BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, March 8, 2014

இதை நான் இன்றுதான் கூறவேண்டும் என்று எண்ணியிருந்தேன்..

      காலைத் தொலைக்காட்சியில் மகளிர் தினம் பற்றி வியப்புடன் பேசிக்கொண்டிருந்த ஒரு தொகுப்பாளினியிடம், அதே தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை மகளிர் தினமாக நமக்கு நிருபிக்கும் பொருட்டு பட்டியலிடப்பட்டு பேச வைக்கப்பட்ட சாதனைப் பெண்களிடம், அந்த தொலைக்காட்சியின் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்து தன் தினத்தைக் கொண்டாடிய என் பாட்டியிடம், மகளிர் தினம் பற்றி பிரஸ்த்தாபித்தபடி ரயிலில் பயணித்த சக பெண் பயணியிடம், எனக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிய சக பெண் ஊழியர்களிடம், வாழ்த்துக்கள் கூற வந்த சக ஆண் ஊழியர்களிடம், வலைதளத்தில் இன்று மட்டும்  தன்னை ஒரு படி மேலாகவே பெண்களாகக் காட்டிக்கொள்ளும் பெண்களிடத்திலும், ஒரு படி மேலாகவே தன்னை ஆண் என்று காட்டிக்கொள்ளும் ஆண்களிடத்திலும் இதை நான் இன்றுதான் கூறவேண்டும் என்று எண்ணியிருந்தேன், நான் தினமும் பயணிக்கும் ரயிலில் பெண்கள் பெட்டியில் கூட்டம் ஏறஏற வார்த்தைகளும் விவாதங்களும் சண்டைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கும், படியில் நிற்பவர் , உள்ளே இருப்பவரை நகரச் சொல்லுவார், உள்ளே இருப்பவர் இன்னும் உள்ளே இருப்பவரை நகரச் சொல்லுவார், இப்படி ஒருவரை ஒருவர் நகரச் சொல்லி யாருமே நகராமல் அதே பெட்டியில் ஏதோ ஒரு இடத்தில் எப்படியோ ஒரு சண்டை ஆரம்பித்திருக்கும்.அடுத்த ரயில் நிலையத்தில் உள்ள கும்பலின் அளவைப் பொருத்து அந்த சண்டையின் அளவு நீடிக்கலாம்.அவரவர் நாகரிகம் பற்றி சண்டையின் வழியாக விவாதிக்கப்படும்.ஆனால், யாரேனும் ஒரு குறத்தி கையில் குழந்தை, மூட்டை சகிதம் ஏறிப் படிக்கட்டின் அருகில் நின்றிருந்தால், அவளை உள்ளே நுழையவும் விடமாட்டார்கள், எவரும் குழந்தையை வாங்கிக்கொண்டு தன் மடியில் வைத்துக்கொள்ளவும் மாட்டார்கள், குறத்திதானே!. கர்ப்பிணிகள் நின்றபடி வந்தால், அவர்களுக்கு நாம் இடம்தரக் கூறினால் 'எனக்குந்தாம்மா கால் முட்டி வலிக்குது' என்பது பதிலாகக் கிடைக்கும்.பை தி வே,நாகரிகம் சார்ந்த பேச்சுகள் அடுத்த நாள் கூடத் தொடரலாம். வலைதளங்களில் சகபெண்கள் அவ்வளவு ஒற்றுமையுடன் ''அவ்வ்வ்'' என்று கூறிவிட்டு '':-)'' இட்டுச் செல்வதைப் பார்க்கையில் சில நேரம் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த அவ்வ்வும் '':-)''களும் ரயில் பெட்டிகளில் ஏன் வேலை செய்வதில்லை?.இது, இந்த பாசம் ஏன் நம் வீட்டில், நம் அண்டைவீட்டில் , நம் தெருவில் என ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சக பெண்களுடன் ஏற்படுவதில்லை. நாம் பெண்ணியம் என்ற ஒரு வார்த்தையை உபயோகிப்பதற்காகவே சமூகத்தில் மிச்ச சொச்சமாய் வளர்க்கப்பட்டுவரும் அந்த பெண்களுக்கு விடுதலை அளித்துவிட்டுக் கூறுங்கள் உங்கள் மகளிர் தின வாழ்த்துகளை.
        இரண்டு வாரத்திற்கு முன்புதான் அந்தக் காய்கறி வண்டியோரம் தனது கவுனைத் தூக்கியபடி அந்த சிறு குழந்தை நின்றுகொண்டிருந்தது அப்போதுதான் சிறுநீர்க் கழித்துவிட்டு வந்திருக்கவேண்டும்,அந்த சிறுகுழந்தைக்குத்  தெரியாது அதற்கு முந்தைய தினம்தான் தன்  வயதுடைய ஒரு குழந்தையை ஒருவன் வன்புணர்ச்சி செய்து கிழித்துப்போட்டதை.அது தெரிந்திருந்தால் அது தனது கவுனைத் தூக்கியபடி நின்றிருக்காது. நான் பயந்தேன், இந்தக் குழந்தையையும் அருகில் இருக்கும் யாரவது ஒருவன் ஏதாவது செய்துவிட்டால்? தேவை ஒரு வஜைனாதானே?, இன்று கூடப்பார்த்தேன் உயிருடன்தான் இருக்கின்றது அந்தக் குழந்தை.ஆண்கள் நல்லவர்கள்தான் என்று கூறுவதற்கு அந்த ஒரு குழந்தையேனும் அத்தாட்சியாக இருக்கட்டும் அதனையேனும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுங்கள்.அப்படிக் காப்பாற்றப்பட்டு கடைசியாக எஞ்சி நிற்கும் அந்தக் குழந்தையிடம் கூறிவிடுங்கள் உங்களது மகளிர் தின வாழ்த்துகளை.
ஆண், பெண் என்று பேதம் பார்க்காமல் மனிதம் எங்கோ தினமும் செத்தபடி இருக்க, எங்களுக்கு வேண்டாமே உங்களது வாழ்த்துகள். 

Tuesday, November 5, 2013

நீ! நான்! நிமிடங்கள்..-2

இது மழைப் பருவம்.இப்போது நம் குரல்களுக்கிடையே நிலவும் அமைதியை, மழைத்துளியின் சிதறல்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.இந்த மழைதான் எவ்வளவு அழகானது, இசை போல.இசையும் இசை சார்ந்தும் தன பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கின்றனர் பலர்.'மழை' என்று ஏன் எவரும் பெயர் வைப்பதில்லை?.எனக்கு என்னவோ இசையும் ,மழையும் ஒரே பெயர் போல்தான் ஒலிக்கும் என்று தோன்றுகிறது .இலையுதிர் காலங்களில் நான் நடந்து சென்ற அதே பாதையில் எனக்கும் உன் நினைவுகளுக்கும் குடை பிடித்தபடி நான்.குடையின் மேல் பட்டும் படாமல் துளிர்த்திருக்கும் அந்த மழைத்துளிகளும் உன் போல்தான்,பட்டும் படாமல்.துளிகள் ஒவ்வொன்றும் என் சிறு சிறு உலகங்களாக.மழை நின்றது.குடைமீது துளிர்த்திருந்த என் உலகங்களும் நழுவிச் சென்று விழுகின்றன,இலையுதிர் காலத்துச் சருகுகளின் மேல்.  

நீ! நான்! நிமிடங்கள்..-1

இந்த இயற்கையின் ஒவ்வொரு பருவமும்  தன் துவக்கத்தில் ஏதோ ஒன்றை உடன் அழைத்து வருகிறது,முந்தைய பருவத்தின் தேய்பிறையில் மறைந்த உன் நினைவுகள் மீண்டும் வளர்ந்தபடியாய்,இதோ இந்த இலையுதிர் காலத்தின் சாலைகளில் கீழே உதிர்ந்து கிடக்கும் சருகுகளின் மெல்லிய உரசல்கள்,சில நேரங்களில் நம் பேச்சுகளிடையே நிலவிய மௌனங்களும் இவ்வாறுதான் இருந்தன. ஆனால் அது என்ன சட்டென இலைகள் வெவ்வேறு திசை நோக்கி நகர அங்கு ஒரு சஞ்சலம் மிக்க அமைதி நிலவுவது ஏன்?.இந்த இலையுதிர்வுகளுக்கு நடுவே அங்காங்கே முகம் கவனிக்கபடாத மனிதர்களின் குரல்களும் ஒலிக்கின்றது.எனோ உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவர்களது குரல்களையும் கவனிக்கத் தவிர்க்கிறது.அந்த குரல்களுக்கும் என் சிந்தனைகளுக்கும் இடையேதான் எங்கோ தொக்கி நிற்கிறது சிறு அமைதியும்.விளக்கமளிக்க முடியாத கேள்விகள் போல் விவரிக்க முடியாத இந்த அமைதி.அந்த அமைதியை தாங்கியபடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,இந்த சாலையில் என் கண்முன்னே சருகுகள் உதிர்ந்தபடி.  

Saturday, April 13, 2013

லாவண்டர் கனவுகள்

       அடர் பனிப்பாதையிலே  உதிர்ந்து  கிடக்கும் லாவண்டர் மலர்களை உற்று நோக்கியபடி நடந்துகொண்டிருக்கிறேன்.நடப்பது எனக்கு பிடிக்கும்.கால்கள் நடந்துகொண்டிருக்க இந்த மனது மட்டும்,கரைதொடும் புது அலைகள் போல் ஒவ்வொருமுறை எட்டித் தொடும்போதும் ஒரு புதிய உலகத்தை விட்டுச் செல்லும்.நான் என்னைத் தேடத்துவங்கி உன்னில் தொலையும் உலகம் அது.நடப்பது மிகப் பிடிக்கும்.ஒவ்வொரு லாவண்டர் மலர் உதிரும்போதும் உன்னை நோக்கி நான் எடுத்துவைக்கும் அடுத்த தடத்தை நிர்ணயித்துவிடுகின்றன.அந்த வெண்படர்தலின் வழியே  உன்னைத்  தேடியபடி என் விரல்கள் அலைந்துகொண்டிருக்கின்றன.மனதின் மெல்லிழை அது தொட்டுவிடும் தூரத்தில் எங்கோ நீ.
          என் தேடல்களிடையே அவ்வப்பொழுது நான் கடந்து வந்துவிட்ட பாதையையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என் கடந்தகாலம் அது .உன்னுள் நான்..என்னுள் நீ... என்று கூறினாலும் நான் வேறு..நீ வேறு.. என்று நிமிடக்கணக்கில் நினைவுபடுத்தும் தருணங்கள் நிரம்பியது.நான் உன்னுள் கலந்துவிட எத்தனிக்கும் ஒவ்வொரு கணமும் அந்த கடந்தகாலம் என் நினைவுகளில் இருந்து எங்கோ கரைந்துகொண்டிருக்கிறது.இதோ நான் திரும்பிப் பார்க்கையில் இருள் படர்ந்த ஏதோ ஒரு சூன்யத்தில் அவை சுருங்கிக் கொண்டிருக்கின்றன.
                                  புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் இந்த மண்ணுக்கும் கொஞ்சம் புசியுமாம் என்று தோழியுடன்  பாடிக்கொண்டே கட்டிய மணல்வீடுகளுக்கு இன்று விலாசம் இல்லை.அவர்கள் கண்டதிலேயே  நான் சிறந்த பெண் என்று கூறி சிறிதாய் என்னை ஆணவம் கொள்ளச்செய்த அண்டைஅயல் வீட்டிலிருந்த நரைமுடிகளும்  தளர்தோள்களும், ஏனோ அந்த தாத்தாக்களும் பாட்டிகளும் இறந்து போனபோது நான் அழவில்லை.என் தாத்தாவும் அவரது ரேடியோப்போட்டியும் இருந்ததற்கான அடையாளமாய் அந்த ரேடியோவின் கொரகொரப்புகள் மட்டும் இன்னும் எங்கள் வீட்டுச்சுவர்களில் எதிரொலித்தபடி.தொலைந்த அவர்கள் இளமை நினைவுகளை என்னிடம் பகிரும் அப்பாவும் அவரது நண்பர்கள் வட்டமும்.ஒருநாள் அந்த வட்டத்தில் நானும் ஒருபுள்ளியாய்.அந்த நட்பு வட்டத்தின் மிகச்சிறிய உறுப்பினர்.நாளடைவில் எனக்கான நட்பு வட்டம்,எந்தன் நட்பு வட்டம் என் இருவேறு வட்டத்தின் இடைப்புள்ளியாய் நான் மாறியிருந்தேன்,அந்த வட்டம் உன்னையும் அணைத்துச்செல்லும் என்று நான் அன்று அறிந்ததில்லை.பாடப்புத்தகங்களின் பின்னட்டைகள் பாரதியை நான் வரைவதற்காகவும்,எதையேனும் கிறுக்குவதற்க்காகவும் எனக்காக காலியாய் விடப்பட்டிருந்தன.அப்போதெல்லாம் உன் பெயரை நான் அதில்  எழுதியதில்லை.எதிர்காலம்,லட்சியம் என்ற வார்த்தைகள் என்னுள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும்.யாருமற்ற அந்த பூங்காவில் அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய யோசித்ததுண்டு,அப்போது  என் பின்புறம் நீ அங்கே நின்றிருந்ததில்லை.முதன்முதலில் தொலைபேசி என்ற ஒன்றைப் பார்த்து வியந்தது, உருவம் அறிந்துகொள்ளமுடியாத அதில், ஏதோ ஒரு உறவினரிடம்  ஹலோ என்றது,அப்போது எனக்குத் தெரிந்திருந்ததில்லை, அலைபேசியில்  உன் முகம் பார்த்துக் கொண்டு பேசாது இருக்கமுடியுமென.நான் முன்னோக்கி வந்ததில் ஆங்கங்கே சிதறுண்டு விட்ட கோர்வைகள்  பல,உதிர்ந்துகொண்டிருக்கும் இந்த மலர்கள் போல். இந்த மலர்களை மீண்டும் அந்த மரங்களிடம் சேர்க்கக் கையில் எடுத்தேன்,அங்கு வேறு ஒன்று பூத்துவிட்டிருந்தது.அவைகளை ஏந்தியபடி இதோ நான் உன்னை நோக்கி.உன்னிடம் நெருங்க நெருங்க அவைகள்  நிறம்மாறிக் கொண்டிருக்கின்றன.லாவண்டர் மெல்லிதழ்கள் கொஞ்சம் கடினம் மிக்க ஊதாவாக,எங்கிருந்தோ நீ அவைகளை ஸ்வாசித்துக்கொண்டிருப்பது போல.என் கடந்தகாலமும் நீயும் இரு துருவங்களைப் போல,நான் அந்த துருவங்களை இணைக்கும் கோட்டில் எங்கோ இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன் முற்றிலும் ஊதாவாகிவிட்டிருக்கும் அந்த லாவண்டர் மலர்களை பார்த்தபடி.அங்கே நீ!.மற்றுமொரு கடந்தகாலம் தான் பிறப்பதற்கு  காத்துக்கொண்டிருக்கிறது.


Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - இதுவல்ல



               'அன்பே சிவம் படம் போல்  கமல் நடித்து வெளிவந்த படம் அதற்கு முன்னும் பின்னும் ஏதும்  இல்லை' என்று எப்படியும் விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டு வந்து த்விட்டரிலும் முகநூலிலும் பதிவிட்டுவிடவேண்டும் என்று படத்தை பார்ப்பதற்கு இரு நாட்கள் முன்பே முடிவு செய்துகொண்டேன்,.ஏறக்குறைய எல்லா திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் நாள் மூன்றாம் காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது என் முந்தைய பிறப்பின் புண்ணிய பலன்.

                திரையின் முன்புறத்திலிருந்து  மூன்றாவது வரிசை,'எதுக்கு பிரன்ட்ல டிக்கெட் புக் செஞ்ச' என்று நண்பர்கள் கேள்வி!.ரஜினி படங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் படத்தின் துவக்கம் முதலே விசில் பறந்துகொண்டிருந்தது தியேட்டரில்(ரஜினியின் சிவாஜி படத்திற்கு படம் துவங்கும் முன் வரும் விளம்பரங்களில் இருந்தே விசிலடிக்கத் துவங்கிவிட்டனர்). நண்பர்கள் 'இப்படி விசிலடிச்சா?! டயலாக் ஒழுங்காவே கேக்க மாட்டேங்குது'.நான், 'பின்னாடி எங்கயாவது உட்கார்ந்திருந்தா இதுகூட கேட்காது'(அவசரமாக முன் வரிசையில் டிக்கெட் புக் செய்து நான் செய்த தவறை மூடிமறைத்த பெருமிதம் என்னுள்).
              
              திரைப்படம் இரண்டு பெண்மணிகளின் விவாதங்களுடன் தொடங்கியது. நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் மற்றும் மிஸ்ஸஸ்.விஸ்வநாத்தாக நிரூபமா.ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள் போலவே சுற்றித்திரியும் பெரும்பாலான விஞ்ஞானிகளைப் பார்த்துப் பழகிய எனக்கு எழுந்த முதல் கேள்வியே ஒரு விஞ்ஞானி (அதுவும் நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் வேறு)இவ்வாறெல்லாம் யோசிக்க முடியுமா? என்பதுதான்.ஆண்ட்ரியா,எம்மாதிரியான தமிழை அவர் பேசுவது என்று முடிவெடுப்பதற்க்குள்ளாகவே படம் முடிந்துவிடுகிறது.        
      
               ராகுல் போஸ்,விக்ஸ்-தொண்டையின் கீச் கீச் என்பது போன்ற குரலில் பேசினாலும் ,அவரே தமிழ் பேசி நடித்திருக்கிறார்,கொடூரமாகப் பார்ப்பது கத்துவது  என்ற தமிழ் சினிமாவின் வில்லன்கள் சமுதாயத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு,தனக்குள் அமைதியான ஒரு கருப்பு உலகத்தை உருவாக்கிக் கொண்ட ஒரு குரூர மனிதன் போன்ற பாத்திரம்,ஆரவாரமற்ற வில்லனாக மிகக் கச்சிதம் , பாராட்டுக்கள்!. 

               கர்னல் ஜகன்னாத்!,விஸ்வநாத்தின் மாமாவாக,சேகர் கபூர்.ஆண்ட்ரியாவைப் போல் இவரும் இக்கதைக்குத் தேவையா? தேவை இல்லையா? என யோசிக்க வைத்தாலும்,'ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துடக் கூடாதுல்ல' எனும்போது தையற்காரன் நறுக்கென்று சீறாக ஒரு துணியைத் தைப்பதற்காக வெட்டுவது போன்ற  நடிப்பு.நிருபமாவை க்ளோசப் ஷாட்களில் காண்பித்த நொடிகளில் இவரை காண்பித்திருக்கலாம் .நடிப்பை இன்னும் ரசித்திருப்போம்.ஆமாம் இவருக்குத் தமிழ் பேசியது யார்?.


            கமல், விஸ்வநாதனாகவும்,வசீமாகவும் ,நடனத்திலும் நடிப்பிலும் நேர்த்தியோ நேர்த்தி.கமலின் படங்களுக்கே உரித்தான நாத்திகமும் சாடல்களும் கதையின் போக்கினூடே ஆங்காங்கே நகைச்சுவையும்.  'உன்னைக் காணாது' பாடல்,வாலியின் ஆனந்த விகடன் பக்கங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு எழுதிவிட்டார் போல நம் கவிஞர் கமல்.விக்ரமன் படத்தில் எஸ் .ஏ.ராஜ்குமாரின் லாலாலாக்கள் போல படம் முழுக்க ஒலிக்கிறது 'யாரென்று புரிகிறதா?'பாடல்.படம் ஹாலிவுட் தரம் என்று சொல்லும் நண்பர்களுக்கு,அமெரிக்கர்கள் எவரும் ஆப்கானிஸ்தான் அவலங்களைப் படம்பிடிக்க இன்னும் முன்வரவில்லை.ஆனால் கதையின் அந்த ஒரு பகுதிக்காக  மட்டுமே அவரின் ரசிகையான எனக்கு மதிப்பும் பெருமிதமும்  தோன்றுகிறது . ஒசாமாவின் உயரம் முதற்கொண்டு நுணுக்கமாகப் பார்த்து தேர்வு செய்திருக்கும் கமல் மீதமுள்ள கதையை விஸ்வநாதன் என்னும் நடனக்கலைஞன் நடனத்தினூடே சம்பந்தமில்லாமல் சமைத்த சிக்கன் போல ஆக்கிவிட்டார்.அதன் விளைவு  பாஷாவிற்கு பம்பாயின் மார்க் ஆண்டனி என்றால்,விஸ்வநாதன் அமெரிக்காவில்  வசிப்பதால் அவருக்கு ஒசாமாதான் சரிப்படும் என்பது போல ஆக்கிவிட்டது. கமலின் ரசிகையாக விஸ்வரூபம்-2 வெளிவருவது நல்ல விஷயம் என்று எண்ணினாலும்.ஒரு சினிமா பார்வையாளராக இக்கதைக்கு இரண்டாம் பாகம் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது. தொடக்கத்தில் சொன்ன அன்பே சிவம் பற்றிய குறிப்பையும் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.தசாவதாரம் வரிசையில் வந்த கமலின் வாரிசு இப்படம் என்பதால்.      

        உலகில் உள்ள அனைவராலும் உயரத்தில் தூக்கிவைக்கப்பட்டு தனித்துவிடப்பட்ட ஒருவன் தன்னை அவர்களுள் ஒருவனாக நிலையின் திரியாது திணித்துக்கொள்ள முயன்று  உருபெற்ற தோற்றமே இந்த விஸ்வரூபம்.இருப்பினும் கமலின் விஸ்வரூபம் இதுவல்ல.     

Sunday, June 17, 2012

இவள் இசைக் காதலி...!

                        ஜூன் 15 மலேசியா வாசுதேவன் பிறந்தநாளாம், இணையத்தில் இருப்பவர்கள் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிந்திராது இருந்தால் எனக்கு தெரிந்தே இருந்திருக்காது, ஆனால் அந்த காரணம் எல்லாம் எதுவும் இல்லாமல் நான் அன்று கேட்டுக்கொண்டிருந்த பாடல் 'என்றென்றும் ஆனந்தமே!!',அந்த வயலின் ,கீ,  ட்ரம் பேட் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு அழகு என்றால் , திடீரென்று சத்தமில்லாமல் வந்துவிட்டு நம்மை ஆனந்தப் படுத்திவிட்டு செல்லும் அந்த குழலோசை மற்றுமோர் அழகு.பாடல் அமைந்த ராகம் ஸரஸாங்கி.இதே ராகத்தில் அமைந்த மற்ற  சில பாடல்கள் 'மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ!', 'மகராஜனோடு ராணி வந்து சேரும்!'...இந்த ஒற்றுமை எல்லாம் விடுத்து இந்த பாடல்களில் புலப்படும் மற்றுமொரு விஷயம் அந்த புல்லாங்குழல் , அணைத்து வாத்தியக் கருவிகளும் உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும், குழலினை மட்டும் ஆங்காங்கே தனித்து உபயோகித்திருப்பார் இளையராஜா. இந்த பாடல் இப்படியென்றால் 'நீ பாதி  நான் பாதி' பாடல், அதே குழலிசைக்காகவே பலரின் மனத்தைக் கொள்ளையடித்த பாடல் சக்கரக் கட்டி சக்கரவாகம் இந்த பாடல் ,இதே போல் அதே வரிசையில் வரும் வனிதாமனியும்,வானிலே தேநிலாவும், குழலாகப் பிறந்து தன்னை வயலினாக இசை மாற்றிக்கொள்ளும் அந்த கருவி..என் செல்ல சாருகேசிக்கும்(காதலின் தீபம் ஒன்று,மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,அரும்பாகி மொட்டாகி ) , காப்பிக்கும் (சங்கத்தில் பாடாத கவிதை, சின்னத்   தாயவள்,கண்ணே கலைமானே..) குழலுடன் குரல் ஜாலமாய் அந்த வார்த்தைகளற்ற ஹம்மிங் பகுதிகள், இந்த ராகங்களுக்கு புல்லாங்குழல் பதிக்கப்பட்டது என்றால். அடுத்து நரம்பினால் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்றால் சிம்மேந்திர மத்யமமும்(தாலாட்டும் பூங்காற்று ,ஆனந்த ராகம் போன்ற பாடல்கள்),சிவரஞ்சனியும்(வா!வா!அன்பே அன்பே! ), நம்மை எப்படியெல்லாம் ஊடுருவி உருக்கிவிடலாம் என்பதற்காகவே பயன்படுத்தப்  பட்டிருக்கும் வயலின் தந்திகள்..இந்த பதிவை எழுதத் தொடங்கும் முன் நான் படித்த பக்கங்கள் இதோ இந்த பதிவும்  அதன் தொடர்ச்சிகளும் தான்  http://bit.ly/LSIUNe ..என்னுள் எழுந்த கேள்விக்கு இங்கு பதில் அகப்படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்..பதில் கிடைக்கவில்லை எனினும் எனுள் எழுந்த கேள்வியை இன்னும் கூர்மைப் படுத்திக்கொள்ள மிகவும் உதவியது.என்னுள் வருடக்கணக்கில் அலைந்துகொண்டிருக்கும் கேள்வி இது ,ஆம் மேற்சொன்ன ராகங்களில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் அனைத்து கருவிகளையும் உபயோகித்துக் கொள்கின்றன தன்னை நளினப் படுத்திக்கொள்ளவும் மெருகேற்றிக்கொள்ளவும்,சட்டென்று கேட்பவரை ஈர்த்துவிடவும் ,ஆனால் ஏதோ ஒரு இசைக்கருவி மட்டும்தான் அந்த மெட்டிற்கு, ஆயிரம் சிப்பிகள் ஆழத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்றிடம் மட்டுமே தன்னை முழுதுமாய் அளித்துவிடும் அந்த கடல் நீர்த்துளி போல் ஆகிவிடுகிறது.இது ,இன்னார்க்கு இன்னாரென்று மனிதர்களிடை ஒருவன் தேர்வு செய்வது போல் இசையிடை  இன்ன ராகத்திற்கு  இக்கருவி  என அவன் தேர்வு செய்ததா?. ஆனால் அந்த குழல் காற்று போல், அந்த நரம்புகள்  போல் என் உணர்வுகளைச் சோதித்துக் கொண்டிருப்பது, மனிதர்களாய் இருப்பினும் இருக்காது.

(பி .கு),என்னடா இவள் இசையைப் பற்றி ,நாம் புரிந்துகொள்ள முடியாவண்ணம் ராகம் அது இது எனப் பிதற்றுகிறாள்  என்று எண்ணுபவர்கள்,மன்னிக்கவும்.இன்று நாம் புதியதாய் ஒரு வார்த்தை கற்றோம்  என்று எண்ணிக்கொள்ளுங்கள்.ராகம்,தாளம்,பல்லவி, பல்வலி  பற்றியெல்லாம் அறியாது வெறும் இசையை மட்டுமே முழுதும் ரசிப்பவர்களுக்கு அது என்ன  என்பதைப் புரியும்படி சொல்லவேண்டுமாயின், இந்தப் பாடல்களையெல்லாம் வரிசைப் படுத்தி  உன்னிப்பாய்க் கேட்பவராயின்  ஒரே மெட்டில் அமைந்த பாடல்கள் போல் தோன்றும்,அதுவே ராகம் என்பதும் :)..

Wednesday, April 18, 2012

நிறமற்ற மலரிதழின்
விரல் எஞ்சும் வாசம்


காற்றுடன் காதலாகி
வண்ணம் கொஞ்சும் பட்டாம்பூச்சி


விண்ணின்று மண் விழும் இமைநொடியில்  
ஏதொருவன் ரசனையாய்  நீடூறும் மழைத்துளி 


தந்தி ஓலிக்கும்  ஒரு இசையின் 
அந்தம் தோன்றும் வெறுமை


இவை யாவுடன் அடக்கம்,
எந்நொடியும்!
எப்படியும்!
என்றான இவ்வாழ்வு.


இப்படியாய் முடிவிலியாய்,
முடிவுகளும் காரணங்கள்
அன்புடையாள் இவள்,
அவனை அன்பு செய்ய.