BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Saturday, March 8, 2014

இதை நான் இன்றுதான் கூறவேண்டும் என்று எண்ணியிருந்தேன்..

      காலைத் தொலைக்காட்சியில் மகளிர் தினம் பற்றி வியப்புடன் பேசிக்கொண்டிருந்த ஒரு தொகுப்பாளினியிடம், அதே தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை மகளிர் தினமாக நமக்கு நிருபிக்கும் பொருட்டு பட்டியலிடப்பட்டு பேச வைக்கப்பட்ட சாதனைப் பெண்களிடம், அந்த தொலைக்காட்சியின் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்து தன் தினத்தைக் கொண்டாடிய என் பாட்டியிடம், மகளிர் தினம் பற்றி பிரஸ்த்தாபித்தபடி ரயிலில் பயணித்த சக பெண் பயணியிடம், எனக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிய சக பெண் ஊழியர்களிடம், வாழ்த்துக்கள் கூற வந்த சக ஆண் ஊழியர்களிடம், வலைதளத்தில் இன்று மட்டும்  தன்னை ஒரு படி மேலாகவே பெண்களாகக் காட்டிக்கொள்ளும் பெண்களிடத்திலும், ஒரு படி மேலாகவே தன்னை ஆண் என்று காட்டிக்கொள்ளும் ஆண்களிடத்திலும் இதை நான் இன்றுதான் கூறவேண்டும் என்று எண்ணியிருந்தேன், நான் தினமும் பயணிக்கும் ரயிலில் பெண்கள் பெட்டியில் கூட்டம் ஏறஏற வார்த்தைகளும் விவாதங்களும் சண்டைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கும், படியில் நிற்பவர் , உள்ளே இருப்பவரை நகரச் சொல்லுவார், உள்ளே இருப்பவர் இன்னும் உள்ளே இருப்பவரை நகரச் சொல்லுவார், இப்படி ஒருவரை ஒருவர் நகரச் சொல்லி யாருமே நகராமல் அதே பெட்டியில் ஏதோ ஒரு இடத்தில் எப்படியோ ஒரு சண்டை ஆரம்பித்திருக்கும்.அடுத்த ரயில் நிலையத்தில் உள்ள கும்பலின் அளவைப் பொருத்து அந்த சண்டையின் அளவு நீடிக்கலாம்.அவரவர் நாகரிகம் பற்றி சண்டையின் வழியாக விவாதிக்கப்படும்.ஆனால், யாரேனும் ஒரு குறத்தி கையில் குழந்தை, மூட்டை சகிதம் ஏறிப் படிக்கட்டின் அருகில் நின்றிருந்தால், அவளை உள்ளே நுழையவும் விடமாட்டார்கள், எவரும் குழந்தையை வாங்கிக்கொண்டு தன் மடியில் வைத்துக்கொள்ளவும் மாட்டார்கள், குறத்திதானே!. கர்ப்பிணிகள் நின்றபடி வந்தால், அவர்களுக்கு நாம் இடம்தரக் கூறினால் 'எனக்குந்தாம்மா கால் முட்டி வலிக்குது' என்பது பதிலாகக் கிடைக்கும்.பை தி வே,நாகரிகம் சார்ந்த பேச்சுகள் அடுத்த நாள் கூடத் தொடரலாம். வலைதளங்களில் சகபெண்கள் அவ்வளவு ஒற்றுமையுடன் ''அவ்வ்வ்'' என்று கூறிவிட்டு '':-)'' இட்டுச் செல்வதைப் பார்க்கையில் சில நேரம் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த அவ்வ்வும் '':-)''களும் ரயில் பெட்டிகளில் ஏன் வேலை செய்வதில்லை?.இது, இந்த பாசம் ஏன் நம் வீட்டில், நம் அண்டைவீட்டில் , நம் தெருவில் என ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சக பெண்களுடன் ஏற்படுவதில்லை. நாம் பெண்ணியம் என்ற ஒரு வார்த்தையை உபயோகிப்பதற்காகவே சமூகத்தில் மிச்ச சொச்சமாய் வளர்க்கப்பட்டுவரும் அந்த பெண்களுக்கு விடுதலை அளித்துவிட்டுக் கூறுங்கள் உங்கள் மகளிர் தின வாழ்த்துகளை.
        இரண்டு வாரத்திற்கு முன்புதான் அந்தக் காய்கறி வண்டியோரம் தனது கவுனைத் தூக்கியபடி அந்த சிறு குழந்தை நின்றுகொண்டிருந்தது அப்போதுதான் சிறுநீர்க் கழித்துவிட்டு வந்திருக்கவேண்டும்,அந்த சிறுகுழந்தைக்குத்  தெரியாது அதற்கு முந்தைய தினம்தான் தன்  வயதுடைய ஒரு குழந்தையை ஒருவன் வன்புணர்ச்சி செய்து கிழித்துப்போட்டதை.அது தெரிந்திருந்தால் அது தனது கவுனைத் தூக்கியபடி நின்றிருக்காது. நான் பயந்தேன், இந்தக் குழந்தையையும் அருகில் இருக்கும் யாரவது ஒருவன் ஏதாவது செய்துவிட்டால்? தேவை ஒரு வஜைனாதானே?, இன்று கூடப்பார்த்தேன் உயிருடன்தான் இருக்கின்றது அந்தக் குழந்தை.ஆண்கள் நல்லவர்கள்தான் என்று கூறுவதற்கு அந்த ஒரு குழந்தையேனும் அத்தாட்சியாக இருக்கட்டும் அதனையேனும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுங்கள்.அப்படிக் காப்பாற்றப்பட்டு கடைசியாக எஞ்சி நிற்கும் அந்தக் குழந்தையிடம் கூறிவிடுங்கள் உங்களது மகளிர் தின வாழ்த்துகளை.
ஆண், பெண் என்று பேதம் பார்க்காமல் மனிதம் எங்கோ தினமும் செத்தபடி இருக்க, எங்களுக்கு வேண்டாமே உங்களது வாழ்த்துகள். 

0 comments: