுறைப் பார்த்தாகிவிட்டது.அன்று இருந்த அதே நிலையே இன்றும்.         
  

                            பாரதியின் கண்ணம்மா போல் அவள்-ஷாமா வீரமும் காதலும் கருனையும் எல்லையற்றதாயும், அளவற்றதாயும் உள்ளவள்.பட் பட் என்று வெடிக்கும் எழுத்தாளர் திருச்செல்வன்.மிகவும் உணர்ச்சிவசப்படும் பெண்ணாக தாயாக இந்திரா,புரட்சி புரட்சி என்று வெடிக்கும் தம்பிக்கு தமக்கையாக "ஊருடன் ஒத்து வாழ்" கொள்கையைக் கடைபிடிக்கும் ஒருத்தி,கிராம நகர வாழ்க்கைக்கேற்ப தன் வாழ்விலும் உருவிலும் தோன்றும் மாற்றத்தை அழகாய் வெளிப்படுத்தும் தாத்தா.சுற்றி நிகழும் அவலங்களை கண்டு அந்நேரம் மட்டும் மனதிற்குள்,ஒரு மாற்றத்திற்க்காக ஏங்கும் ஒரு குடிமகனாக,டாக்டர்.கடவுள் யாரென்று தெரியும் ஆனால் அவனைப் பற்றிப் படித்ததில்லை,தெரிந்ததைவைத்துக் கொண்டு அவனைத் தேடுகிறேன் என்னும் மனநிலை கொண்ட குழந்தை அமுதா,நிஜமாகவே அமுதம்.படம் நெடுக நறுக்கென்ற வசனங்களில் இயல்பாக ஆனால் சுருக்கென்று தோன்றும் மணிரத்னம் படத்திற்கே உரிய அழகு,சுஜாதாவைத் தவிர யாரால் தரமுடியும்.வசன உச்சரிப்பிற்க்கு தகுந்தவாறு அந்த பின்னனி இசை.இளையராஜா இசை மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் அந்த ஆன்மாவினை உணர முடியும் என்று உணரவைத்த படங்களில் இதுவும் ஒன்று.ஆன்மாவைத் தேடுகிறாயா?!அதோ,அந்த குழல் ஓசைதான் அதன் தொடக்கம்.இருளும் வெண்மையும்,வெறுமையும் முழுமையும் போல்தான் இப்படத்தில் பல இடங்களில் தோன்றும் குழலும் அதைத் தொடர்ந்து வரும் கீபோர்டும்.அத்தகைய ஆன்மாவிற்கு உருவம் அந்த கேமிரா எனலாம்.போரும் பேசுகிறது,புத்தமும் பேசுகிறது.
 
                     தாய் என்பவள் யார்?,அனைத்திலும் முதிர்ச்சி மிக்கவள் இல்லை அவள்,தியாக உள்ளத்தின் மொத்த உருவம் இல்லை அவள்.அன்னை இல்லை அவள்,அம்மா!.திருமணம் குடும்பம் என்று தான் கண்ட சுழலில் தானே முக்கியப் பாத்திரமாகிவிடும் ஒருத்தி.தன் சரிபாதியை விட தன் பிள்ளைகளிடமே அதிகம் அன்னியோனியத்தை உணருபவள்.அதுவும் பெண் பிள்ளையாயின் அவளே இவளுக்கு தோழி, ஆதி முதல் அந்தரங்கம் வரை அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் தோழி,ஒரு காலத்தில் தானும் மகளாக இருந்தவள்,அந்த பிஞ்சு மனம் இறுதி வரை மாறாதவள்.
                  
தந்தை மகள் உறவு?!,அதன் அழகு,வெளிப்பாடு,புனிதம் அனைத்தையும் உணர்ந்துவருபவள் நான்,அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம்,தந்தைக்கே உண்டான அந்த முதிர்ச்சி,தாயன்பை விட எதோ ஒரு விதத்தில் பெரியதாகவே தோன்றும் அந்த பாசம்.இவற்றை தன் வரிகளால் பக்கங்களில் அழகாய் அளந்துவிடும் வைரமுத்துவின் பேனா ,அதைத் தன் குரல்களில் அளந்துவிடும் சின்மயீயும்,ஜெயச்சந்திரனும்;என்ன ஒரு உணர்வு அந்த இரு குரல்களிலும்,அதைக்கேட்டுக்கொண்டு கண் மூடி ஒரு ஓரமாய் அமர்ந்துவிடத்தோன்றும்,தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த குரல்களில் சின்மயீயினதும் ஒன்று எனலாம்.கதைக்கரு வேறாயினும் காதலை மேலோட்டமாகத் தொட்டு செல்கிறது,பறவைகள் பறக்கும்பொழுது அந்த சிறகுகள் அதன் உடல் தொட,தோன்றும் ஒரு மென்மை போல,நான்-எண்ணம் நீ-உருவம் என்பது போன்ற மென்மை.சட்டெனத் தான் நனைந்து விடுகிறது நெஞ்சம் அந்த மென்மையில்.இது அனைத்தையும் தாண்டி மண்ணுடன் மனம் கொண்ட உறவைப் பேசும் இடங்களில் மனமும் காணும் விழியும் இனைந்து இளகிவிடும்.வெள்ளைப் பூக்கள் பாடல் ஒரு அமைதி உணர்வையும்,என்றேனும் ஒரு நாள் அவ்வரிகள் மெய்யாகாதா?! என்ற ஏக்கத்தையும் விட்டுச்செல்லும் கேட்கும் ஒவ்வொரு முறையும்,நூற்றாண்டின் மிகச் சிறந்த வரிகளுள் இப்பாடல் வரிகளும் ஒன்று எனலாம் .இறுதிகாட்சி உடல் என்றால் பின்னணி இசை அதற்கு உயிர்,கலங்கவைத்துவிடும்.

                    

              ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்.

                              
                                கண்ணத்தில் முத்தமிட்டால்-கண்ணம்மா
                               அமுதம் சுரக்குதடி! 

2 comments:

கோபிநாத் said...

\\ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்\\

சூப்பர் ;-)

Aishwarya Govindarajan said...

நன்றி :-)