BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, August 28, 2011

பெட்டிகளில் குச்சி தட்டி,
கைச் சில்லரைகள் மெட்டு கட்ட,
தன் பசி மறக்கப் பாடும் குருடனுக்கு,
நம் பதில்...
மௌனங்களும்,
நிராகரிப்பும்,
செவிப்பொறியில் அலை வீசும்,
பொருள் புரியா பாடல் ஒன்றும்.  

Thursday, August 11, 2011

கொஞ்சம் மழை நேரம்..

                                இந்த மழைக்குத்தான் ஏன் இந்த அவசரமோ?! பொறுமையா பெய்யவேண்டியதுதானே.மொத்தமா கொட்டித்தீர்த்துட வேண்டியது.அப்புறம் மொத்தமா காணாம போயிடவேண்டியது.மாலினியின் புலம்பல் இது.வீட்டின் முற்றத்து கட்டையில் அமர்ந்தபடி.இடப்பக்கம் உள்ள அறையில் ரிக்கார்ட் பிளேட் பாடிக்கொண்டிருந்தது.அந்த பிளேட்டில் இருந்த கீறல்களுக்கு அது புலம்பிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மழையின் சலசலப்புகளுக்கு இடையே அது பாடலாகவே கேட்டது.அதை இயக்கிக் கொண்டிருந்த ப்ளேயர் மாலினியின் மாமனார் நாக்பூர் சென்றபோது வாங்கியது.முப்பது வருடங்களுக்குப் பின் அவர் அடிக்கடி உபயோகித்தப் பொருள்களில் அவரது ஊன்றுகோலுடன் இதுவும் ஒன்று.அவரது இறுதிக்காலங்களில் அவரது தோழமை கூட.அவரது இறப்பில் சவஊர்தியுடன் ஊன்றுகோலைக் கட்டியவர்கள் விண்ணுலகில் டெக்னாலஜிக்கு மதிப்பில்லாததால் அப்பொட்டியை அவர் உபயோகித்த அறையிலேயே விட்டுவிட்டனர்.மாலினியின் கணவன் பத்ரி தன் அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அந்த ப்ளேயரைத் தடவிப் பார்த்துக் கொள்வான்.பத்ரியுடன் திருமணமாகி இருபது வருடங்கள் அவ்வீட்டில் இருந்திருப்பினும் மாலினிக்கு தன் மாமனாரிடம் அந்த தந்தைக்கு நிகர் என்ற உணர்வு ஏனோ தோன்றியது இல்லை.அதனால் மற்றவர்கள் போல் அவள் கொடுமைக்காரி என்றில்லை,பேசுவாள்,மரியாதை தருவாள் கேட்ட உதவிகளைப் புரிவாள் ஆனால் அவளைப் பொறுத்தவரை அவர் பத்ரியின் அப்பா,தன் மாமனார்...மாமனார் மட்டுமே.தந்தைக்கு நிகர் இல்லை.ஆனால் நீண்ட நாள் கண்முன்னே ஒருவர் இருந்து திடீரெனக் காணாமற் போனால் ஏற்படும் பதற்றம் கலந்த தவிப்பு அவளுள்ளும் இருந்தது.ஆனால் அதையும் சிறிது நாளைக்கு பிறகு வந்த ஒரிஸ்ஸா புயல் பலி எண்ணிக்கை,தன் பெண்ணை வெளியூர்க் கல்லூரியில் சேர்க்கும் பொறுப்பு,ஜப்பான் சுனாமியெல்லாம் மறக்கச் செய்துவிட்டது.
                           இன்று அந்த ப்ளேயரை ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பது பத்ரிதான்,அவரது ஊன்றுகோல் நாட்களில் வாங்கிய ப்ளேட் அது.எம்.எஸ்.வி-யின் இசையில் பழைய பாடல் ஒன்று "வான் நிலா,நிலா அல்ல!".ப்ளேட்டை எடுக்கும்போது அதில் உள்ள பாடல் பற்றிய விவரங்களைப் பார்ப்பதோடு சரி,ஒவ்வொரு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவன் தந்தை நினைவே வந்துவிடும்.அந்த ஊன்றுகோல் வளைவின் மேல் அவர் பாடலுக்கு ஏற்றாற்ப்போல் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டுவது.அவன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்தபடி தலையை மெதுவாகப் பாடலுக்கு ஏற்றவாறு அசைப்பது,அனைத்தும் அவன் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த விழித்திரை நிழலில்.இந்த நினைவுகள்தான் எத்தனை வலியது,எத்தனை வேகமாகப் பயனிப்பது.அப்படியே அவனது நினைவுகள் தன் தந்தையிலிருந்து ,திருமணம் முடிந்து மாலினியுடன் தான் சென்ற முதல் பயனத்திற்குப் பறந்தது.இதே பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என அதனை முனுமுனுத்துக்                 கொண்டிருந்தாள்.காலப்போக்கில் அவளது முனுமுனுப்புகள் குறைந்து புலம்பல்களே அதிகரித்ததாக அவனுக்குத் தோன்றியது.அவளுக்குத் தான் பாடியது நினைவில் உண்டா என்று தெரியவில்லை.ஆனால் இவனின் பசுமரத்தாணி நினைவுகளில் அதுவும் ஒன்று.எவ்வளவு அழகானது நினைவுகள்.இந்த நினைவுகள் என்பது எதற்காக?,தேவையா?தேவையற்றதா? எனத் தெரியாமல் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் நினைவுகள்.நாம் ஏன் கடந்த காலத்தை தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் போல அவ்வப்பொழுது உயிர்க்கச் செய்து அதனுள் அதிலேயே அதனை கரையச் செய்துகொண்டிருக்கிறோம்.ஒருவகையில் இதுவும் இயற்கை மீதான மற்றொரு சுயநலம்தானோ?.சிரித்துக்கொண்டான் தன்னுள்.
                     இன்னும் மழை விட்டபாடில்லை.தன் வளர்ச்சிக்காக மழை நீரில் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முற்றத்துக் கட்டையோரச் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.திருமணத்திற்கு முன்பு அவளது அதன் மீதான பார்வையே வேறு.அதைப் போன்ற செடிகளின் மேல் மழைத்துளி இருப்பது வெறும் அழகு என்ற அளவில் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.இப்போது அந்த பார்வை பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று.அழகு என்ற ஒரு அத்தியாயத்தை மறக்கத் தெரிந்த ஒரு பரிணாம வளர்ச்சி.அதை எண்ண,சிரிக்கத்தான் தோன்றியது அவளுக்கு.நினைவுகள் எந்தத் திரையிலும் எந்த நடிகனாலும் வெளிப்படுத்த இயலாத ஒரு வகை ஹாஸ்யம் மிக்கது.மணவாழ்வின் புதிதில்தான் பத்ரி எவ்வளவு நகைக்கும்படியாகப் பேசுவான்,சற்றே ஒரு ஏளனம் தோன்றும் அதில்.அந்த பத்ரி இப்போது இல்லை.இவன் வேறு.பலர் பயனித்த சாலையில் தன் பயனத்தையும் தொடங்கி அதிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லவும் முடியாமல்.அப்பாதையிலிருந்து திரும்பிவிடவும் முடியாமல் தத்தளிப்பவர்களில் இவனும் ஒருவனாகிவிட்டான்.சுவாரசியமற்றதாய் தோன்றிவிடும் பயனப்பாதையில் ஆங்காங்கே தோன்றும் மலர்களையும் இலைகளையும் கண்டு மகிழ்ச்சிப் பெருமூச்செறியும் ஒரு பயனி.அந்நிலையை உணர்ந்ததால்தான் அதற்குப் பிறகான அவனது அத்தகைய பேச்சுகளில் தன்னால் ஈடுபாடு காட்டமுடியாமல் போனதோ.உன்மையான அவன் இல்லையே!,என்று ஒருவகை ஏக்கம் கலந்த ஈடுபாடற்ற தன்மை.இப்போது அந்த அறையில் அமர்ந்தபடி எதனை எண்ணிக் கொண்டிருப்பான் என்று இவள் மனம் நன்கு உணரும்.அப்பாடல் வழியே அவன் மனதில் ஒடும் நினைவலைகளும்,அதை சார்ந்த அவனது எண்ணங்களும்.ஆனாலும் அவளால் இப்போது இவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்த இயலுகிறது.உள்ளிருக்கும் வேறோரு தன்னை பொய்ப்பித்துக் கொண்டு.இருளுக்குக் கரும்போர்வைப் போர்த்தும் தேவையற்ற வேடம்.மழை அடுத்து வரும் அந்த குளிர்ந்த காற்று இப்போது.அந்த இலைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன,பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகள்.அந்த ஒசை மட்டும் இச்சமயம் காதுகளுக்கு.                 

Saturday, August 6, 2011

அவரும் அப்படித்தான்....


தனக்குப் பிடித்ததில்தான்
அதன் உலகம் சுற்றுமாம்,
உலகை உணராச் சிறுபிள்ளைகளுக்கு

விருப்பம் வெறுப்பு என
அதற்கு அனைத்தும் அதனுள்ளே

நெருக்கமாய் தான் உணரும்
உள்ளத்துடன்,
சொல்லாமல் தானே
நெருங்கிவிடும் அவ்வுள்ளம்.

கோபம் வந்தால்,
மௌனம் கொள்ளும்
கொஞ்சல் புரிந்தால்,
சிரித்து நகரும்

தான் பிடித்த முயலுக்கு
மூன்று கால் என்றால்,
முயலே அது அல்ல
மூஞ்சூறு என்றிடும்.

சுற்றங்கள் வியந்திடக் கதைகள் பல பேசும்,
அச்சுற்றமே கோபிக்கும்,
கருப்பொருளும் அச்சிசுவாகும்.

தன் பொருள் தமதென்ற,
எண்ணம் கொள்ளும் சில நேரம்.
பிறர் மகிழப் பகிர்ந்தளிக்கும்,
உள்ளம் உண்டு சில நேரம்.

யாரும் தேவை இல்லை என,
உடல்மொழி கூறினாலும்.
எவரும் அல்லாது இயங்காது,
அதன் மனமொழி.

பொதுவரிகள் இவை யாவும்,
சிறுபிள்ளைகளுக்கு மட்டுமல்ல.

அவரும் அப்படித்தான்.

Monday, August 1, 2011

எழுத எண்ணினேன்...

              

                     இதோ எழுத அமர்ந்துவிட்டேன்,பாடல்களை இந்நொடியில் கேட்கத் தோன்றவில்லை ஆனால் இதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு பாடலை நானே இனம் கண்டுகொள்ளாமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்.பார்க்கும் வெளி உலகிற்கு இங்கு நான் எழுதுவது மட்டும்தான் தெரியும்.சுவரில் சாய்ந்தபடி எழுத்துப் பலகையின் மேல் இக்காகிதங்களை வைத்துக் கொண்டு கிறுக்குவது மட்டுமே தெரியும்.எழுத வேண்டும் என்ற மனதிற்கு நானே இட்டுக்கொண்ட கட்டாயத்தில் அமர்ந்து, என்ன எழுதுவது என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இசை பற்றி?!சூழ்நிலை அதற்கேற்றவாறு இல்லை.நடனம் பற்றி எழுதலாமா?!வாழ்வின் ஒரு சில கசப்பான அனுபவங்களை அது நினைவு படுத்துவிடும்,ஆக இங்கு அது பற்றியும் மையிட எண்ணமில்லை.உச்சத்தில் தனியாய்ச் சுழலும் மின் விசிறி என்னை வெறுமை பற்றி எழுதச் சொல்கிறது.வெறுமைகளால் உந்தப்படும் நேரமில்லை இது.மணமான மறுநாள் அந்த மணமகளிடம் தோன்றும் ஒரு ஆனந்த அழகு போல்தான் இந்த அந்தி மாலை தென்றல் காற்று வேளை.இயற்கை அழகைப் பற்றி எழுதலாமா?!,வேண்டாம் என்கிறது நெஞ்சம்..ஒரு சில ரசனைகள் ரசனைகளாக மட்டுமே சிறந்தது,அதற்கு எழுத்துருவோ வேறு எந்த கலை உருவோ எடுபடாது.எடுபட்டாலும் வெளிப்படாது.இந்த எண்ணங்கள்,இதைப் பற்றி எழுதலாமா?! வேண்டாம்,எப்படியும் இறுதியில் அது சுய வர்ணனையாய் முடிந்துவிடும்,என்னவன் தானாய் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை முரசு அறைவித்தாற் போல் ஆகிவிடும்.என் சுயம்,என்னுடன்.பிறரது எண்ணங்களைப் பற்றி?,அது அனுமானங்களே தவிர அவர்களைப் பற்றிய முடிவுரை அல்ல.அன்மையில் பார்த்த ஒரு அழகுக் கதை பற்றி?,சிலாகிக்கலாம்,ஆனால் தற்பொழுது நான் தேடும் நிறைவினை அது தரப் போவதில்லை.இந்த எழுத்து பற்றியே எழுதினால் என்ன?!.வீட்டுச் சுவரில் வெறும் பல்பக் கோடுகளாக முதன் முதலில் அறிமுகமான இந்த எழுத்துக்கள் பற்றி,ம்ஹும்..புன்னகை பற்றி?!,"கே.பி சார் படம் ஜெமினியின் பாத்திரப் படைப்பிற்க்காகவே பார்க்கலாம்".. என்று நான் துவக்கினால்,நீங்கள் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.என் குடும்பம் பற்றி?!அவர்களுக்கே அவர்களைப் பற்றி சரிவரப் புரிவதில்லை.ஆக,நான் புரிந்துகொண்டேன் என்று எழுதினாலும் மறுப்புகளே அதிகம் கிடைக்கும் எனக்கு.நான் செய்த தீயவைகள் பற்றி?!..பொறுமையுடன் படிக்க இங்கு எவரும் இயேசுபிரான் இல்லை.நன்மைகள் பற்றி?!..நானும் இயேசுபிரான் இல்லை.என்னவன் பற்றி?!,அது தேவை இல்லை படிப்பவர்கட்கு.கவிதை என்ற பெயரில் கிறுக்கினேன் என்றால் பலருக்குப் புரிந்திருக்காது எனும் அசட்டு தைரியத்தில்.ஏன்?!,அவருக்கே கூட புரிந்திருக்காது எனும் எண்ணத்தில்.வாழ்க்கை பற்றி?! பிறந்த தேதி மட்டும் அறிந்துகொண்டு பயனத்தைத் தொடங்கி,எப்போது முடியும் என்று தெரியாவிடினும்,என்றேனும் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டு பிறருக்காய்,நமக்காய் என பலருக்காய் ஒரு பிறவி முழுதும் செலவிடும் வாழ்வு பற்றி?!.
                     தந்தையுடன் அடிக்கடி சதுரங்கம் விளையாடுவது உண்டு.அந்த 64 கட்டங்களைப் பார்க்கையில்,நாமே முடிவு செய்துகொண்ட வரையறையாகவும்,அந்த 64-கையும் அடக்கிய பெரிய கட்டம் நமக்காய் அளிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் தோன்றும்.இந்த சிறுகட்டத்தையும் பெருங்கட்டதையும் எங்கோ ஒரு கோட்டில் இனைப்பது "விதி".நமது வரையறைகளை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும்,நம்மால் பெயரிடப்பட்ட விதி.மார்கழி முன்பனியை ரசித்தாயா?!,வசந்தத்தில் ஓர் நாள் என்று ஏதேனும் யோசித்தாயா?!,குழந்தைகள் சிரிப்பினில் நீயும் சிரித்தாயா,சமைப்பதிலும் கலை கண்டாயா?! என்று கேட்கப்போவதில்லை.அந்த கிறுக்குத்தனமெல்லாம் என் ஆழ்மனதோடு.நீ அன்றாடம் செய்யும் செயல் என்ன?,பல் துலக்குவது தொடங்கி,நாளிதழ்களைப் புரட்டுதல்(?),இடையே பேச்சுக்கள்,பரவசங்கள்(இரண்டுமே சிலநேரம் பெயரளவில்).அதற்குப் பின் பிறருக்காய் நாம் உழைக்க ஆரம்பிக்கும் வாழ்வின் துவக்கம்.அனுதினம் இது தொடர்வது.எத்தனை பேர் அதனை மனதாரச் செய்கின்றோம்.முரண் எதிலும்,பிறக்கையில் அது அழ ,பிறர் சிரிக்கும் இவ்வுலகைப் பார்த்துப் பழகி நாளடைவில் அதனோடு ஒத்து தானும் சிரிக்கப் பழகிவிடும் ஒரு சிசுவின் மனநிலை அதன் இறுதி வரைக்கும் அதனைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.ஒருவேளை குழந்தை தானும் சிரித்துக் கொண்டே பிறந்திருந்தால் இந்த முரண் தோன்றி இருக்காதோ?.ஒரு செயல் ஒருவருக்கு ஆத்மார்த்தமாய்ப் படுவது மற்றவருக்கு கடமையாய் சில நேரங்களில்,வெறும் நேரச் செலவாய்ப் படுவது,முரண்.இந்த முரண்களுக்கு பயந்துதான் வாழ்வின் இந்த வரையறைகள் எவ்வாறு மாறுகின்றன?.உனக்கு முக்கியமான வேலை,இதை உனக்காகச் செய்யவேண்டும் அல்லது அதில் உனக்கு உதவ வேண்டும் காரணம் அது என் கடமை அல்லது அதைப் பொருத்துதான் நான் உன்னிடம் நற்பெயர் பெற முடியும் அல்லது உன் மனதில் எனக்கெனத் தனி இடம் போட்டு அமர்ந்துகொள்ளமுடியும் அல்லது அச்செயலைத் தவிர்ப்பதால் தோன்றும் பல பிரச்சனைகளில்/எதிர்ப்புகளில் இருந்து விடுபட முடியும்,ஆக இதோ செய்து முடித்துவிட்டேன்.இந்த நான்கு மதிப்பற்ற வரையறைகள்.வாழ்வில் அமைதி தேடுகிறேன் என்று அமைதி என்பதன் பொருள் மறந்து நாம் தற்காலிகமாய்த் தேடுவன.இதைப் பற்றி எழுதுகிறேன்,ஆனால் நான் கானும் பலர் (பலர் என்ன?!,என்னையும் சேர்த்து முக்கால்வாசி உலகம்) இப்படித்தான் இயங்குகிறது ,ஆக குறியற்று சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மண்ணில் புதைவதுபோல் புதையுண்டு விடுகின்றன வார்த்தைகள்.ஒவ்வொன்றுக்கும் நாம் அர்த்தம் தேடுவதுபோல் பலரும் தேடுவரோ?!.தேடினால் இந்த முரண் ஒழிந்துவிடுமா?!.சதுரங்கத்து பெரிய கட்டத்தினுள் 64-கின் பொருள் உணர்ந்து,தன்னை ஒரு கட்டத்தினுள் சுருக்கிக்கொள்ளாமல்,தனக்கு உகந்தது எது என்று உணர்ந்து அதனுள் பறப்பதுவும்,மலர்வதுவும்,போரிடுவதும்,சிரிப்பதுவும்,கதைப்பதுவும்,"வாழ்வதுமான" அந்த அமைதி.சதுரங்கம்தான்,வாழ்க்கை என்பது,சிக்கலானது அல்ல,பல நிறங்கள் கொண்ட சதுரங்கம்.ஒன்று நீ,மற்றொன்று நீயற்றது.எறியப்பட்டுவிட்டன குண்டுகள்,அதை உரியவர் கையால் எடுக்கும் வரை மண்ணில் புதையூண்டவையே.