BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, December 13, 2011

கற்றதனாலாய...

          சிறுபிள்ளைக் காலங்களில் நான் படித்த பள்ளியில் ஒரு செயல் நடைமுறையில் இருந்தது.தினமும் பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்தில்,இடையே ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் எவரேனும் ஒருவர் வந்து ஒரு திருக்குறளையும் அதற்கான பொருள் விளக்கத்தையும்,உடன் ஒரு பொது அறிவுத் துணுக்கையும் அங்கு கூடியிருக்கும் சக மாணவர்களிடையே பகிர்ந்துவிட்டுச் செல்லவேண்டும்.தன் முறை வரும்போது பலர் வேண்டுமென்றே நழுவி எங்கேனும் சென்றுவிடுவர்.அத்தகைய சமயங்களில் அன்று வானொலியில் கேட்ட செய்திகளை வைத்ததும் நினைவில் இருக்கும் ஏதேனும்  ஒரு குறளைக்  கூறியும் ஒப்பேற்றிவிடுவதுண்டு.அதனாலேயே வேறு பள்ளி மாறும் வரை G.Aishwarya என்ற பெயர் GK Aishwarya என்று  அழைக்கப்பட்டதுண்டு(இதில் கொடுமை இந்த கோவிந்தராஜனும் & குடும்பத்தாரும்,அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவ்வாறு விளித்ததுதான்).இவையெல்லாம் நிகழ்ந்து பலபல வருடங்கள் கடந்தாயிற்று.

              அப்போது என் செயல் எனக்கு நல்லதுதான் செய்தோம் என்ற எண்ணத்தை அளித்தாலும்.அதை இப்போது யோசித்தால் அது எனது சுயநலத்தை மட்டுமே வெளிப்படுத்தியதோ?,என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.  ஒருவேளை நான் முன்சென்றிராது,வேறு ஒருவருக்கு நான் அறிந்துகொண்டவற்றை கற்பித்துவிட்டு முன் அனுப்பியிருந்தால் இத்தகைய உணர்வு இப்போது எழும்பி இருக்காதோ?!.கற்க எவரேனும் முன்வந்திருபபரா?!.நான் எவ்வாறு அதைக் கற்றேன் எப்படி?எவ்வாறு? என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலா?.நம்மில் எத்தனை பேருக்கு அகரத்தின் ஆதி பற்றி தெரியும்?.எத்தனை பேரில் எப்படி? எவ்வாறு? ஏன் ? என்ற கேள்வி எழுந்திருக்கும்,அது இசையாயினும் சரி ,இலக்கியமாயினும் சரி.அண்மையில் நட்பு ஒன்றிடம் புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நட்பின் பதில்   இதுவாக இருந்தது,"புத்தகம் எல்லாம் நமக்குப் புரியற மாதிரி எழுதணும்,பலது நமக்குப் புரியறது இல்ல அதனால அவ்வளவா படிக்கறது இல்ல".ஆனால் புத்தகங்களைப் புரிந்துகொள்ள ஆர்வத்துடன் எத்தனை பேர் எத்தனித்து இருக்கிறோம் என்பது ஐயமே!.பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் தம்பி குனிந்தபடி ஒரு வரியை புத்தகத்தைப் பார்த்து படித்துவிட்டு,நிமிர்ந்து சுவற்றை நோக்கியபடி அதனை பத்து முறை மனனம் செய்கிறான் .அவனைப்  பொறுத்தவரை கற்றல் என்பது அவனோடு நின்றுவிட்ட ஒன்று,தான் மட்டும் புரிந்துகொண்டால் போதும் என.பாட்டி மார்கழி மாதமானால் தொலைக்காட்சி  முன் அமர்ந்து அதில் ஒளிபரப்பப்படும் "பிபரே ராமரஸங்களை" தலையை அசைத்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் ,பொருள் எதுவும் புரிந்திராது.பின்பு அந்த தலையாட்டல்கள் எதற்கு?, "ராமர்" என்ற பெயர் கொடுக்கும் ஒரு உருவற்ற பிடிப்பினாலா?,மெச்சிமைத்தனத்தாலா? அல்லது அச்சத்தாலா?.அதே பொருள் பற்றி தன்னிடம் வேறு எவரும் கேள்வி எழுப்பிவிடமாட்டார் என்ற அவநம்பிக்கை.
              தவறு எவரின்பால்? கற்பவர்,கற்றல் என்பதன் பொருள் சரியாக உணராததாலா?!, கற்பிப்பவர் கற்பித்தலின் பொருள் உணராததாலா?!..திருக்குறளை பிறமொழியாளர்கள் உணரவேண்டும் என  அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சிலர்.பிறமொழிக் களஞ்சியங்களை நம் மக்கள் புரிந்துகொள்ள ஏன் வழிவகை செய்வதில்லை?!."ஸ்வாகதம் கிருஷ்ணா!",என்றதும் "அருமையாப் பாடியிருக்காங்கய்யா!" என்னும் சிலர் "அலைபாயுதே கண்ணா!" என்பதைத்தான் மனதாரத் தாமும்  பாடுகின்றனர்.
             மூன்றாம் வகுப்பில்தான் முதன்முதலில் ஹிந்தி கற்பதற்காக சிறப்பு வகுப்பு சென்றது.அப்போது தூர்தர்ஷனில் "மிளே சுர் மேரா துமாரா!" அடிக்கடி ஒளிப்பரப்பபடும் ஒன்று.ஹிந்தி கற்ற ஒரு ஆர்வக் கோளாறில் அப்பாடல் வரியை தமிழில் மொழிப்பெயர்க்க எத்தனித்ததுண்டு(ஒரே பொருள் கொண்ட வரியையே பல மொழியில் பாடி இருப்பர் என்று அப்போது எனக்குத் தெரியாது).இசைக்காதலை அழகாய்த் தாய் மொழியில் வெளிப்படுத்திய வரிகள் அவை.உணர்ச்சி மிக்க வரிகள் பொதிந்த ஒரு கதை,எங்கோ அப்பட்டமாய் ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.தன் உள்ளார்ந்த உணர்வுகளையே மிகையாய் வெளிப்படுத்தும் அவ்வரிகள் சுயநலங்கள் என்றே தோன்றும், அத்தகைய எழுத்துக்கள் படிப்பவரை ஈர்த்து அவர் மனம் சிந்திக்க வைத்து ,ரசிக்க வைத்தாலும். கற்பவர் கற்பிப்பவர் என்று இரு நிலையைப் பார்த்தால், "மகாகணபதிம்!" மேல்தட்டின் அடையாளம் போலவும் ,எட்டுக் கட்டையில் எங்கோ கேட்கும் "கணபதியே வருவாய்" மார்கழி மாதத்துப் பொங்கல் சேர்க்கை போலும் ஆகிவிட்டது.இத்தகைய நிலையில்  இவர்களுக்கு ஏன் "why this kolaveri"-யும் "evandi unna peththaan"-னும் பிடித்திருக்கிறது என்று கேட்பவர்களிடம், "நீ எத்தனை முறை உமது "வைஷ்ணவ ஜனதோ"-க்களை இவர்கள் புரிந்துகொள்ளுமாறு உரைத்திருக்கிறாய்?",என்று கேட்கத் தோன்றுவதை தடுக்க இயலவில்லை(இரண்டுமே இதை தட்டச்சிக்கொண்டிருப்பவர்க்கு   பிடிக்கவில்லை என்பது அவரது தனிப்பட்ட விருப்பெனினும்!).இந்த கற்றல் என்பது இயற்கை,இசை, இலக்கியம் எனத்தொடங்கி ஆழ்கடலின் அடிவாரம் போல் ,புதிரான  வாழ்க்கையில் பாய்ந்து நிற்கிறது.
கடல்!,கடலின் ஆழம்தான் எவ்வளவு அத்தனையிலும் இருப்பது உயிர்கள் மட்டுமா?!,எழுப்பப்படாது நம்மில் பொதிந்திருக்கும் கேள்விகள் பலவற்றிற்கான விடைகளும் கூட. கேட்டுவிடுவோமே கேள்விகளை கடற்பக்கம் திருப்பப்பட்ட சுனாமிகள் என.மனிதனோடு அவன் மனமும்  பிழைத்திருக்கும் இக்கரையில்..

Saturday, December 10, 2011

கதர் கச்சம் அணிந்ததனால் 
காந்தி மகான் என்று ஆகிவிட்டான்,
மனிதப் பித்தம் தெளிந்தவன் நீ 
பித்தென்று தூற்றப்பட்டாய்!..

மகான் வழி சென்றார்,  

மக்கள் அடிமைதான் இன்றும்,
கவி நீ மட்டும் சுதந்திரம் எய்த!..
 
மனம் கற்றது உன் தமிழை,      
அது ஒவ்வாது  இவ்வுலகை, 
அது ஒவ்வாது அம்மகானை.. 

  

Saturday, September 24, 2011

சுஜாதாவும்..! சுஜாதாவும்..!


         அர்த்தங்களைத் தேடித் துவங்கும் வாரநாட்கள் வார இறுதியில் அந்த அர்த்தங்களாகவே மாறிவிடும்.அட! வாழ்வு என்பது இவ்வளவுதானா?!,என்று உறங்குவதற்குக் கண்களை மூடும் சமயம் தோன்றும் ஞாயிறு இரவுகள்,திங்கள் அன்று அடுத்த பிரம்மாண்டத்தை நோக்கிக் கண்களைத் திறக்கும்வரை.இந்தவாரம் கூட அப்படித்தான் துவங்கியது தோழி ஒருத்தியின் குறுஞ்செய்தியுடன். "And thr starts another week :(" என்று. அதற்கு "and thr awaits one happy end  too,Lolita morning :),Adventurous n pleasant day(s) ahead "  என்று பதில் அளித்துவிட்டு காலையைத் துவக்கினேன்.சொன்னதுபோல்தான் இருக்கவும் செய்தது வார இறுதி. சத்யமில் "எங்கேயும் எப்போதும்"-மா அல்லது நந்தம்பாக்கத்தில் தோழி ஒருத்தியுடன் சூப்பர் சிங்கரா என்ற இரு தேர்வுரிமையில், நான் கண்டிப்பாக அப்படத்தை ரசிப்பேன் என்று என் மாமா 
சொல்லி,முன்னமே டிக்கெட் புக் செய்திருந்த காரணத்தால் முதலாவதைத் தேர்வு செய்தேன்.பயிற்சி காலங்களில் விடுப்பு தர இயலாது என்ற மேனேஜரிடம் "சார்!படம் பார்க்கச் செல்ல அனுமதி வேண்டும்",என்று நேரடியாகக் கேட்டதும் முதலில் முறைத்தாலும் பின் சிரித்துவிட்டு அனுமதி தந்தார்.ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தை விட்டுத் துவங்கியது வெள்ளிக் கிழமை வார இறுதி.
         "எங்கேயும் எப்போதும்"- இசை இன்னோரு முறைக் கேட்டால் பிடித்துவிடும் என நினைக்கிறேன்.மற்றபடி வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளை யதார்த்தமான பாத்திரங்களின் யதார்த்தமான நடிப்புகளோடு நகர்த்திச் சென்றுள்ளார்.fox-உம் ஏ.ஆர் முருகதாசும் சேர்ந்து தயாரிக்கும் அளவிற்கு படத்தில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்போடு சென்றேன்.ஆனால் படம் துவங்கிய நொடிமுதல் அந்த இருவருமே நினைவில் வரவில்லை.பார்த்து வெளியேவருகையில் ஒரு திருப்தி மட்டும்.நடுநிசி நாய்கள் படத்தை GVM இறுதியில் ஒரு டாகுமெண்டரி கதையாக மாற்றியது போல் சரவணன் தவறு செய்யாது அழகாக காட்சிக்குக் காட்சி நகர்த்திச் சென்றுவிட்டார்.அஞ்சலி தன் காதலை வெளிப்படுத்திய விதம் கண்டு.கல்லூரிக்கு சான்றிதழ்கள் வாங்கச் செல்லுகையில் பேருந்தில் அருகில் அமர்ந்திருந்தவர் ரத்ததான அட்டை ,கண்தான அட்டை தன் கையில் வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக அவரைக் கேள்வி கேட்டு துளைத்ததுதான் நினைவில் வந்தது.பாவம் அம்மனிதர்.
             படம் முடித்து வீடு திரும்ப,பூஜா தொலைக்காட்சியில் "அன்பே இது நிஜம்தானா?!" என்று பாடத் தொடங்கி இருந்தார்",பலருக்குப் பிடித்த பாடல் எனினும், பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தை கவரும் அளவிலான பாடல் அது இல்லை."நல்ல பாட்டுதான்.ஆனா லார்ஜர் மாஸ்-க்கு இது ஒத்துவராதே மாமி இவோ ஏன் இந்த  பாட்ட எடுத்துருக்கா?!",என வீட்டு வாசலில் இருந்து சொல்லிக்கொண்டே வந்தேன். "தெரில!முதல் ரௌன்ட்ல நல்ல பாட்டு,மன்னவன் வந்தானடி! பாடினா" என்று பதில் அளித்தார் அவர்.அந்த பதிலை முதலில் என்னால் நம்ப முடியவில்லை, காரணம். நான் வியாழன் அன்றே அலுவலக நண்பர்களிடம் "பூஜா மன்னவன் வந்தானடி பாட சான்சஸ் நிறையா இருக்கு" ,என்று கூறிக் கொண்டிருந்தேன்.ஏனெனில் சென்ற முறை அல்காவின் "சிங்கார வேலனே"  ,மக்களைப் பெரிதளவில் சென்றடைந்தது.அதற்கு நிகராகத் தரவேண்டும் என்றால் அது போன்ற பாடலைத் தான் பூஜா பாடுவார் என்ற எண்ணம்."மறைந்திருந்து பார்க்கும்",பாடலை அவர் முதலிலேயே பாடிவிட்டதால் இப்பாடலைப் பாடுவார் என்று ஊகித்தேன்.மேலும்,"மயக்கம் என்ன?" படப் பாடல் கேட்டு பிடிக்காவிடினும் அதனை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் அதிலிருந்து மீள்வதற்காக , ஐபாடில் "மயக்கம் என்ன?! இந்த மௌனம் என்ன?!" பாடலை கேட்டுவிட்டு அதற்கு முன்பிருந்த "மன்னவன் வந்தானடி!" பாடலை வியாழன் மதியம் யதேச்சையாய் கேட்கத்துவங்க,"கண்டிப்பாய் இதைத் தான் பாடுவார் பூஜா!".என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிட்டது.கௌஷிக்கும் இல்லை ஸ்ரீநிவாசும் இல்லை,சத்யாவையும் சந்தோஷையும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று தெரியும்,சாய் பாடுவது பிடித்தாலும் அவரைப் பிடிக்கவில்லை.ஆனால் கண்டிப்பாக பூஜா அல்லது சாய்தான் தேர்வு செய்யப் படுவார்கள் என்று இருவேறு காரணங்களுக்காக தோழியிடம் கூறி இருந்தேன்.கௌஷிக்கை விடுத்து சாய்-யை வைல்ட் கார்ட் ரௌன்டில் தேர்வு செய்தபோதே அதை முடிவும் செய்துவிட்டேன்.விஜய் டிவி வரவர, தன் முந்தைய படங்களில் நடித்தவர்களைத் தன் அடுத்த படத்தில் ஆங்காங்கே சிறுசிறு பாத்திரத்தில் நடிக்கவைக்கும் வெங்கட்பிரபு போல் ஆகிவிட்டது.கௌஷிக்கை அக்கூட்டத்தில் ஒருவராகப் பார்த்ததும் மனசு ஆறவில்லை சார்!.
பாடல்களைப் பாடுபவர்களுக்கும் நிகழ்ச்சியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் முதலில் இந்த trademark பாடல்களைவிட்டு வெளியே வாருங்கள்.இந்த ஸஸ ரிரி உடைய பாடல்கள் எல்லாம் அரைகுறை இசைஞானம் உள்ள பாமரத்தால் மட்டுமே ரசிக்க முடியும். பாமரர்களில் பலர்,பாடல்கள் பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காகவே அதற்குக் கைகளால் அபிநயம் பிடித்துவிட்டு நகர்ந்துவிடுகின்றனர்.
              சனிக்கிழமையும் அலுவலகம் உண்டு ஆனால் பணி மட்டும் வேறு.பணி என்று சொல்லுவதை விட,விலைமதிப்பற்ற தருணம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். சென்னை வரும் நாட்களில் முன்பெல்லாம் நேரம் கிடைக்கையில் அன்னை இல்லம் செல்வதுண்டு.இப்போதுள்ள அலுவலகத்தில் சனிக்கிழமைகளில் அன்னை இல்லம் அல்லது வரதப்பர் சிறுவர்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் அவர்களாகவே எங்களை அனுப்பி வைக்கிறார்கள்.கேட்கவா வேண்டும்?!.வார இறுதியிலோ அல்லது வார நாட்களிலோ கூட அங்கு சென்றுவிடுவது உண்டு.இந்த வாரம் வரதப்பரில்,வெளி உலகம் ஆச்சரியப் படும் அளவிற்கு திறன் உள்ள பிள்ளைகள் அனைவரும்.இந்த வாரம் சந்தித்தது இரண்டு சுஜாதாவையும்,ஒரு ஜோதிகாவையும்,ஒரு ஈஸ்வரனையும்.அப்பிள்ளைகளின் பெயர்கள்.முதலில் பெயர் கேட்கையில்,"அவ பேர் ஜோதிகா கா,அவன் பேர் ஈஸ்வரன் கா,எங்க பேறு சுஜாதா கா",பேருக்கு ஏத்தமாதிரியே "அளகு" பண்ணிட்டே இருக்கும் கா அது" என்றால் ஒரு சுஜாதா.ஈஸ்வரன் தன் பெயருக்கு ஏற்றார் போல் நடனம். ஆடிக்கொண்டே இருந்தான்,"புலி உறுமுது புலி உறுமுது" என்று.மற்றவர்களைத் தவிர்த்து அவன் மட்டும் கடந்த இரு வாரங்களாகப் பழக்கம். 

நான்: daaaai! வேற  ஸ்டெப் மாத்தி ஆடுடா. 

ஈஸ்வரன்: akkaa!நீங்க  அதுகூட ஆட மாட்டிங்க போங்க.
நான்: daaaai!அதெல்லாம் இல்ல கத்துகிட்டேண்டா சின்னவயசுல,ஒரு நாள் என் பக்கத்துல ஆடிட்டு இருந்த பொண்ண என் கூட compare பண்ணி மிஸ் திட்டினாங்களா அது பிடிக்கல.நின்னுட்டேன்.அதுக்கு அப்புறம் ஆடறதும்  இல்ல.
(அதற்குள் வேறு ஒரு பெண்,அக்கா எனக்கு இங்க வெச்ச பேறு சுப்பலக்ஷ்மி ஆனா பாதர் வெச்ச பேருதான் சுஜாதா என்றாள் )
நான்:அப்படியா! எனக்கு சுஜாதா பேறு எவ்ளோ! எவ்ளோ! பிடிக்கும் தெரியுமா?!எனக்கு தெரிஞ்ச சுஜாதானு ஒருத்தர் நல்லா நல்லா எழுதுவாரு! இன்னொருத்தவங்க நல்லா நல்லா பாடுவாங்க! எனக்கு அவங்கள அவ்ளோ அவ்ளோ பிடிக்கும். 
 (இரண்டு சுஜாதாவும் கண்கள் விரிய )
சுஜாதா1:அக்கா அக்கா அந்த ரெண்டு பேரையும் கூட்டிடுவாங்ககா என 
நான்:அச்சோடா!ரெண்டு பேருமே முடியாதேடாமா!? :O
சுஜாதா2: ஏன்கா?!
நான்:அவரு வானத்துக்கு டாடா பை பை போயிருக்காரே.இன்னொருத்தவங்க,அவங்கள எனக்குத் தெரியும் ஆனா என்ன அவங்களுக்குத் தெரியாதே                  
சுஜாதா1:அப்ப அவங்க போட்டோவாவது எடுத்துட்டுவாங்கக்கா.
சுஜாதா2:அப்ப நானும் அவரமாதிரி நல்ல எழுதுவேனா அக்கா 
நான்: ஹ்ம்ம் எடுத்துட்டுவரேன்,.ஏன்!?அவரவிடவே நல்லா எழுதப் போற பாரேன்.
ஜோதிகா:அக்கா அடுத்தவாட்டி வரப்போ எனக்கு இன்னிக்கு போட்ட மாதிரியே hairstyle போட்டுவிடுங்கக்கா.அப்டியே ஒரு பட்டாம்பூச்சி கிளிப்பு வாங்கிட்டுவாங்கக்கா.   
நான்:ஹ்ம்ம்! சரி,ஜோ குட்டிக்கு ஒரு கிளிப் பார்சல்.சரி இன்னிக்கு என்ன படிக்கலாம்?!வெளையாட்டுக் கணக்குப் போடலாமா என்று மரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.
ஐந்து மணிக்கு வீட்டிற்குப் பயணம். வீட்டில் இருப்பவர்கள் ஷாப்பிங்கிற்குத் தயாராகிக் கொண்டிருக்க அப்படியே கிளம்பியாயிற்று.சுஜாதாக்களுக்கு சிறுவர்கள் புத்தகமும்.ஜோதிகாவிற்கு க்ளிப்பும் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
வாரத் தொடக்கத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி முதலில் சரியாக சென்று சேராததால் ட்ராப்டில் சேமிக்கப்பட்டு,  இன்னும் இருக்கிறது.      
  
                    

             
                
       

                              

Sunday, August 28, 2011

பெட்டிகளில் குச்சி தட்டி,
கைச் சில்லரைகள் மெட்டு கட்ட,
தன் பசி மறக்கப் பாடும் குருடனுக்கு,
நம் பதில்...
மௌனங்களும்,
நிராகரிப்பும்,
செவிப்பொறியில் அலை வீசும்,
பொருள் புரியா பாடல் ஒன்றும்.  

Thursday, August 11, 2011

கொஞ்சம் மழை நேரம்..

                                இந்த மழைக்குத்தான் ஏன் இந்த அவசரமோ?! பொறுமையா பெய்யவேண்டியதுதானே.மொத்தமா கொட்டித்தீர்த்துட வேண்டியது.அப்புறம் மொத்தமா காணாம போயிடவேண்டியது.மாலினியின் புலம்பல் இது.வீட்டின் முற்றத்து கட்டையில் அமர்ந்தபடி.இடப்பக்கம் உள்ள அறையில் ரிக்கார்ட் பிளேட் பாடிக்கொண்டிருந்தது.அந்த பிளேட்டில் இருந்த கீறல்களுக்கு அது புலம்பிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மழையின் சலசலப்புகளுக்கு இடையே அது பாடலாகவே கேட்டது.அதை இயக்கிக் கொண்டிருந்த ப்ளேயர் மாலினியின் மாமனார் நாக்பூர் சென்றபோது வாங்கியது.முப்பது வருடங்களுக்குப் பின் அவர் அடிக்கடி உபயோகித்தப் பொருள்களில் அவரது ஊன்றுகோலுடன் இதுவும் ஒன்று.அவரது இறுதிக்காலங்களில் அவரது தோழமை கூட.அவரது இறப்பில் சவஊர்தியுடன் ஊன்றுகோலைக் கட்டியவர்கள் விண்ணுலகில் டெக்னாலஜிக்கு மதிப்பில்லாததால் அப்பொட்டியை அவர் உபயோகித்த அறையிலேயே விட்டுவிட்டனர்.மாலினியின் கணவன் பத்ரி தன் அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அந்த ப்ளேயரைத் தடவிப் பார்த்துக் கொள்வான்.பத்ரியுடன் திருமணமாகி இருபது வருடங்கள் அவ்வீட்டில் இருந்திருப்பினும் மாலினிக்கு தன் மாமனாரிடம் அந்த தந்தைக்கு நிகர் என்ற உணர்வு ஏனோ தோன்றியது இல்லை.அதனால் மற்றவர்கள் போல் அவள் கொடுமைக்காரி என்றில்லை,பேசுவாள்,மரியாதை தருவாள் கேட்ட உதவிகளைப் புரிவாள் ஆனால் அவளைப் பொறுத்தவரை அவர் பத்ரியின் அப்பா,தன் மாமனார்...மாமனார் மட்டுமே.தந்தைக்கு நிகர் இல்லை.ஆனால் நீண்ட நாள் கண்முன்னே ஒருவர் இருந்து திடீரெனக் காணாமற் போனால் ஏற்படும் பதற்றம் கலந்த தவிப்பு அவளுள்ளும் இருந்தது.ஆனால் அதையும் சிறிது நாளைக்கு பிறகு வந்த ஒரிஸ்ஸா புயல் பலி எண்ணிக்கை,தன் பெண்ணை வெளியூர்க் கல்லூரியில் சேர்க்கும் பொறுப்பு,ஜப்பான் சுனாமியெல்லாம் மறக்கச் செய்துவிட்டது.
                           இன்று அந்த ப்ளேயரை ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பது பத்ரிதான்,அவரது ஊன்றுகோல் நாட்களில் வாங்கிய ப்ளேட் அது.எம்.எஸ்.வி-யின் இசையில் பழைய பாடல் ஒன்று "வான் நிலா,நிலா அல்ல!".ப்ளேட்டை எடுக்கும்போது அதில் உள்ள பாடல் பற்றிய விவரங்களைப் பார்ப்பதோடு சரி,ஒவ்வொரு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவன் தந்தை நினைவே வந்துவிடும்.அந்த ஊன்றுகோல் வளைவின் மேல் அவர் பாடலுக்கு ஏற்றாற்ப்போல் தன் ஆள்காட்டி விரல் கொண்டு தட்டுவது.அவன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்தபடி தலையை மெதுவாகப் பாடலுக்கு ஏற்றவாறு அசைப்பது,அனைத்தும் அவன் கண்மூடி அமர்ந்திருக்கும் அந்த விழித்திரை நிழலில்.இந்த நினைவுகள்தான் எத்தனை வலியது,எத்தனை வேகமாகப் பயனிப்பது.அப்படியே அவனது நினைவுகள் தன் தந்தையிலிருந்து ,திருமணம் முடிந்து மாலினியுடன் தான் சென்ற முதல் பயனத்திற்குப் பறந்தது.இதே பாடலைத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என அதனை முனுமுனுத்துக்                 கொண்டிருந்தாள்.காலப்போக்கில் அவளது முனுமுனுப்புகள் குறைந்து புலம்பல்களே அதிகரித்ததாக அவனுக்குத் தோன்றியது.அவளுக்குத் தான் பாடியது நினைவில் உண்டா என்று தெரியவில்லை.ஆனால் இவனின் பசுமரத்தாணி நினைவுகளில் அதுவும் ஒன்று.எவ்வளவு அழகானது நினைவுகள்.இந்த நினைவுகள் என்பது எதற்காக?,தேவையா?தேவையற்றதா? எனத் தெரியாமல் நமக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் நினைவுகள்.நாம் ஏன் கடந்த காலத்தை தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் போல அவ்வப்பொழுது உயிர்க்கச் செய்து அதனுள் அதிலேயே அதனை கரையச் செய்துகொண்டிருக்கிறோம்.ஒருவகையில் இதுவும் இயற்கை மீதான மற்றொரு சுயநலம்தானோ?.சிரித்துக்கொண்டான் தன்னுள்.
                     இன்னும் மழை விட்டபாடில்லை.தன் வளர்ச்சிக்காக மழை நீரில் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முற்றத்துக் கட்டையோரச் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.திருமணத்திற்கு முன்பு அவளது அதன் மீதான பார்வையே வேறு.அதைப் போன்ற செடிகளின் மேல் மழைத்துளி இருப்பது வெறும் அழகு என்ற அளவில் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.இப்போது அந்த பார்வை பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று.அழகு என்ற ஒரு அத்தியாயத்தை மறக்கத் தெரிந்த ஒரு பரிணாம வளர்ச்சி.அதை எண்ண,சிரிக்கத்தான் தோன்றியது அவளுக்கு.நினைவுகள் எந்தத் திரையிலும் எந்த நடிகனாலும் வெளிப்படுத்த இயலாத ஒரு வகை ஹாஸ்யம் மிக்கது.மணவாழ்வின் புதிதில்தான் பத்ரி எவ்வளவு நகைக்கும்படியாகப் பேசுவான்,சற்றே ஒரு ஏளனம் தோன்றும் அதில்.அந்த பத்ரி இப்போது இல்லை.இவன் வேறு.பலர் பயனித்த சாலையில் தன் பயனத்தையும் தொடங்கி அதிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லவும் முடியாமல்.அப்பாதையிலிருந்து திரும்பிவிடவும் முடியாமல் தத்தளிப்பவர்களில் இவனும் ஒருவனாகிவிட்டான்.சுவாரசியமற்றதாய் தோன்றிவிடும் பயனப்பாதையில் ஆங்காங்கே தோன்றும் மலர்களையும் இலைகளையும் கண்டு மகிழ்ச்சிப் பெருமூச்செறியும் ஒரு பயனி.அந்நிலையை உணர்ந்ததால்தான் அதற்குப் பிறகான அவனது அத்தகைய பேச்சுகளில் தன்னால் ஈடுபாடு காட்டமுடியாமல் போனதோ.உன்மையான அவன் இல்லையே!,என்று ஒருவகை ஏக்கம் கலந்த ஈடுபாடற்ற தன்மை.இப்போது அந்த அறையில் அமர்ந்தபடி எதனை எண்ணிக் கொண்டிருப்பான் என்று இவள் மனம் நன்கு உணரும்.அப்பாடல் வழியே அவன் மனதில் ஒடும் நினைவலைகளும்,அதை சார்ந்த அவனது எண்ணங்களும்.ஆனாலும் அவளால் இப்போது இவ்வாறுதான் தன்னை வெளிப்படுத்த இயலுகிறது.உள்ளிருக்கும் வேறோரு தன்னை பொய்ப்பித்துக் கொண்டு.இருளுக்குக் கரும்போர்வைப் போர்த்தும் தேவையற்ற வேடம்.மழை அடுத்து வரும் அந்த குளிர்ந்த காற்று இப்போது.அந்த இலைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன,பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகள்.அந்த ஒசை மட்டும் இச்சமயம் காதுகளுக்கு.                 

Saturday, August 6, 2011

அவரும் அப்படித்தான்....


தனக்குப் பிடித்ததில்தான்
அதன் உலகம் சுற்றுமாம்,
உலகை உணராச் சிறுபிள்ளைகளுக்கு

விருப்பம் வெறுப்பு என
அதற்கு அனைத்தும் அதனுள்ளே

நெருக்கமாய் தான் உணரும்
உள்ளத்துடன்,
சொல்லாமல் தானே
நெருங்கிவிடும் அவ்வுள்ளம்.

கோபம் வந்தால்,
மௌனம் கொள்ளும்
கொஞ்சல் புரிந்தால்,
சிரித்து நகரும்

தான் பிடித்த முயலுக்கு
மூன்று கால் என்றால்,
முயலே அது அல்ல
மூஞ்சூறு என்றிடும்.

சுற்றங்கள் வியந்திடக் கதைகள் பல பேசும்,
அச்சுற்றமே கோபிக்கும்,
கருப்பொருளும் அச்சிசுவாகும்.

தன் பொருள் தமதென்ற,
எண்ணம் கொள்ளும் சில நேரம்.
பிறர் மகிழப் பகிர்ந்தளிக்கும்,
உள்ளம் உண்டு சில நேரம்.

யாரும் தேவை இல்லை என,
உடல்மொழி கூறினாலும்.
எவரும் அல்லாது இயங்காது,
அதன் மனமொழி.

பொதுவரிகள் இவை யாவும்,
சிறுபிள்ளைகளுக்கு மட்டுமல்ல.

அவரும் அப்படித்தான்.

Monday, August 1, 2011

எழுத எண்ணினேன்...

              

                     இதோ எழுத அமர்ந்துவிட்டேன்,பாடல்களை இந்நொடியில் கேட்கத் தோன்றவில்லை ஆனால் இதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு பாடலை நானே இனம் கண்டுகொள்ளாமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்.பார்க்கும் வெளி உலகிற்கு இங்கு நான் எழுதுவது மட்டும்தான் தெரியும்.சுவரில் சாய்ந்தபடி எழுத்துப் பலகையின் மேல் இக்காகிதங்களை வைத்துக் கொண்டு கிறுக்குவது மட்டுமே தெரியும்.எழுத வேண்டும் என்ற மனதிற்கு நானே இட்டுக்கொண்ட கட்டாயத்தில் அமர்ந்து, என்ன எழுதுவது என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இசை பற்றி?!சூழ்நிலை அதற்கேற்றவாறு இல்லை.நடனம் பற்றி எழுதலாமா?!வாழ்வின் ஒரு சில கசப்பான அனுபவங்களை அது நினைவு படுத்துவிடும்,ஆக இங்கு அது பற்றியும் மையிட எண்ணமில்லை.உச்சத்தில் தனியாய்ச் சுழலும் மின் விசிறி என்னை வெறுமை பற்றி எழுதச் சொல்கிறது.வெறுமைகளால் உந்தப்படும் நேரமில்லை இது.மணமான மறுநாள் அந்த மணமகளிடம் தோன்றும் ஒரு ஆனந்த அழகு போல்தான் இந்த அந்தி மாலை தென்றல் காற்று வேளை.இயற்கை அழகைப் பற்றி எழுதலாமா?!,வேண்டாம் என்கிறது நெஞ்சம்..ஒரு சில ரசனைகள் ரசனைகளாக மட்டுமே சிறந்தது,அதற்கு எழுத்துருவோ வேறு எந்த கலை உருவோ எடுபடாது.எடுபட்டாலும் வெளிப்படாது.இந்த எண்ணங்கள்,இதைப் பற்றி எழுதலாமா?! வேண்டாம்,எப்படியும் இறுதியில் அது சுய வர்ணனையாய் முடிந்துவிடும்,என்னவன் தானாய் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை முரசு அறைவித்தாற் போல் ஆகிவிடும்.என் சுயம்,என்னுடன்.பிறரது எண்ணங்களைப் பற்றி?,அது அனுமானங்களே தவிர அவர்களைப் பற்றிய முடிவுரை அல்ல.அன்மையில் பார்த்த ஒரு அழகுக் கதை பற்றி?,சிலாகிக்கலாம்,ஆனால் தற்பொழுது நான் தேடும் நிறைவினை அது தரப் போவதில்லை.இந்த எழுத்து பற்றியே எழுதினால் என்ன?!.வீட்டுச் சுவரில் வெறும் பல்பக் கோடுகளாக முதன் முதலில் அறிமுகமான இந்த எழுத்துக்கள் பற்றி,ம்ஹும்..புன்னகை பற்றி?!,"கே.பி சார் படம் ஜெமினியின் பாத்திரப் படைப்பிற்க்காகவே பார்க்கலாம்".. என்று நான் துவக்கினால்,நீங்கள் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.என் குடும்பம் பற்றி?!அவர்களுக்கே அவர்களைப் பற்றி சரிவரப் புரிவதில்லை.ஆக,நான் புரிந்துகொண்டேன் என்று எழுதினாலும் மறுப்புகளே அதிகம் கிடைக்கும் எனக்கு.நான் செய்த தீயவைகள் பற்றி?!..பொறுமையுடன் படிக்க இங்கு எவரும் இயேசுபிரான் இல்லை.நன்மைகள் பற்றி?!..நானும் இயேசுபிரான் இல்லை.என்னவன் பற்றி?!,அது தேவை இல்லை படிப்பவர்கட்கு.கவிதை என்ற பெயரில் கிறுக்கினேன் என்றால் பலருக்குப் புரிந்திருக்காது எனும் அசட்டு தைரியத்தில்.ஏன்?!,அவருக்கே கூட புரிந்திருக்காது எனும் எண்ணத்தில்.வாழ்க்கை பற்றி?! பிறந்த தேதி மட்டும் அறிந்துகொண்டு பயனத்தைத் தொடங்கி,எப்போது முடியும் என்று தெரியாவிடினும்,என்றேனும் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டு பிறருக்காய்,நமக்காய் என பலருக்காய் ஒரு பிறவி முழுதும் செலவிடும் வாழ்வு பற்றி?!.
                     தந்தையுடன் அடிக்கடி சதுரங்கம் விளையாடுவது உண்டு.அந்த 64 கட்டங்களைப் பார்க்கையில்,நாமே முடிவு செய்துகொண்ட வரையறையாகவும்,அந்த 64-கையும் அடக்கிய பெரிய கட்டம் நமக்காய் அளிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் தோன்றும்.இந்த சிறுகட்டத்தையும் பெருங்கட்டதையும் எங்கோ ஒரு கோட்டில் இனைப்பது "விதி".நமது வரையறைகளை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும்,நம்மால் பெயரிடப்பட்ட விதி.மார்கழி முன்பனியை ரசித்தாயா?!,வசந்தத்தில் ஓர் நாள் என்று ஏதேனும் யோசித்தாயா?!,குழந்தைகள் சிரிப்பினில் நீயும் சிரித்தாயா,சமைப்பதிலும் கலை கண்டாயா?! என்று கேட்கப்போவதில்லை.அந்த கிறுக்குத்தனமெல்லாம் என் ஆழ்மனதோடு.நீ அன்றாடம் செய்யும் செயல் என்ன?,பல் துலக்குவது தொடங்கி,நாளிதழ்களைப் புரட்டுதல்(?),இடையே பேச்சுக்கள்,பரவசங்கள்(இரண்டுமே சிலநேரம் பெயரளவில்).அதற்குப் பின் பிறருக்காய் நாம் உழைக்க ஆரம்பிக்கும் வாழ்வின் துவக்கம்.அனுதினம் இது தொடர்வது.எத்தனை பேர் அதனை மனதாரச் செய்கின்றோம்.முரண் எதிலும்,பிறக்கையில் அது அழ ,பிறர் சிரிக்கும் இவ்வுலகைப் பார்த்துப் பழகி நாளடைவில் அதனோடு ஒத்து தானும் சிரிக்கப் பழகிவிடும் ஒரு சிசுவின் மனநிலை அதன் இறுதி வரைக்கும் அதனைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.ஒருவேளை குழந்தை தானும் சிரித்துக் கொண்டே பிறந்திருந்தால் இந்த முரண் தோன்றி இருக்காதோ?.ஒரு செயல் ஒருவருக்கு ஆத்மார்த்தமாய்ப் படுவது மற்றவருக்கு கடமையாய் சில நேரங்களில்,வெறும் நேரச் செலவாய்ப் படுவது,முரண்.இந்த முரண்களுக்கு பயந்துதான் வாழ்வின் இந்த வரையறைகள் எவ்வாறு மாறுகின்றன?.உனக்கு முக்கியமான வேலை,இதை உனக்காகச் செய்யவேண்டும் அல்லது அதில் உனக்கு உதவ வேண்டும் காரணம் அது என் கடமை அல்லது அதைப் பொருத்துதான் நான் உன்னிடம் நற்பெயர் பெற முடியும் அல்லது உன் மனதில் எனக்கெனத் தனி இடம் போட்டு அமர்ந்துகொள்ளமுடியும் அல்லது அச்செயலைத் தவிர்ப்பதால் தோன்றும் பல பிரச்சனைகளில்/எதிர்ப்புகளில் இருந்து விடுபட முடியும்,ஆக இதோ செய்து முடித்துவிட்டேன்.இந்த நான்கு மதிப்பற்ற வரையறைகள்.வாழ்வில் அமைதி தேடுகிறேன் என்று அமைதி என்பதன் பொருள் மறந்து நாம் தற்காலிகமாய்த் தேடுவன.இதைப் பற்றி எழுதுகிறேன்,ஆனால் நான் கானும் பலர் (பலர் என்ன?!,என்னையும் சேர்த்து முக்கால்வாசி உலகம்) இப்படித்தான் இயங்குகிறது ,ஆக குறியற்று சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மண்ணில் புதைவதுபோல் புதையுண்டு விடுகின்றன வார்த்தைகள்.ஒவ்வொன்றுக்கும் நாம் அர்த்தம் தேடுவதுபோல் பலரும் தேடுவரோ?!.தேடினால் இந்த முரண் ஒழிந்துவிடுமா?!.சதுரங்கத்து பெரிய கட்டத்தினுள் 64-கின் பொருள் உணர்ந்து,தன்னை ஒரு கட்டத்தினுள் சுருக்கிக்கொள்ளாமல்,தனக்கு உகந்தது எது என்று உணர்ந்து அதனுள் பறப்பதுவும்,மலர்வதுவும்,போரிடுவதும்,சிரிப்பதுவும்,கதைப்பதுவும்,"வாழ்வதுமான" அந்த அமைதி.சதுரங்கம்தான்,வாழ்க்கை என்பது,சிக்கலானது அல்ல,பல நிறங்கள் கொண்ட சதுரங்கம்.ஒன்று நீ,மற்றொன்று நீயற்றது.எறியப்பட்டுவிட்டன குண்டுகள்,அதை உரியவர் கையால் எடுக்கும் வரை மண்ணில் புதையூண்டவையே.

Tuesday, July 26, 2011

எப்பொழுதும் உன் கற்பனைகள்..


இரவுகள் இங்கு உண்டு
கரங்களை குவித்தபடி,
அதனை இதழ்மேல் சாய்த்தபடி,
நிலா முற்றத்தில் நடந்தபடி,
வான் தாரகைகளை நோக்கி,
அதை எண்ணுவதாய் நடித்தபடி,
முழு நிலவு அதனில்,
பிரிந்திருக்கும் உந்தன் 
முகத்தினைத் தேடிய
இரவுகள் இங்கு உண்டு  

விடியல்கள் இங்கு உண்டு
நீராடி நல்லுடை சூடி,
உன் விழிப்புக்காய் உன் அருகே அமர்ந்திருக்க,
மார்கழியாய் உரைந்துபோன கன்னங்களில்,
ஆடித்தென்றலாய் உன் விரல் தீண்ட,
அதிகாலைக் கனவுகள்,
நாணத்தில் முடிந்த  
விடியல்கள் இங்கு உண்டு.

காலைப் பொழுதுகள் இங்கு உண்டு
அளவாய் சமைத்துவிட்டு,
இடையே சிறு சண்டையிட்டு,
கொஞ்சலிட்டு,
வம்பும் செய்து,
இறுதியில் அவசரமாய் அலுவலகம் கிளம்பும்,
தாயிலும் தந்தையிலும்,
உன்னையும் என்னையும் தேடிய,
காலைப் பொழுதுகள் இங்கு உண்டு

பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு
புத்தகத்தின் மெலிதான பக்கங்கள் சேருமிடம்,
வரிகளைப் படித்தபடி,
எனையும் அறியாது,
மையற்ற விரல்கொண்டு,
உன் பெயரினை எழுதச் சென்ற
பகற்ப் பொழுதுகள் இங்கு உண்டு 

நன்மாலைகள் இங்கு உண்டு
இசையொன்றே சர்வமாய் உணர்ந்திருக்கும் கணத்தில்,
ஏதோ ஒரு பாடலை,
மனதில் எண்ணி முணுமுணுக்க,
காதலும் இருக்காது அதில்,
காமமும் இருக்காது,
இருப்பினும்,
வரியடுத்து வரும் உயிரொத்த இசைத்துளியில்
உன் அருகாமையைத் தேடிய
நன்மாலைகள் இங்கு உண்டு.

 

Monday, July 25, 2011

மதப்போரால் ஈனமான
மண்ணின் சிசுவொன்று,
மரத்திடா  வலிகள்,
அதன் விழியோரம்,
கசிவது கண்ணீர் அல்ல,
கோரிக்கை..

மறுபிறப்பற்ற மதத்தில் பிறந்த அவன்,
இந்திய மதங்களில் சாத்தியம் உண்டென்றால்,
இன்னொரு மகாத்மாவை..
பிறந்திடச் செய் என..

Sunday, July 24, 2011

           "நீங்க வாழ்க்கைல இது வரைக்கும் உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க?!".இதைத் தான் கேட்டேன்,அவரிடம்.உறவினர் வீட்டு வைபவம் ஒன்றிற்க்கு நானும் என் தந்தையும் சென்றிருக்கையில்தான் இது நிகழ்ந்தது.சிறு பிள்ளை ஒருவனின் பூனூல் வைபவம்.நெருங்கிய உறவினர்தான்,ஆனால் காலமாற்றத்திற்கேற்ப,ஆசாரம்,சூழல் என்னும் பெயரால் நாங்கள் அவர்களிடமிருந்து தூரமாகிவிட்டோம்.அந்த சிறுவன் எப்போது பிறந்தான் என்று தெரியாத அளவு தூரம்.குடும்பத் தலைவர் என்ற மட்டில் உறவுகளை எங்களுக்காய் வலுப்படுத்தித் தருவது அப்பாவின் பொறுப்பு என்று அவர் கருதியதால்,என்னையும் அவருடன் அங்கு அழைத்துச் சென்றிருந்தார்.நன்றாகத்தான் இருந்தது,இதுவரை நான் பார்த்தே இராத தூரத்து உறவினர்களும்,இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையினால் பார்க்க முடிந்திராத சில நெருங்கிய உறவினர்கள் என அனைவரையும் அங்கு சந்திக்க முடிந்தது.வயதான முதியவர்கள் முதல் நேற்று கல்லூரிப் படிப்பை முடித்த ஒருவர் என அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.இதற்க்கிடையே விழா வீட்டார்க்கு வேலைகள் இருந்ததால் அவர்களுக்கு உதவுவதற்க்கு சென்றுவிட்டேன்.ஒரு அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது,அப்பா நான் இதுவரை பார்த்தேயிராத யாரோ ஒரு உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.உன் தாத்தாவின் அத்தான் பிள்ளை என்று அப்பா கூறினார்.புன்னகைத்துவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.
அவர்,"என்னடா பண்றா உன் பொன்னு?!"
நானே பதிலளித்தேன், பயோடெக் முடிச்சுருக்கேன்,இப்பொதைக்கு ஜாப் கிடைச்சுருக்கு,கால் லெட்டர்க்கு காத்துண்டு இருக்கேன், ஃபர்தர் படிக்கனும்.
அவர் அப்பாவிடம்,"எப்போ பையன் பாக்கபோறே?!கைவசம் ஜாதகம் இருக்கு ஃபர்ஸ்ட் க்லாஸ் பையன் நாலஞ்சு பேர் இருக்கா?!,பொன்னும் பாந்தமா இருக்கா,முடிக்சுடலாம் என்ன சொல்லறே?!,
அப்பா,"அவ இஷ்டத்துக்கு விட்டுட்டோம்,படிக்கனும்னு ஆசைப்படறா!",என்றார்.
அவர்,"இல்லடா!நான் என்ன சொல்லறேன்னா?!"
நான் இடையே குறுக்கிட்டு,"இல்ல uncle நான் ஃபர்தர் ஸ்டடிஸ் பண்றதாதான் இருக்கேன்,ம்யுஸிக் எனக்கு இன்டிரஸ்ட் ஆக அதுல எதாவது செய்யனும்,வேற எதுவும் இப்போதைக்கு மைண்ட்ல இல்ல".
நான் ஏன் என்னைப் பற்றி அவரிடம் கூறினேன் என்று மனதிற்க்குள் என்னையே வைதுகொண்டேன்.
பிறகு அவரிடம் எனக்குத் தெரிந்தே இராத அவரது குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்தது அப்பாவின் அக்கா முறை என்று ஒருவரை சந்தித்தோம்.'என்னடா பொன்னு புடவைலாம் கட்டிண்டு வளர்ந்துட்டா?! இதுக்கு காது குத்தச்சே பார்த்தது",என்று கூறிக்கொண்டிருந்தார்.அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு 12த்து படிக்கவிருக்கும் அவர்களது பிள்ளை பற்றிய அவரது அங்கலாய்ப்புகளையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.இடையே அவர்,"கல்யான சாப்பாடு எப்படா போடபோறே உன் அக்காக்கு என்று என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு கேட்டார்.அப்பாவிற்கே உண்டான அந்த ஆர்வம் பொங்கும் சமயங்களில் அதிகப்படியாய் பேசும் இயல்பு அங்கே மீண்டும் உதித்தது "அப்படி ஏதாவதுனா,கண்டிப்பா உங்களுக்குத்தான் முதல் பத்திரிக்கை சந்தேகமே வேண்டாம்",என்று விஜய் பாணியில்,தானே பல வருடங்களுக்கு ஒருமுறை பார்க்கும் அந்த தூரத்து அக்காவிடம் ,எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்து போட்டுவிட்டு நகர்ந்தார்.
"கடவுளே!நான் எங்க போயி முட்டிக்கறது!",என்று மனதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு அவருக்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.
அடுத்து,பாட்டி வழி உறவு என்று ஒருவரை சந்திக்க நேர்ந்தது,அந்தக் குட்டிச் சிறுவனுக்கு ஒன்று விட்ட பெரியப்பா என்னும் பெயரில் அந்த மண்டபத்தையே ஒரு வழி செய்துகொண்டிருந்தார்.
"ஏன்னடா கோவிந்தா?! பொன்னு நன்னா சமைக்கறாளா,என்ன பாக்கலாமா சொல்லு?!காலாகாலத்துல இதெல்லாம் செஞ்சுடனும்",என்று. ஒருபடி மேலே சென்று என் ஜாதக விபரம் என அனைத்தையும் கேட்கத் துவங்கிவிட்டார்.எழுந்த எரிச்சலில் "நீங்க இதுவரைக்கும் வாழ்க்கைல உருப்படியா என்ன சார் செஞ்சுருக்கீங்க!".என்றேன்.சற்றும் அவர் அதை எதிர்ப்பார்க்கவில்லையோ தெரியவில்லை.
அப்பா உடனே,"ஜில்லு!,அங்க போ,அத்தை ஹெல்புக்கு கூப்பிடறா பாரு",என்று நகர்த்திவிட்டார்.நானும் நகர்ந்துவிட்டேன் ,அப்பா அவரிடம் என் ஜாதகம் பற்றிய விவரங்களை தந்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்.
"என்னடா! உன் பொன்னு இப்படி பேசறா?!" என்று கூறியது என் காதில் மெலியதாய் வந்து சேர்ந்தது.
வைபவம் முடிந்து விடைபெற்றுக் கொண்டு ரயிலிற்க்காக காத்திருந்தோம்."என்ன பாத்துடலாமா?!" என்றார் அப்பா என்னை வெறுப்பேற்றுவதற்க்காகவே.
ஏற்கனவே கோபத்தில் இருந்த நானோ "பா!சொல்லிட்டேன் கேட்டுக்கோ,இனிமே அந்த கேஸையெல்லாம் எங்கையாவது பார்த்தேன்னா உன்னோட சேர்த்து இந்த தண்டவாளத்துல தள்ளிவிட்டுடுவேன்".
தெரியாம கேட்கறேன்,சீரியஸ்லி!இவங்களலெல்லாம் வாழ்க்கைல என்ன சாதிச்சுட்டாங்கன்னு இந்த கல்யாணம்,குடும்பம்,குழந்தைங்கனு அதே லைஃப்?!.அப்பா அதற்கு பதில் அளிக்கவில்லை.பேச்சும் வேறு ஏதோ ஒன்றைப் பற்றி மாறிவிட்டது.
ஆனால்,கல்லூரிக் சென்றுவிட்டு சான்றிதழ்கள் சிலவற்றை பெற்றுக் கொண்டு வருகையில். ஒருவர் பெண் என்னைக் கேட்ட கேள்வி,வைத்தீஸ்வரன் கோவிலில் இறங்க வேண்டியவர் அந்த இடம் வரும் வரை என் வாழ்வு திருமணம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.எப்படி இருந்தாலும் நீயும் அந்த வட்டத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பது போன்ற அவரது ஏளனமான பார்வை வேறு.சென்ற வாரம் வீட்டிற்க்கு வந்திருந்த வேறு ஒரு உறவினரின் அதே போன்ற பேச்சு என மீண்டும் அந்த கேள்வி மனதுள் எழுந்தது.நமது வாழ்வை நாம் முடிவு செய்யாது நமது பெற்றோர் முடிவு செய்யாது யாரோ ஒருவர் அமர்ந்து முடிவு செய்து கொண்டிருக்கிறாரே என்ன இது என்று?!.
      ஒருவேளை திருமணம்,பிள்ளைகள் என்பதுதான் வாழ்வின் தலையாய குறிக்கோளோ?.அப்படியாயின்,"நான் டாக்டராக வேண்டும்,நான் பொறியியல் வல்லுனர் ஆக வேண்டும்",என்பது போன்று அதுவும் ஒன்று அவ்வளவுதானே.ஆனால் சிறு மாற்றம் இது பலரால் அவர்களே விரும்பியும் விரும்பாமலும் அடையப்படும் குறிக்கோள்.உன் குறிக்கோள் அதுவாயின் நான் அதை எதுவும் தடுக்கவில்லை.மாற்றிக் கொள்ளவும் சொல்லவில்லை.ஆனால் எனைப் பொருத்தவரை அது ஒரே சக்கரத்தில் உழல்வது போன்று,அபத்தம்.என் குறிக்கோள் வேறு,அதே சக்கரத்தில் தானும் சுழல்வதாயின்,தன் ஆன்மா,தன் வாழ்வு என்று ஒன்றிர்க்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.ஏதோ ஒரு ஆன்மாவின் குறிக்கோளை நீ சாதிக்க முற்படுகிறாய்,அவ்வளவே.தான் பிறந்ததிலிருந்து வாழ்வில் என்ன செய்தோம் என்று யோசித்தால்
1.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,பள்ளி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.
2.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,கல்லூரி சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.    
3.பல் தேய்த்து,குளித்து,உண்டுவிட்டு,வேலைக்குச் சென்றிருப்போம்,இரவில் உறங்கியிருப்போம்.
4.நாம் ரேஷன் கார்டில் ஒரு பெயராக இருந்தது மாறி நாம் ஒரு ரேஷன் கார்டில் தலைவர்/தலைவி என்று முன்மொழியப் பட்டிருப்போம்.
இதையேதான் 6000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.60000 சம்பளத்திற்கு வேலை செய்பவனும் செய்கிறான்.இருவருக்கும் என்ன வேறுபாடு,டி.என்.ஏ-க்களைத்தவிர.
நட்பு ஒருத்தியின் வலைப்பூவில் அவள் அன்மையில் பதிவிட்ட ஒன்றைப் படித்தேன் நேற்று,சிறு சிறு ஆசைகள்,எண்ணங்கள் என்றுதான் அதைப் படிக்கும்ச்ச்ச் எவருக்கும் முதற்கண் தோன்றும்.ஆனால் அப்படித் எண்ணும் எவருக்கேனும் அவ்வாறு சிந்திக்கத் தோன்றி இருக்குமா?!,என்பது சந்தேகமே.என் இந்த எண்ணம் பற்றி சொன்னபொழுது தோழி ஒருத்தி நீ சாதிக்க நினைப்பதை அவர்கள் சொல்வது போல் மணம் செய்துகொண்டபின் செய்யலாமே என்றால்.
ஆம் செய்யலாம்தான் ஆனால்,அவர்களதும் நமதும் எண்ணம் ஒத்ததாக இருக்கும் அல்லது அவர்களால் அதை அனுமதிக்க முடியும் எனும்பட்சத்தில் மட்டுமே,அது சாத்தியம்.
ஒரு ச்சாரிட்டி துவங்க சிறுவயதிலிருந்து ஆசை,பெயர் கூட முடிவு செய்துவிட்டேன் ஆறு மாதங்களுக்கு முன்பு,"கரு அல்லது கருவறை"என்று.ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எண்ணம்,என சிறு சிறு விருப்பங்கள்.இதெல்லாம் நிறைவேற்ற முடியுமா?!ஒரு வட்டத்தினுள் தானும் சுழலத்துவங்கியபின்.நான் அன்று கோபப்பட்டு அந்த பெரியவரிடம் அவ்வாறு கேட்டதாகத்தான் அவரும் எண்ணி இருப்பார்,அது அவர்களது இயல்பே.ஆனால் அவராய் என்றோ தனக்குக்தானே  கேட்டுக் கொண்டிருக்கவேண்டிய கேள்விகளையே நான் கேட்டென்.முதலில் வாழ்வதற்கான அர்த்தத்தை தேடு அதில்தான் உனது இயல்பும் உள்ளது உனது இயல்பு வாழ்க்கையும் உள்ளது,திருமணம்தான் உன் வாழ்வின் அர்த்தமென்றால் அதை செய் ஆனால் அதை உன் போல் அதே எண்ணம் கொண்டவருடன் மட்டுமே செய்.நம் எண்ணப்படி நாம் வாழ வேண்டும் அதை நாம் மட்டுமே வாழ வேண்டும்,பிறர் மீது தினித்தல் தவறு என்று அனைவ்ரும் தாமாக உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.சுதந்திரம் என்ற ஒரு வார்த்தை அதில்தான் எங்கோ உள்ளது.லைஃப்னா,சும்மா இல்ல சார்!. 

Wednesday, July 20, 2011

கன்னத்தில் முத்தமிட்டா(ள்)ல், அமுதமாய்!

                                         பள்ளி காலத்திலிருந்தே இருக்கும் ஒரு பழக்கம்,எங்கு சென்றாலும் பையில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை உடன் எடுத்துச்செல்வது.ஏன் என்று தெரிந்ததில்லை, பாரதியின் மீதான காதலா?! அல்லது அந்த எழுத்தில் உள்ள ஒரு வேட்கையா,முதன் முதலில் அப்பா எனக்கு அதை வாங்கித்தந்தது உள்ளூரில் நடந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்க்காக, பாரதியார் பாடல்களைப் பாடுவதுதான் போட்டியே,எங்கள் பள்ளியிலிருந்து ஐவர் கலந்து கொண்டோம் நான் பாடிய பாடல்கள் மூன்று,காணி நிலம் வேண்டும்,முரசு பாடல் மற்றும் மனதில் உறுதி வேண்டும்,பரிசு கிடைக்கவே,அப்படி நாம் என்னதான் பாடினோம் பரிசளித்துவிட்டார்கள் என சிறுவயதில் தோன்றுமே நம்மை நாம் செய்யும் ஏதேனும் ஒரு செயலே வெற்றி கொள்ளச் செய்து ஊக்கப்படுத்தினால் ஏற்படும் தனி ஈர்ப்பு,அது அன்று தொடங்கியது அவ்வரிகள் மீதான கவனம்,கலத்தல் என அனைத்தும்.வீட்டுமாடிப்படியில் அமர்ந்து அப்பக்கங்களைப் புரட்டிய ஞாயிறு மதியங்கள் பல.அதிலிருந்து அதில் வரும் வரிகளை எங்கு எதில் நோக்கினாலும் அதற்கு தனி முக்கியத்துவம் அளிக்கத்தோன்றும்.அப்படித் தோன்றியதுதான் கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் வரியின் மீதான ஈர்ப்பும், அப்படத்தின் சுவரொட்டிகளை அது வெளியான புதிதில் எங்கள் ஊர் தியேட்டர்களில் கண்டபோதும்.இளமைப் பருவத்தின் துவக்க காலம் அது என்று உணர முடியாததான சிறுபிள்ளைப் பருவம் அப்பொழுது,ஆக அது மாதவனின் படமாகவும் எனக்குத் தோன்றவில்லை.சிம்ரனைப் பிடிக்கும் அதில் அவர் மூன்று குழந்தைக்கு தாயாக நடிக்கிறார் என்று அச்சமயம் வீட்டிற்க்கு வந்திருந்த சித்தி கூறிக்கொண்டிருந்தார்.கீர்த்தனா,ஆனந்த விகடனில் தன் அப்பா அம்மாவுடன் ஃபோட்டோவிற்க்கு போஸ் தந்த அதே கீர்த்தனா.இதையெல்லாம் கவனித்துவிட்டுதான் மேலே "மெட்ராஸ் டாக்கீஸ்" என்ற பெயரைப் பார்த்தேன்.கண்கள் மீண்டும் அந்த படத்தின் பெயரைப் பார்த்தது.மனதிற்க்குள் "பாரதி!" என்ற வார்த்தை மட்டும் எங்கோ பாதாளத்தின் அடியிலிருந்து பல பாதைகள் கடந்து வரும் குரல் போல ஒலித்துக்கொண்டிருந்தது.ஆனால் பல காரணங்களால் படத்தை இவர்கள் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக"  திரையிட்டபோதுதான் காணமுடிந்தது.சில நேரங்களில் பாடல்கள் மட்டும்தான் மனதை வருடும்,வலிக்கச்செய்திடும்,மனதிற்கு நெருக்கமானதாகச்செய்திடும்,சிரிக்கச்செய்திடும்,புரட்சி கொள்ளச்செய்திடும்.பத்து நிமிடப் பாடல்கள் செய்வதைப் பல நேரங்களில் இரண்டரை மணிநேரப் படங்கள் செய்வதுண்டு.அத்தகைய படங்களில் ஒன்றாகத்தான் ஆனது இந்த கன்னத்தில் முத்தமிட்டாலும்.பார்த்த முதல் தடவைமுதல்.பார்த்த முதல் கனமே ஒட்டிக்கொண்ட ஒரு அவா "இந்த அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் அப்புறம் இன்னும் பல படங்கள்,இதைப் பற்றி மட்டும் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க வேண்டும்"என்று.வருடங்கள் கடந்து அதற்குப் பிறகு பார்த்து மனதிற்கு மிகவும் நெருக்கமாகிபோன சில படங்களைப் பற்றி எழுதினாலும்.இந்த இரண்டு படங்களைப் பற்றி எழுத நினைக்கும் பொழுது மட்டும் வார்த்தைகள் அடுத்து அடுத்து கரைதொட்டுச் செல்லும் அலைபோலத் தொட்டுவிட்டு மறைந்துவிடும்.இப்படங்களில் எல்லாம் அதைப் பற்றி எழுதுவதையும் தாண்டி என்னமோ ஒன்னு இருக்கு சார்!".அதற்குப் பிறகு மற்றதைப் போல இப்படத்தையும் பலமுறைப் பார்த்தாகிவிட்டது.அன்று இருந்த அதே நிலையே இன்றும்.         
  

                            பாரதியின் கண்ணம்மா போல் அவள்-ஷாமா வீரமும் காதலும் கருனையும் எல்லையற்றதாயும், அளவற்றதாயும் உள்ளவள்.பட் பட் என்று வெடிக்கும் எழுத்தாளர் திருச்செல்வன்.மிகவும் உணர்ச்சிவசப்படும் பெண்ணாக தாயாக இந்திரா,புரட்சி புரட்சி என்று வெடிக்கும் தம்பிக்கு தமக்கையாக "ஊருடன் ஒத்து வாழ்" கொள்கையைக் கடைபிடிக்கும் ஒருத்தி,கிராம நகர வாழ்க்கைக்கேற்ப தன் வாழ்விலும் உருவிலும் தோன்றும் மாற்றத்தை அழகாய் வெளிப்படுத்தும் தாத்தா.சுற்றி நிகழும் அவலங்களை கண்டு அந்நேரம் மட்டும் மனதிற்குள்,ஒரு மாற்றத்திற்க்காக ஏங்கும் ஒரு குடிமகனாக,டாக்டர்.கடவுள் யாரென்று தெரியும் ஆனால் அவனைப் பற்றிப் படித்ததில்லை,தெரிந்ததைவைத்துக் கொண்டு அவனைத் தேடுகிறேன் என்னும் மனநிலை கொண்ட குழந்தை அமுதா,நிஜமாகவே அமுதம்.படம் நெடுக நறுக்கென்ற வசனங்களில் இயல்பாக ஆனால் சுருக்கென்று தோன்றும் மணிரத்னம் படத்திற்கே உரிய அழகு,சுஜாதாவைத் தவிர யாரால் தரமுடியும்.வசன உச்சரிப்பிற்க்கு தகுந்தவாறு அந்த பின்னனி இசை.இளையராஜா இசை மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் அந்த ஆன்மாவினை உணர முடியும் என்று உணரவைத்த படங்களில் இதுவும் ஒன்று.ஆன்மாவைத் தேடுகிறாயா?!அதோ,அந்த குழல் ஓசைதான் அதன் தொடக்கம்.இருளும் வெண்மையும்,வெறுமையும் முழுமையும் போல்தான் இப்படத்தில் பல இடங்களில் தோன்றும் குழலும் அதைத் தொடர்ந்து வரும் கீபோர்டும்.அத்தகைய ஆன்மாவிற்கு உருவம் அந்த கேமிரா எனலாம்.போரும் பேசுகிறது,புத்தமும் பேசுகிறது.
 
                     தாய் என்பவள் யார்?,அனைத்திலும் முதிர்ச்சி மிக்கவள் இல்லை அவள்,தியாக உள்ளத்தின் மொத்த உருவம் இல்லை அவள்.அன்னை இல்லை அவள்,அம்மா!.திருமணம் குடும்பம் என்று தான் கண்ட சுழலில் தானே முக்கியப் பாத்திரமாகிவிடும் ஒருத்தி.தன் சரிபாதியை விட தன் பிள்ளைகளிடமே அதிகம் அன்னியோனியத்தை உணருபவள்.அதுவும் பெண் பிள்ளையாயின் அவளே இவளுக்கு தோழி, ஆதி முதல் அந்தரங்கம் வரை அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் தோழி,ஒரு காலத்தில் தானும் மகளாக இருந்தவள்,அந்த பிஞ்சு மனம் இறுதி வரை மாறாதவள்.
                  
தந்தை மகள் உறவு?!,அதன் அழகு,வெளிப்பாடு,புனிதம் அனைத்தையும் உணர்ந்துவருபவள் நான்,அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம்,தந்தைக்கே உண்டான அந்த முதிர்ச்சி,தாயன்பை விட எதோ ஒரு விதத்தில் பெரியதாகவே தோன்றும் அந்த பாசம்.இவற்றை தன் வரிகளால் பக்கங்களில் அழகாய் அளந்துவிடும் வைரமுத்துவின் பேனா ,அதைத் தன் குரல்களில் அளந்துவிடும் சின்மயீயும்,ஜெயச்சந்திரனும்;என்ன ஒரு உணர்வு அந்த இரு குரல்களிலும்,அதைக்கேட்டுக்கொண்டு கண் மூடி ஒரு ஓரமாய் அமர்ந்துவிடத்தோன்றும்,தமிழ் சினிமா கண்டெடுத்த சிறந்த குரல்களில் சின்மயீயினதும் ஒன்று எனலாம்.கதைக்கரு வேறாயினும் காதலை மேலோட்டமாகத் தொட்டு செல்கிறது,பறவைகள் பறக்கும்பொழுது அந்த சிறகுகள் அதன் உடல் தொட,தோன்றும் ஒரு மென்மை போல,நான்-எண்ணம் நீ-உருவம் என்பது போன்ற மென்மை.சட்டெனத் தான் நனைந்து விடுகிறது நெஞ்சம் அந்த மென்மையில்.இது அனைத்தையும் தாண்டி மண்ணுடன் மனம் கொண்ட உறவைப் பேசும் இடங்களில் மனமும் காணும் விழியும் இனைந்து இளகிவிடும்.வெள்ளைப் பூக்கள் பாடல் ஒரு அமைதி உணர்வையும்,என்றேனும் ஒரு நாள் அவ்வரிகள் மெய்யாகாதா?! என்ற ஏக்கத்தையும் விட்டுச்செல்லும் கேட்கும் ஒவ்வொரு முறையும்,நூற்றாண்டின் மிகச் சிறந்த வரிகளுள் இப்பாடல் வரிகளும் ஒன்று எனலாம் .இறுதிகாட்சி உடல் என்றால் பின்னணி இசை அதற்கு உயிர்,கலங்கவைத்துவிடும்.

                    

              ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றுவது என்றால் என்ன?!,எண்ணிப் பார்த்ததுண்டு.ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல்தான்,முதல் சந்திப்பில் அவரிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்று,மீண்டும் பல முறைச் சந்தித்தாலும் அத்தருனத்தில் எதோ ஒன்றைப் புதிதாய் கற்றுணர்ந்து வருவது போன்று.இதோ இந்தப் படமும் அவ்வாறுதான்,ஒவ்வொரு முறையும் பலதை உணர்த்துகிறது,கடையக் கடையக் கிடைத்த அமுதம் போல்.

                              
                                கண்ணத்தில் முத்தமிட்டால்-கண்ணம்மா
                               அமுதம் சுரக்குதடி! 

Friday, July 15, 2011

செவிவழி பரவும் சுவாசம் நீ,
நாளம் நடமிடும்
செவ்வணு நீ,
கருவிழிகொள்ளும் நாணம் நீ,
மூடிய விழி மறை பொருளும் நீ,
விரல்கள் வரையும் அலைகள் நீ,
இதயம் ஜனிக்கும் இருள் இம்சையும் நீ,
பெண் அவள் சொல்லாத சொற்கள் நீ,
ஆண் அவன் மறைத்த ஏக்கங்கள் நீ,
மழலை மனதின் புரிதல்கள் நீ ,
அண்டம் பேசும் அனைத்தும் நீ,

புலப்படாது உணர்ந்ததில் தலையாயது நீ, 
நீ..
இசை..

Sunday, July 3, 2011

பரிபூரணங்களில்தான்,
குறை உள்ளவளாகிறேன்.. 
அங்குதான் எனது எல்லைகள்,
தீர்மானிக்கப் படுகிறது. 

Monday, June 20, 2011

                                     இசை,புத்தகம்,Interior designing,ஒவியம்,அவ்வப்பொழுது சினிமா,எழுத்து,சமையல்,எப்பொழுதாவது வெட்டி சிந்தனைகள் என அதே போல்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது,நேரமும் காலமும்,கூடுதலாக நண்பரகளுடன் தொலைபேசியும்.நான்கு வருடங்களுக்கு முன் கல்லூரியில் சேர்ந்தபொழுது எப்படி இருந்ததோ?!,அவ்வாறே.பொன்னியின் செல்வனை மீண்டும் படித்து முடித்தாயிற்று.கல்கியின் படைப்புகளிலேயே மிகவும் சுமாரானதாக நான் கருதும் மகுடபதியையும்.The monk who sold his ferrari-யின் தமிழ் பதிப்பையும் சேர்த்து முடித்தாயிற்று.பொழுது போக இளையராஜாவின் இசைகளை பாடல்களிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.முன்பெல்லாம் தொலைபேசி என்றால் "இந்த தூத்துக்குடி பக்கம் திருநெல்வேலி பக்கம் இருக்கும்" என்றிடுவேன்,இப்போதோ?! ப்ராட்பேண்டின் அதிவேக இணைய இனைப்பு அருளால் நண்பர்களைப் பிடிக்க இயலாததால் அதற்கு உதவும் வொடஃபொனும்,BSNL தொலைபேசியும் புதிய நண்பர்களாகிவிட்டார்கள்.BSNL-ற்கு அதிக வருமானம் ஈட்டித் தந்ததற்க்காக அனேகமாக இம்மாத இறுதியில் எங்கள் வீட்டிற்க்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.நண்பர்களுடன் குற்றாலம் அல்லது திற்பரப்பு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தேன்."நீ எங்க கூட இருக்கப்போறதே இன்னும் கொஞ்சநாள்தான்,அப்புறம் வேலை கீலைனு வந்துட்டா எங்க கூட இருக்க முடியாது" என்று அம்மா எதற்கெடுத்தாலும் ஒரே வசனத்தைக் கூற இப்போதைக்கு எங்கும் செல்வதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்.இந்த sentiment எங்கே?!எப்பொழுது?! பிறந்ததோ.இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தேன் இந்த ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சிறார் கூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா?! அவர்களைச் சேர்ந்தவர்கள் போல,ஒரு சிறுமி,எண்ணெய் தடவாத தலை,வலைந்த சிறு கம்பியாலான ஒரு மூக்குத்தி அணிந்திருந்தால்.என்னைக் கடந்து செல்லுகையில் திரும்பிப் பார்த்து அழகாக சிரித்துவிட்டுச் சென்றாள்,சட்டென்று அது ஏனோ மனதில் பதிந்துவிட அதை பென்சிலால் கிறுக்கியும் ஆகிவிட்டது.அதற்க்கேற்ற வண்ணம் கொடுப்பதற்குள் தம்பியுடன் சிறு சண்டை அதனால் கோபத்தில் அதனை அப்படியே விட்டுவிட்டேன்.அந்த சிறு பெண்ணின் சிரிப்பு மட்டும் மனதில் இப்பொழுது கூட இருக்கிறது சார்.
                   
            சென்ற வாரம் "ஆரண்யகாண்டம்" பார்த்து விட்டு தலைப்பு வைத்தது படத்திற்கா அல்லது தமிழ் சினிமா சென்றுள்ள அடுத்த கட்டத்திற்க்கா?!என்று வியந்து கொண்டிருந்தது இந்த வாரம் அவன்-இவன் பார்த்ததோடு சென்றுவிட்டது.பக்கத்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த கோ-வையே இன்னும் ஒரு முறை பார்த்திருக்கலாமோ? என்று எண்ணும்படி ஆகிவிட்டது.கதையே இல்லாமல் வெறும் கதாப்பாத்திரங்களையே கடைசி வரைக் காண்பித்து ஏமாற்றிவிட்டார்கள்.மறக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்,படம் பார்த்ததையும்,படத்தையும்.
         அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால்,புன்னகை,kuch kuch hota hai,one flew over the cuckoo's nest  என்று கையில் கிடைத்த படங்களை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அன்பே சிவம்,கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் படமே இல்லை சார்,அதையும் தாண்டி,திரைப்படம் என்ற சிறுவார்த்தையில் அதனை எல்லாம் சுருக்கிவிட முடியாது.புன்னகை ஜெமினியின் பாத்திரப்படைப்புக்காகவே பார்க்கலாம்.
          வெரைட்டி ஊத்தப்பம் செய்துபார்த்தேன்(as a result of innovativeness).ஐந்து வகையில்,வீட்டிற்க்கு வந்திருந்த குட்டீஸ்களுக்காக,எழுந்து செல்லவில்லை அவர்கள் ஆக அதுவரையில் முயற்சி நன்றாக வந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். சிறுவயதில் நான் வீட்டுச்சுவற்றில் கிறுக்கியதை எல்லாம் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தாகிவிட்டது.அம்மாவின் "நல்ல பொழப்பு" என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு.சிறுவயதில் மாதக் காலண்டரின் பின் புறம் வரைந்த ஒரு தவழும் க்ருஷ்ணன் ஒவியத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் இன்னும் கிடைத்தபாடில்லை.மிகவும் பிடித்த ஒவியம் அது :( ஒரு ஃபைலில்தான் சார் வைத்திருந்தேன் நோட்டு அட்டையில் இருந்த குந்தவையுடன் சேர்ந்து இவரும் காணாமல் போய்விட்டார்.
        ஜூலை 1  நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்கிறேன். அந்த லிட்சிப் பழ ஜூசிர்க்காகவும் ;).இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டம் தீட்டியாகிவருகிறது.நானும் அப்பாவும்.     
        இப்படியெல்லாம் எவ்வாறெல்லாமோ கவனம் எப்பொழுதும் போல் எங்காவது திரும்பினாலும், காலையில் விழிக்கையில் இன்று நாம் எட்டு நாப்பதுக்கு வகுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை.அந்த வகுப்பறையில் உள்ள இருக்கையில் இன்று அமர வேண்டிய நிலை இல்லை.காலையில் எழுந்ததும் காபி குடிக்கச் செல்லுகையில் அந்த புல்வெளியைக் காணமுடியாது ,அந்த வார்டனின் அனுதின வசவுகளைக் கேட்கத்தேவை இல்லை என்று இது போன்ற சிறு சிறு ஆனால் அழகான விஷயங்களை இழக்கும் உணர்வை மனதால் வெளிப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை.இந்த உணர்வு சிறிது காலத்திற்க்கு மட்டுமே இருக்கலாம்.வருங்காலத்தில் Nostalgic என்று பேசப்படுவதில் ஒன்றாகவும் மாறலாம்.ஆனால் இப்பொழுது,இந்நொடி அது ஒரு இழப்பே.ஒரு நாளைக்கே மொத்தம் 86400 தருணங்கள் இருக்கு சார்.நான்கு வருடங்கள்!, நினைத்துப் பாருங்கள் எவ்வளவு தருணங்கள் இருக்கும் என்று.

Friday, June 17, 2011

என் கனாவில்..என் கனாவில்...

ஒரு நாள் உன் வாழ்வென்றால்
என்ன வரம் கேட்பாய்?
என்றது கனவில் உதித்த இருள்தோற்றக் கடவுள்
என்னவனுடன் எந்நொடியைக் கழித்திட விருப்பமென்றேன்
உச் கொட்டி
முகம் சுருக்கி
எனை நோக்கி இருள்தோற்றம்
தனித்துவம் சிலாகிக்கும் நீயும் அவ்வாறுதானா?
என்றே பொறுமையற்று
கேள்வி ஒன்றை போர்தொடுக்க
புன்னகையை உதிர்த்துவிட்டு
கால் அனைத்து அமர்ந்திருந்தேன்

இதற்கான பொருள் என்னவோ புரியாத புதிர்ப்பெண்னே?,என
நன்றாய்த்தான் இருக்கிறது
இறையின் தமிழ் இலக்கணமும் என்றேன்
அதுகிடக்க ஒரு புறம் 
அது என்ன அனைவரும் ஒரு போல ஒரே பதில்?!
துணையுடன் தன் நொடியைக் கழித்திட விருப்பம் கோரி
என கேள்விக்கனை மற்றொன்றைத் தொடுக்க
இருளுக்கு வெளிச்சம் விடையில் விளைந்தது

அவன் வரை அவன் அன்னை
பாசம் தருபவள்
பணிவிடை செய்பவள்
உதவும் நட்பு போல்
அவள் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் தந்தை
தாயின் நிலைகூட
இல்லாத கனவான்
மரியாதை என்பதொன்றே
இவ்வுறவிற்க்கான அவன் பாலம்
அவர் வரை அவன் என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் தம்பி
செல்லபிராணி என்பான்
தீராத இம்சை என்பான்
எலியும் எலியும் மோதக் கண்டால்
இவர்களின் இரு உருவே பிரசன்னமாகும்
அவன் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் நட்பு
நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நட்பென்று வந்துவிட்டால் அவன் நிலை அவ்வாறே
கனநேர நெருக்கங்கள் கனத்துவிடும் சில நேரம்
யாவர் இவர்கள் வரை அவன் உறவு என்னவென்று அருகிருந்து உணர எண்ணம்

அவன் வரை அவன் காதல்
சில நேரம் அவள் என்பான்
சில நேரம் இவள் என்பான்
எந்நேரமும் எனக்கெந்தன் இசை என்பான்
அவள் வரை இசை வரை அவன் உறவு என்னவென்று அருகமர்ந்து உணர எண்ணம்

இருளே விடை புலர்ந்ததோ உமக்கங்கு? என்றேன்
இருள் சிரிக்க
துயில் புலர்ந்தது எந்தன் இளங்காலை
கடவுள்
இருள் விலக்கி போர்த்தியிருந்தான்
படர் மணலும் பசுமையையும்
மணல் மீது நீர் மகரந்தங்களையும். 


Wednesday, June 8, 2011

கல்லூரி முடிந்துவிட்டதால் தற்காலிகமாக சொந்த ஊரில் சிறிது நாட்கள் முகாம்.கேட்ட செய்திகளில் பலது பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த சிலருக்கு திருமணம் என்பதே.மகிழ்ச்சிதான்,ஒரு குடும்பத்தை சுயமாக நிர்வகிக்கும் பொறுப்பு வந்துவிட்டால் திருமணம் செய்வதில் தவறில்லைதான்.என் நெருங்கிய தோழிக்கும் திருமணம்,அடுத்த மாதமாம்,"சார் என்ன செய்யறார்"-னு கேட்டதற்கு இதுதான் பதில் டெல்லியில் இனிப்புகள் மொத்த விற்பனைக் கடை வைத்திருக்கிறார் பன்னிரெண்டாவது ஃபெயில் என்றாள்.படிப்பறிவற்ற அவள் அண்ணனுக்கு விரைவில் திருமணம் செய்யும் பொருட்டு இவளுக்கு திருமணம்,தனக்கு விருப்பம் இல்லையெனினும் வேறுவழி இல்லை என்றாள்.அவளது அதைரியத்தையும் தயக்கத்தையும் எண்ணி ஆத்திரம்தான் வந்தது.நேரில் சந்தித்தால் நான் அவள் மனதை மாற்ற முயற்சிப்பேனாம் அதனால் என்னை சந்திப்பதையும் தவிர்த்துக் கொண்டிருக்கிறாள்.
               இது ஒரு புறம் இருக்க,இந்த சாதி மத பேதம் ஒழிந்தது,முன்னொரு காலத்தில் இருந்தது போல் கொடுமை இப்பொழுது நிலவவில்லை என்று கூறும் மகான்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.மேடம்!நீங்கள் உங்கள் நட்பை,பெற்றொரோ அல்லது வேறு எதோ உறவினருக்கோ அறிமுகம் செய்து வைப்பீர்கள்,நட்பு அந்த பக்கமாக நகர்ந்தவுடன் இங்கே நம் உறவு ஒரு கேள்வி கேட்கும் "அவங்க நம்மவங்களா?சும்மா சாதாரணமாத்தான் கேக்கறேன்''.ஏதாவது அக்கம்பக்கதினரிடம் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென "உங்களவங்கள்ள இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் உண்டா?"என்பது.இது போன்ற கேள்விகளை இதைப் படிக்கும் நீங்கள் சந்தித்திருக்காவிடினும் பள்ளி நண்பர்கள் தொடங்கி சொந்த பாட்டி வரை என சிறுவயதிலிருந்தே,இதோ இங்கு இதனை புலம்பும் நான் சந்தித்தது உண்டு.இது போன்ற கேள்விகளுக்கு மூன்றுவிதமாக நாம் பதிலளிக்கலாம்,கேட்பதற்கு ஏற்ற பதிலை மட்டும் கூறிவிட்டு நகர்ந்துவிடுவது.இது போன்ற கேள்விகள் வேண்டாமே?என்று பதில் அளிப்பது,ஏன் பதிலே அளிக்காமல் இருப்பது கூட ஒருவிதமான பதில்தான்.மூன்றையும் அமல்படுத்தியாகியும்விட்டது.நாகரிகம் வளர்ந்து வருவதற்க்கு ஏற்ப "மனரீதியாக சாதியக் கொடுமை" என்கிற அளவிற்கு வளர்ந்துவிட்டது.எம்.ஜி.ஆர் முடிந்து ரஜினி முடிந்து விஜய் என்பது போலத்தான் இதுவும்.
              பல நாள் கழித்து பள்ளித்தோழியை கோவில் சென்றபோது சந்தித்தேன்,நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது அவளிடம், "என்ன கேவலமான சமூகம் இது?"என்றபொழுது."எதுக்கு இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ்" என்றாள்.
              நீயே பாரேன்?,குழந்தைய கிள்ளிவிட்டு அழகு பாக்கற மாதிரி,தனக்கு இந்த மாதிரி ஒன்னு நடக்கறத கூட தட்டிக் கேட்க முடியாத ஒருத்தி,வெளியில கருனை பாசம் அது இது-னு பேசினாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலையில் இந்த மாதிரி கொடூரத்தை புதைச்சு வெச்சுட்டு இருக்கற இந்த மனுஷங்க.இந்த அழுக்கோட அழுக்கா,சூழ்நிலை அதுஇது-னு காரணம் சொல்லி கலந்துடற நாம.இப்படி ஒரு அழகான சமூகம்,நீ,நான்,நாம எல்லாரும். பாரதியாருக்கு தெரியல எதிர்காலத்துல தன்னொட வரிகள் எல்லாம் சினிமாவுக்கும் காதல் செய்யறவனுக்கும் காதல் செய்யப்போறவனுக்கும்தான் பயன்படப்போகுதுனு, மனுஷர் எழுதி இருக்கமாட்டார்,எழுதி இருந்தாலும் நம்ம கண்ணுல படற மாதிரி வெச்சு இருக்க மாட்டார்", என்றேன்.
              அவள்,"இது எல்லாம் இப்படித்தான்,மாத்தமுடியாது,நீயும் இதை திருப்பி திருப்பி சொல்லறதுலயும் ஒன்னும் நடக்கப் போறது இல்ல"என்று ஒரு வரியில் முடித்துவிட்டாள்.
              இதில் யதார்த்தம் என்பது எந்நிலை?!எவர்நிலை?!.புரியவில்லை.
                                  

Wednesday, May 25, 2011

மனம்-நிறம்-அழகு



                                 அழகாய்த்தான் இருந்தது அந்த இரண்டு பிள்ளைகளும்.அழகு  என்பது குழந்தைகளை வர்ணிக்க ஒரு உசிதமான வார்த்தையா?!.பொதுவாகவே அழகு என்பது பெண் பொருள் இன்னபிறவற்றை வர்ணிக்க ஏதுவான வார்த்தையா?. எதற்க்காக அதன் பயன்பாடு,விளங்கவில்லை.ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு நிகழ்வையும் அதன் போக்கே வர்ணிக்க பலவை  உள்ளபொழுது எதற்கு இந்த வார்த்தை.சோம்பித்திரியும் மனித மூளையின் உச்சபட்ச வெளிப்பாடோ.யோசித்துப் பார்த்தால் அந்த வார்த்தை  எதற்குமே  பொருந்துவதில்லை.குழந்தை,பிள்ளைகள் என்பதே ஒரு  வகையில் வர்ணிப்பிற்க்காக பிறந்த பெயர்கள்தானே.
                  கோடைகாலத்தின் உக்கிரம் என்னவென்பதை உடல்  அளவில் உணர்ந்தாலும் அதனை தன் அன்னை போலோ தந்தை போலோ, கடுகடுத்தோ  சிடுசிடுத்தோ வெளிப்படுத்தத் தெரியாத வயதை ஒத்தது இரண்டும்.மூத்தவள் சௌம்யா,இருபது வருடத்திற்குப் பிறகு  தன்னை வந்து கண்டு கரம்  பிடித்துச் செல்லப் போபவனுக்காக இப்பொழுதிலிருந்தே தன்னை ஒரு முழு பெண்ணாகக் காண்பிக்க அன்னை செய்துவரும் செயல்களில் ஈடுபாடு  இல்லாவிடினும்  தானாகவே அவளினின்று சில நேரம் வெளிப்பட்டுவிடும்  பென்மைத்தனத்துடன் அவள்.தன் தம்பி அஜயின் கரம் பிடித்தபடி அன்னையுடன் ரேவதியின்  வீட்டிற்க்கு வந்தால்.ரேவதி என்றாலே சௌம்யாவிற்கு மிகப் பிடிக்கும்.ரேவதியிடமும் பிள்ளைகள் ஏனோ சட்டென்று  ஒட்டிக்கொண்டுவிடும்.ஒரு சில நேரம் பொறுமை இழந்தாலும் குழந்தைகளைப்  பார்த்துக் கொள்வது அவளுக்கு கை வந்த கலை போல்  ஆயிற்று.அதனாலேயே அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் தன் வாழ்நாள்  பொறுப்புதனை ஒரு சில மணித்துளிகள் ரேவதியிடம் ஒப்படைக்கத் தயங்குவதில்லை.

  சௌம்யாவின் அன்னை ,“ரேவதி!சௌம்யாவையும் அஜயையும் இங்க விட்டுட்டு போறேன்,கொஞ்ச நேரம் பாத்துக்கோயேன் எனக்கு கடத்தெரு  வரைக்கும் போயிட்டு வர வேலை இருக்கு..!எங்க அம்மா?!, இல்லையா?!”.

ரேவதி,”ம்! பாத்துக்கறேன்!,அம்மா காய்கறி வாங்க மார்க்கெட் போயிருக்காங்க”.

ரேவதி ஐந்து நாட்களுக்குப்பின் வர இருக்கும் தனது பரீட்சைக்காகப் படித்துக்  கொண்டிருந்தாள்.

கடையிலிருந்து திரும்பிய அம்மாவின் கடிந்துகொள்ளல் வேறு,
"ஏன்டி!உனக்கே படிக்கறதுக்கு நேரம் கிடைக்க மாட்டேங்குது இதுல குழந்தைங்கள வேற கூட்டு வெச்சுக்கற?!"

“ஏம்மா நானா கூப்பிட்டு வெச்சுக்கறேன்?!அதுவும் இல்லாம ஒருத்தவங்க வந்து உதவின்னு கேட்கறப்போ மறுக்க முடியுமா?!”

அம்மாவின் "என்னமோ போ"- க்களைக் கேட்டுக் கொண்டு இரண்டையும் தன  அறைக்கு அழைத்துச்சென்றாள்.

அறையில் திறந்தபடி மேசை மீது வைக்கப் பட்டிருந்த மடி கணினியைப்  பார்த்ததும் இரு பொடிசுகளும் "அய்ய்ய்ய்...!!அக்கா கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்!!"  என அருகில் சென்று அதை தடவிப் பார்க்க ஆரம்பித்தன.

டோய்!பசங்களா பொறுமை எதுவும் செய்யாதீங்க அப்புறம் அது வீணா  போயிடும்.இருங்க நானே வந்து உங்களுக்கு சொல்லித்தரேன் என்று தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு மடிகணினியை  மடியில் வைத்துக்  கொண்டாள்.சிறுசுகள் இரண்டும் அவள் இருபக்கத்திலும் அமர்ந்துகொண்டன.

ரேவதி,”ஹ்ம்ம்..என்ன பண்ணலாம்?!!”

மடிகனினியுடனான தன் பரிச்சயத்தை வலுப்படுத்திக்கொள்ள ஏற்கனவே பல  திட்டங்களை மனதிற்குள் போட்டிருந்தாலும்,அந்தக் குழந்தைக்கே உண்டான தயக்கத்துடன் சௌம்யா,”நீங்களே சொல்லுங்க அக்கா!”

அஜய்,”அக்கா எதாவது பாட்டு போடுங்களேன்!”.

"ஹ்ம்ம்..செரி!என்ன பாட்டு போடலாம்?!!"

அதற்குள் தைரியம் பிறப்பெடுத்தவலாய் சௌம்யா.”அக்கா!எந்திரன் பாட்டு?!ப்ளீஸ்”

“செரி,தாராளமா போடலாமே..!”

பாடல் ஓடிக்கொண்டிருந்தது.பாட்டைக் கேட்டபடி இரண்டும் திரையை  நோக்கிக்கொண்டிருந்தன.
மடிகனினியின்  திரை ஓரத்தில் வந்து மறைந்துகொண்டிருந்த புகைப்படங்களைப்  பார்த்தபடி சௌம்யா
“அக்கா! இது யாரு?!”.

அஜய்,”அது அங்கிள் டி!”

சௌம்யா,”டேய் நான் ஓங்கிட்ட கேக்கல, அக்கா,அங்கிள்னா?உங்க அங்கிளா?”

அஜய்,”அங்கிள்னா நமக்கு அங்கிள் லூசு!அக்காக்கு இல்ல.அப்படித்தானே அக்கா?”.

இது போன்ற சமயங்களில்தான் வளர்ச்சி என்பது எந்நிலையிலிருந்து  தொடங்குகிறது என்றெண்ணி மனம் சற்று குழம்பிவிடுகிறது.வயது ஆகஆகத்தான்  வளர்ச்சி என்பது சுருங்கிவிடுமோ?!,மனதளவில்.  

.அதற்குள் பாடல் முடிந்துவிட,அடுத்தது வேறு என்ன பாடல் போடலாம் என்று  பேச்சு திசை மாறியது.

சௌம்யா,“அக்கா பாட்டு வேண்டாம் எனக்கு கம்ப்யுட்டர் பெயிண்ட் தாங்களேன் நானே வரையறேன்”.


ரேவதி, "சௌம்யாவுக்கு எப்படி வரையறது அப்படினு தெரியுமா?தெரியலனா அப்புறம் இது ரிப்பேர் ஆகிடுமே?!"

சௌம்யா,"நான் நல்லா வரைவேன்கா!அஜய் கிட்ட கேளுங்களேன்".
அஜய்,"இவ நல்ல வரையுவாக்கா..என்ன மாதிரியே".கூடவே அவனுக்கான சுய சிபாரிசுகள்.

இந்த வண்ணங்களைக் கண்டால் மட்டும் குழந்தைகளுல்லே ஒரு பிக்காசோ எங்கிருந்தோ குடிபுகுந்து விடுகிறான்.

சௌம்யாவிற்கு சாதாரண கணினியில் இயக்குவதுபோல் இதில் வரையமுடியவில்லை.ஆனாலும், முகத்திற்கு சிறியதாய் ஒரு வட்டம் உடலிற்கு பெரியதாய் ஒருவட்டம் என அனைத்தும் ஒரு கிறுக்கல் கவிதை போல் அழகாக முடித்துவிட்டிருந்தால் சௌம்யா நிறம் தேர்வுசெய்யத்தான் அவள் ரேவதின் உதவியை நாடினாள்.

இடையே அஜய்,"சௌம்யாக்கா நீ சீக்ரம் முடிச்சிட்டு எனக்குத்தாயேன்..!நானும் வரைறேன்."

ரேவதி,"இருடா அக்கா முடிக்கட்டும் அதுக்கப்றம் நீ வரையலாம் சரியா.."

அஜய்,"ஆமா!இவ எப்போ வரஞ்சு முடிக்கறது,,அதுக்குள்ள அம்மா வந்துடுவாங்க..னா வீட்டுக்கு போகணும்.."கண்கள் அடுத்த நொடியே நீர் பிறப்பெடுக்கப்போவதுவாய், சற்றே தழைதழைத்த குரலில்.
இதை சொன்ன குரலில்தான் ஏனோ வாழ்நாள் ஆசை ஒன்று நிவர்த்தி ஆகாததைப் போன்ற ஏமாற்றம்.பிறப்பிலயே அவன் வளர்ந்த பின் பேசும் வாழ்க்கைக்கான தத்துவங்களை அவனும் பின்பற்றும்படி படைத்தவன் மனிதனை ப்ரோக்ராம் செய்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதனை வெறும் புத்தனோடு மட்டும்  நிறுத்திக் கொண்டுவிட்டான் போலும்.

சௌம்யா அதற்குள் தான் வரைந்த உருவிற்கு வண்ணம் கொடுத்து முடித்திருந்தாள்.



ரேவதி,"ஆமா!இது யாரு?"

சௌம்யா தயங்கித் தயங்கி தன் விரலை ரேவதியை நோக்கிக் காட்டினாள்.
ரேவதி ரெட்டை சிந்தும் குசிக்கைகளுமாக தான் சிறுவயதில் வரைந்த கிறுக்கல்களை மனதில் எண்ணியபடி  ஒரு புன்னகையுடன் அதை சேமித்துவைக்க,அஜய் அருகில் மெதுவாய் வந்தமர்ந்தான்.

அஜய்,"அக்கா நானு!" 

இதோ "கொஞ்சம் ஒரு நிமிஷம் இருமா!செல்லம்ல.."

அஜய் அழகாய் தலை ஆட்டியபடி தன் இரு கைகளை கட்டி திரையை மறுபடியும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
அதற்குள் அறைக்கு வெளியிலிருந்து குரல்,"அஜய்,சௌம்யா! அம்மா வந்துட்டேன்,வாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம்..அக்கா படிக்கட்டும்..!தொந்தரவு செய்யாதீங்க."

அஜய்,"அக்கா அம்மா வந்துட்டாங்க பாருங்க!அதான் அப்பவே சொன்னேனே நான்".

சௌம்யா,"அம்மா கொஞ்சம் வெயிட் பண்ணேன் அஜய் வரையறான்,அவன் வரஞ்சதும் வந்துடறோம்".ரேவதிக்கு அது  அழகாகத்தான் தோன்றியது.நெல்லில் அகரம் எழுதுவது போல் ரேவதி அச்சிறிதின் புறங்கை முழுதுமாய் தன் கரத்தால் அணைத்தபடி வரைய வைத்துக் கொண்டிருந்தாள்,அவன் கூறுவதற்கு ஏற்ப.வரைகயில்தான் அக்குழந்தையின் முகத்தில் எத்தனை வண்ணத்தில் ஆனந்தம்.

அன்னை அழைக்காமலேயே "இதோ முடிச்சிட்டேன்,வந்துட்டேன்மா .."என்று உற்சாகம் கலந்த குரலில் அஜய்.


ரேவதி அக்குழந்தைகளுடன் ஒன்றியவளாய்,"அய்ய்ய்ய்!அஜய் அழகா வரஞ்சு முடிசிட்டானே.." என்று கரம் தட்ட,தன்னுள் இருக்கும் சூப்பர்மேனை உலகிற்கு நிருபித்தது போன்ற சந்தோஷம் அந்த முகத்தில்.

ரேவதி,"ஆமா!செல்லகுட்டி யார வரஞ்சீங்க?"

அஜய்,"இதோ இந்த அங்கிள்தான்!",என்று திரையை காண்பித்துவிட்டு "நான் அம்மாகிட்ட போறேன் டாட்டா-க்கா",என்று அக்காவின் கரம் பிடித்தபடி அறையைவிட்டு ஓடினான்.

அந்த கிறுக்கலை ஒரு வெட்கப் புன்னகையுடன் நோக்கிவிட்டு,அரைகுறையாய் மூடப்பட்டிருந்த அறைக்கதவும் சுவற்றிற்கும் ஏற்ப்பட்ட இடைவெளியில் அவர்களது நீண்டு சென்ற நிழலை நோக்கியபடி இருந்தாள் ரேவதி.                


     

  
 

 
             

                   


Saturday, May 21, 2011


Wednesday, May 18, 2011

ஒரு காதல் என்பது...

                          “காதல் மிகக்  கண்மூடித்தனமானது”,இந்த  வரியை கூறியவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,கண்டுபிடித்தால் அவரிடம்  கேட்க  ஒரு  கேள்வி  கைவசம்  உள்ளது . “உங்களைப்  பொறுத்தவரை காதல் என்றால்  என்ன?”,எனக்கு ஏனோ அவரிடம் மட்டுமிருந்துதான் அதற்கு சரியான விடையைப்  பெறமுடியும் என்ற நம்பிக்கை.எனக்கு தெரிந்த பலரிடம் கேட்ட  போது அவர்கள் காதல் என்பதைத் தாண்டி சினிமாவால் எவ்வளவு பாதிக்கப்  பட்டுள்ளார்கள் என்பதே மிகவும் புலப்பட்டது.

                ஆக அவர்கள் பாணியிலேயே சென்றால்,எத்தனை சினிமாக்கள் காதல்  என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்டியுள்ளது?என்று பார்த்தால்.காதல்  என்றாலே அங்கு கண்டிப்பாக ஆண் பெண் இருந்தாகவேண்டும் என்று கை  எழுத்து இடப்பாடாத சட்டத்துடந்தான் படங்களே  இருக்கின்றன.ஒரு எழுத்தாளன் அவன் எழுத்துடன் ஒன்றி லயித்து உருகொடுத்து ,வெளிக்கொணர்வது. ஒரு திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனன் தான்,  அக்கதைக்குள் கலந்து தான் நிலை மறந்து,தன கீழ் பணி புரியும் அனைவரையும், மனம் ஒன்று படுவதுபோல், ஒருங்கிணைத்து ,அவர்களிடம்  காட்டும் அன்பு, பாசம், கோபம் ,கட்டளை மூலமாக அவர்களையே அடி  பணியவைத்து ,அத்தரஐனத்தில் அக்கருவை உருவாக்கி வெளியுலகிற்கு அளித்து அந்நிலையில் அவ்விடத்தில் அவனையே  ஒரு கடவுள் ஆக்கிவிடுவது.ஒரு  இசை வித்தகன்  தான்  நிலைமறந்து  கண்  மூடி  கண்ணீர்  சுரக்க  தாய்  மடி  அரவணைப்பு போல்,கலவின் கடைநிலை போல்,அவனையே அவ்விடத்து தாய் சேய் உற்றது ,விட்டது என அனைத்துமாக்கி கிடப்பது.ஒரு நாட்டியத்தில்  ஒருவரிடமிருந்து அதீதமாக அவரை வெளி உலகிற்குப்  புலப்படுத்தும் /உணர்விக்கும்  நயமும் பாவமும்.எத்தனைப் பேருக்கு இவையும் காதலாகப்  புலப் பட்டிருக்கும்.எத்தனை சினிமாக்கள் இதனையும் கருக்களமாக்கி காதல் படங்கள் என்ற வகைமையில் காண்பித்திருக்கும்.யோசியுங்களேன்!,விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதை எழுதுகையில் சட்டென எண்ணத்தில் தோன்றியது, உங்களுக்கு நேரமிருந்தால்,நீங்களும் ,என்னையும் சேர்த்து இங்கு உள்ள பலரைப் போல் மனோதத்துவம் உளவியல் என்று புலம்புபவராயின்.சிந்துபைரவி படத்தின் அம்மூன்று முக்கியக் கதாப்பாத்திரத்தை மட்டும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன்.அழகாய்ப்  பலது மனதிருக்குப் புலப்படும்.அது போல் பல உதாரணம் கூறுகிறது எண்ணம்.

          தாயே,நீ என்னதான் சொல்ல வர இப்போ? என்று கேட்பவர்களுக்கு,
முதல் சந்திப்பில் “ஒஹ்!அதுவா அது எனக்கு ரொம்ப பிடிக்குமே “ என்பது  பத்தாவது சந்திப்பிலும் “ஒஹ்!அதுவும் பிடிக்கும்”என்று பிடிப்பதோடு நின்றுவிடாமல் ,முப்பதாவது சந்திப்பில் அவன் செயலில்,அவள் உணர்ந்து ஒன்றி தானும் கலந்திருப்பது,அது கலை ஆயினும் காமம் ஆயினும் எதுவாயினும் அதுவே நான் இங்கு கூறுவது.அது எண்பது சந்திப்புகள் வரையும்  அதைத் தாண்டியும் அவ்வாறாயின் அதை விட அழகான காதல் இருக்க  முடியாது.ஆனால்,“அவளுக்காக அது என்னவென்று கூட தெரியாவிடினும் அது எனக்கு மிகப் பிடிக்கும்”, என்று யோசிக்கத் தொடங்கினால் அந்நொடியிலிருந்து நீ உன்  சுயத்தைத் தொலைக்கிறாய்.உன் சுயத்தை  உணர்வதற்க்காய் காத்திருக்கும் வேறு ஒரு ஆன்மாவுடனும் சேர்த்து அவளது  ஆன்மாவையும் பொய்க்க வைத்துவிடுகிறாய்.இது அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் பொருந்தும்.

                             இது,இரு மனிதர்களுக்கு இடையே தோன்றுவதே காதல் என்று  வரையறுத்து வைத்துக்கொண்டவர்களுக்கும் சரி, என் காதலை நான் கலையில் மட்டுமே உணர்கிறேன்,கலையிலும் உணர்கிறேன் என்று  கூறுபவர்களுக்கும் சரி எவ்வாறாகிலும் வார்த்தையை மட்டும் வேறு எடுத்துப் பொருத்தினால் மேல் சொன்ன கூற்று பொருந்தும்.கலை உனக்குப்  பிடிக்குமாயின் பிடிப்பதோடு மட்டும் உறைந்துபோனால் அது காதல் அல்லவே. அனைவர் பாணியில் கூறினால்“ அது அப்படியே நம்மள கரைச்சு உருக்கி  காணாடிச்சுடனும்”.ஆன்மாவை உணர்வது எனலாம் இதனை, சுருக்கமாக.என்ன உணர்வதுதான் எளிதில் நிகழ்வதில்லை.                            
                                    நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில்  எறிவது மட்டுமா தவறு,தவறான சுருதி சேர்த்தலும்தானே,சொல்லடி என் சிவசக்தி. J       

Saturday, May 7, 2011

நட்பு இரண்டும் பேசுகையில்,
உரு உனது இல்லாது போனாலும்..
உன் பெயரேனும் தோன்றிடுது,
அவர்களிடத்தே,
ஒருத்தியை மற்றொருத்திக்
கேலிகள் செய்வதுமாய்,    
மறைமுகமாய் நீ அவளதென்று,
அவள் கூறும் பொழுதிலும்..
அந்நட்புக்காய்  உடன் சேர்ந்து,
புன்னகை செய்தாலும்,
மௌனித்து இருந்தாலும்,
அவ்விடத்தின்று நகர்ந்தாலும்,
எவரும் அறியாது கண்ணீர்ப் பெருகிடுது..
குறுக்கிடும் தான்மையும்,
குருதியோடும் குறிக்கோளும்,
என்னில் உணர்ந்த,
வேறு பல காரணமுமாய்..
என ஏனோ மறைத்திடுது,
எவரிடமும் அதைக் கூறாது.
இயற்கையும்,
என் இசை மட்டும்,  
அறிந்த இக்கதையை..

Sunday, May 1, 2011

வளைந்து கிடந்து
வலக்கரம் நீட்டி
உந்தன் விரல் அதைத்
தீண்டத் தேடி..

கூந்தல் புரண்டபடி
அது தலையணையில் படர்ந்தபடி
முகம் புதைத்து
கரைந்திருக்க
உன் நெஞ்சத்தைத் தேடி..

சட்டெனச் சிணுங்கும் 
பாதத்துச்  சுட்டு விரல்
இதழோரம் மெலிதாய்  
புன்னகையும் மௌனமும் 
நாணமோ?
அதில் ஒளிந்திடும் மோகமோ?
நீதான் சொல்லவேண்டும்..  

 

Saturday, April 30, 2011

புரிகோடுகள் .......



வைஷு,ரயில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே கண்களால் நோட்டம் விட்டபடி மீண்டும் அந்த காகிதத்தில் தன் பார்வையை செலுத்தினாள்.அவளுடைய கையெழுத்துதான்,என்றோ எழுதியது.பெறுனர் பகுதியும் ,அனுப்புனர் பகுதியும் எதுவும் எழுதப் படாமல். எழுத்து தொடங்குகயிலும் இறுதியிலும் மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு.பழைய கடிதம் என்பதை குறிக்கும் விதமாக அதன் மடிப்புகளில் தங்கி இருந்த கரை,எழுதுகையில் கண்ணீர் சிந்தி இருக்கலாம் என்று ஊகிக்கும் அளவிற்கு ஆங்காங்கே கரைகள் போல் களைந்து இருந்த எழுத்துக்கள். 

                                                                                                                                                     கார்த்திக்,                                             
                எப்படி இருக்கீங்க ?!.இத கேக்கற மனநிலைல  நான் இல்லேனாலும் கேட்டாகணும்,இந்த லேட்டர வேற எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல.அதுவும் நேற்று   ரச்சனா கிட்ட பேசின பிறகு ..!.உங்க ரெண்டு பேருக்கிடையில இந்த திடீர் பிரிவுக்கு நான் சொன்ன வரிகள்தான் காரணம்னு நெனச்சா ,அது மைன்ட்ல திருப்பி திருப்பி  வேவ்ஸ் மாதிரி வந்துட்டு போகறது ,கார்த்திக் !.ஒரு நல்ல பிரெண்ட்ஷிப்  நடுல இப்படி ஒரு விரிசல் விழ நான் காரணமா இருந்திருக்கேன் .ரச்சனா சொல்லிதான் நான் சொன்ன  வரிகள் இவ்ளோ தாக்கத்த ஏற்ப்படுத்திருக்கு  அப்படின்னு என்னால  உணரமுடிஞ்சுது . நான் அந்த வரிகள அங்க chat-ல  உபயோகப் படுத்தி இருக்க கூடாதுதான்.ஐ நோ  யு ஆர்  மச் மோர் சென்சிடிவ்.பட் அது ஏன் எனக்கு அங்க ஸ்ட்ரைக் ஆகாம போச்சு. ஒருத்தவங்க இப்படிதான் அப்படின்னு புரிஞ்சுக்கறது  ஒரு பெரிய விஷயமே இல்ல கார்த்திக்.ஆனா அப்படி புரிஞ்சதுக்கப்புறம் அவங்ககிட்டக்க நாம எப்படி ரியாக்ட் பண்ணறோம் அதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு.புரிஞ்சு என்ன பயன்,என் வரையில் எனக்கு அந்த சமயத்துல அப்படி ரியாக்ட் பண்ண தெரியலயே.. நீங்க என்கிட்டக்க அன்னிக்கு பேசி இருக்கவே கூடாது.எப்போதும் போலவே பேசாமயே போயிருந்துருக்கலாம். ஒதுக்கறது எனக்கு ஒன்னும் புதுசு கிடையாது பழக்கப் பட்ட விஷயம்தான் ஆனா அந்த நட்புக்கு அப்படி கிடையாது இல்லையா ?!கார்த்திக்.பேசாம  இருந்திருந்தா  என்கிட்டே எதையும் சொல்லி இருக்க நேர்ந்திருக்காது.
நானும் அப்படி சுபிரியாரிட்டி,இன்பிரியாரிடி-னு சொல்லி இருக்க மாட்டேன்.நீங்களும் அப்படி யோசிச்சு இருக்கும் வேண்டியதில்ல, திடீர்னு உங்க பழைய  பிரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் பேசறத நிறுத்தி இருக்க மாட்டீங்க இல்லையா.புரிஞ்சும் ரியாக்ட் பண்ண தெரியாம நான் அன்பை எதிர்பார்க்கறது தப்புதானே,எனக்கு அந்த தகுதியே இல்லைன்னு தோணுது கார்த்திக்.infact எனக்கு அன்பு செய்யத் தெரியலையோ? அப்படிங்கற மாதிரி தாட் எல்லாம்  மைன்ட்ல  வர ஆரம்பிச்சுடுத்து   கார்த்திக் .அது உண்மையாவே கூட இருக்கலாம்  தெரியல. ஆனா  அழகான ஒரு விஷயம் பாழ் படறதுக்கு எனக்கே தெரியாம நான் காரணமா இருந்துருக்கேனே ,ரொம்பவே கஷ்டமா இருக்கு,அவ சொன்னதுக்குப் பிறகு என்னால அழாம இருக்க முடியல  .லைப்ல ஒவ்வொன்னும் ஒவ்வோருத்தவங்களாவே புரிஞ்சுட்டு வளரனும் கார்த்திக்,அதனால எனக்கு இந்த அட்வைஸ் பண்றது சுத்தமா பிடிக்காது .ஆக நான் இப்போ சொல்லறத பஸ் இல்ல ட்ரைன்ல  போகறப்போ பாக்கற ஒரு பாஸ் பை  செண்டன்சா   எடுத்துக்கோங்களேன். " காதல்ங்கறது மட்டும்தான் வெளில நான் உன்னை நீயாவே விரும்பறேன்னு சொன்னாலும் 
மனசுக்குள்ள நீ எனக்காக இப்படி மாறினா நல்ல இருக்கும் அப்படி மாறினா நல்ல இருக்கும்-னு நினைக்கும்,உதாரணத்துக்கு-அழகு எனக்கு முக்கியம் இல்லை மனசதான் பாக்கறேன்னு சொன்னாலும் ,மைண்ட்ல ஏதோ ஒரு கார்னர் அந்த அழகதான் முதல்ல தேடும் .நட்பு அப்படி இல்லை ,அது நாம எப்படி இருந்தாலும்  நம்ம மனசு எப்படி இருந்தாலும் அப்படியே ஏத்துக்கறது  , கார்த்திக். பிரெண்ட்ஸ்ல  ஒருத்தருக்கு ஒரு விஷயம் நமக்கு முன்னாடியே தெரியுமா / தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கா அதை சொல்லவே தேவை இல்லை .அப்படி நமக்கு தெரிஞ்ச விஷயத்த நமக்கு பிரெண்ட்ஸ் யாராவது சொல்லறாங்களா,சரி அப்படின்னுட்டு போயிடலாம்,எனக்கும் தெரியும்னு காட்டிக்கவேண்டிய அவசியம் இல்லை. 
ஈகோ ,அட்டிட்யுட் தாராளமா இருக்கலாம் கார்த்திக் யாருக்கிட்ட வேண்டுமானாலும் காமிக்கலாம்,நானும் அதற்கு விதி விலக்கு இல்லை,  ஆனா அதை பிரெண்ட்ஸ் கிட்டக்க காமிக்கறது   யோசிச்சு பார்த்தா ரொம்பவே  தேவை இல்லாத விஷயம்,காமிச்சா அது முதலில் பிரென்ஷிப்பே கிடையாது,என்னைப் பொருத்தவரைக்கும் .இது உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் சொல்லறேன் .

take care ,
வைஷு
.


  
கடிதத்தை படித்துமுடித்ததும் ஒரு பெருமூச்சு,மீண்டும் அதை மடித்து நாட்குறிப்புப்  பக்கங்களுள் வைத்துக் கொண்டாள். ரயில் புறப்படத் தொடங்கி இருந்தது. அதிகாலையில் சென்று சேர்ந்தால் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு இல்லையெனினும் ஒரு பத்து நிமிடம் தாமதமாகவாவது சென்று சேர்ந்து விடலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.கையில் எப்பொழுதுமே தன் கூட வைத்திருக்கும் பாரதியார் கவிதைகள்.பிரித்தாள்,
விட்டுவிடுதலை ஆகி நிற்ப்பாய் ,
         இந்த சிட்டுக் குருவியைப் போலே...   

என்னும் வரிகள் சிரித்துக் கொண்டே,"சொல்லுவது எளிதடா பாரதி ,செயல்படுத்தல் மிகக் கடினம் என்றுமே". என எண்ணிக் கொண்டும் நாட்குறிப்பில் இருக்கும் அக்கடிதத்தினை பார்த்துக்கொண்டும் அவ்வரிகளைப் பாடுவதற்கு ஏதுவாய் மெட்டமைத்துக் கொண்டிருந்தாள். இடையிடையே எங்கிருந்தோ கலந்திவிடும் பழைய பாடல் வரிகளுக்கான மெட்டுகள்.சிறு வயதுப் பழக்கம்!,சுடுகாடு வரைக்குமோ?! என்று சிறிதாக தன்னைத்தானே திட்டிக் கொண்டு வரிகளிடையே கண்கள் மேய்ந்தன..
                                 மற்ற பொழுது கதை சொல்லி  
துயில் கொண்டு,

                                            பின் வைகறை முன் பாடி விழிப்புற்று ,
சுதந்திரம் என்பதன் எல்லை அதுவரைதானா? ,ஏன் அதில் ஏதோ ஒரு இடுக்கில் சுயம் என்னும் வார்த்தையும் ஒளிந்து ஒலிக்கிறது.புரிதல் திறன் அத்துடன் முடக்கி முடிச்சுப் போடப்பட்டுவிட்டதா?,எதிலுமே புரிதல் என்பதின் எல்லை ஏன் ஒரு வரையறையோடு நின்றுவிடுகிறது.அந்த எல்லையினை தாண்ட ஏன் மனதிற்கு தயக்கம்?பயம்?.தாண்டினாலும் தவறுகளில் அல்லது தவறான கோணங்களில்.புரிதல் என்ற பாதை எங்கிருந்து தோன்றியது?!.   
                                   விட்டுவிடுதலை ஆகி நிற்ப்பாய் ,
                                   இந்த சிட்டுக் குருவியைப் போலே...
முனுமுனுத்துக்கொண்டாள்.

Tuesday, April 26, 2011

மனம் ஒரு...!

                                  
                     அலைபேசித் திரையை நோக்கிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி ,நான்கு  நாட்கள் அலுவலக வேலை நிமித்தமாக வேலூர் வந்திருந்தாள் , பெற்றோர்  அங்கிருப்பதால் அலுவலகம் தரும் "விளம்பரங்களில் மட்டுமே அழகாய்த் தோன்றும்" அறைகளிலிருந்து தப்பித்த ஒரு இனம் புரியாத பெருமிதம் ,தொலைதொடர்பு வளர்ந்துவிட்ட நிலையிலும் நீண்ட நாளைக்குப் பிறகு நெருக்கங்களை நேரில் சந்திப்பதில் தோன்றும் ஒரு அலாதி இன்பம் என,அலுவலக நேரம் போக மகிழ்ச்சியுடன் அவர்களிடமும் அருகாமை மக்களிடமும்  கதைத்தபடி வந்து சேர்ந்த முதல் நாள் கழிந்தது.இரண்டாம் நாள் தோட்டத்தில் அமர்ந்தபடிதான் இவ்வாறு அவள் அலைபசியை நோக்கிக் கொண்டிருந்தாள்.விரல்கள் எண்களை அழுத்திவிட்டு மீண்டும் அதே விரல்கள் அதனை அழித்துக் கொண்டிருந்தன.இத்தனைக்கும் அந்த அழைப்பு வேறு யாருக்கோ அல்ல ,ரஞ்சனியின் மிஸ்டர் கரம் பிடித்தவருக்குத்தான்.அந்த தயக்கம் சற்றே கோபம் கலந்ததும் கூட.இது எப்பொழுதும் நிகழ்வதுதான்  என்று உதடு சமாதானம் கூறிக்கொண்டாலும், ஆழ்மனது "ஆனாலும்!", என்று எதிர் திசையில் இயங்கியது.தன்னைப் பற்றி கவலை இருந்தால்தானே அழைத்துப் பேச,"அவன்!இவ்வாறுதான்!",மனதிற்குள் மோதல்களும் சமாதானங்களும்.மனம் எங்கோ இருந்தாலும் விரல் இன்னும் எண்களை அழுத்தியபடிதான் இருந்தது.       
 
ஊருக்கு வருவதற்கு இரு நாட்களுக்கு முன்பு.
                               
                      "நந்துப்பா காபி குடிச்சிட்டீங்களா?!",ரஞ்சனியின் கேள்விக்கு இன்னும் பதில் வந்தபாடில்லை.ஹாலில்தான் அமர்ந்திருந்தான் நந்தினியின் அப்பா,பின்னறையில் தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த ரஞ்சனி  பதில் வராமல் போகவே எழுந்து ஹாலுக்குச் சென்றாள்.அங்கே அனந்தசயனப் பெருமாள் போல் படுத்த படி ஒரு கையால் தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சியை நோக்கிக் கொண்டிருந்தான்,தொலைக்காட்சியையும் ஒழுங்காக பார்த்தபடில்லை ஏதோ சானல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.  அவன் முன் தன் கரத்தை ஆட்டி " "எக்ஸ்க்யுஸ் மீ! மிஸ்டர் வசந்த் யாராவது கேள்வி கேட்டா அதுக்கு பதில்-னு  ஒன்னு தரனும் தெரியுமா?".வசந்த்,  "தெரியும்!",இன்னும் தொலைக்காட்சித் திரையை நோக்கியபடி.
                       ரஞ்சனி டீ-பாயில் இருந்த காபி கப்பினைப் பார்த்தாள், காலியாக இருந்தது.அதனை எடுத்துக்கொண்டு, சரி விடு!, நந்தினி  ஸ்கூல்லேர்ந்து வர டைம் ஆச்சு போயி அவள கூட்டிட்டு வந்திரேன்.வசந்த்!.

வசந்த்,"இப்போ எனக்கு வேற வேலை இருக்கு  நான் போக முடியாது நீயே போயி கூட்டிட்டு வந்துரு".

"வசந்த் அது எப்படி போக முடியும்?,ரம்யா ரொம்ப நாள் கழிச்சு என்ன பாக்க வந்திருக்கா?,அவள விட்டுட்டு எப்படி போகறது?,அதுவும் உன்ன இங்க விட்டுட்டு? நம்ம கல்யாணத்தப்போ அவள சைட் அடிச்சவந்தானே நீ?",ரஞ்சனி  கண் சிமிட்டியபடி.

வசந்த் சிரித்துவிட்டு ,"எனக்கு வேற வேலை  இருக்கு ரஞ்சு,நேத்தி நான்தானே போனேன் நீ இன்னிக்கு போயேன் ஒரு அஞ்சு நிமிஷம்தானே ஆகப் போகுது.

ரஞ்சனி,"நானும் அதேதான சொல்லறேன்?!ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா?! இன்னிக்கு மட்டும் நீ போயி கூட்டிட்டு வந்துரேன் ".கேட்ட குரலில் கொஞ்சம் கோபம் ஏனோ கலந்துவிட்டது.

            பதில் வராது,அவள் அறிந்ததே,அதற்க்கு மேல் அவளும் அவனிடம் கேட்க மாட்டாள்,கெஞ்சுவது அவளுக்கும் பிடிக்காது,இவ்வளவு நேரம் ரஞ்சனி பொருத்திருந்ததே அதிசயம்தான்."சரி நானே போகிறேன்!" என்று கூறியபடி ரம்யாவுடன் தானே பள்ளிக்கு சென்று அவளை அழைத்துவரக் கிளம்பிவிட்டாள்.

 வழியில் ரம்யா, "அது என்ன என் முன்னாடி நந்துப்பா ,அங்க மட்டும் வசந்த்?",
என்ன மதிக்கற மாதிரி நடிப்பா?"
ரஞ்சனி," ச்ச!இதுல என்ன நடிப்பு வேண்டி இருக்கு,எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கும், அதுவும் இல்லாம சார் அப்படிலாம் அக்கறையா கேட்டாதான் பதில் சொல்லுவார். இல்லனா,மூஞ்ச தூக்கிவெச்சுண்டு பேசவே மாட்டான்.அவர் மட்டும் யாரையும் மதிக்கவே மாட்டார்,நாம கொஞ்சம் அக்கறை காமிக்கலேனா சட்டுன்னு கோபம் வந்துடும்.பேருக்குதான் ப்ராக்டிகல்,சொல்லனும்னா நந்தினியே எவ்வளவோ பரவாயில்ல என்றாள்  நகைத்தபடி.
  ஆனா,ரம்மி! ஹி ஈஸ் மை மேன்! இந்த மாதிரி சில்லி ரீசன்ஸ்காகவே அவன எனக்கு இன்னும் பிடிக்கும்.

ரம்யா ,"நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும்!..".என்றாள் நகைத்தபடி ராகமாக.

ரஞ்சனி,"மெச்சலும் இல்ல மேய்ச்சலும் இல்ல..!",அட் ஒன் பாய்ண்ட் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துதான் போயாகனும் ரம்யா.சண்டை போடறது இந்த ஈகோ எல்லாம்  ரீல் லைப்ல பாக்கற காதலுக்கு கல்யாணத்துக்கு வேணும்னா சரிவரலாம் பட் நாட் "ஆல்வேஸ்"  இன் ரியல்,குடும்பம்-னு இருந்தா அதுக்கு ஒரு புனிதம்,ஒரு அமைதி எப்பவுமே இருக்கும்,இருக்கணும்.

ரம்யா,"ஈகோ பத்தி நீ பேசறேயா? சொந்த அப்பா கிட்டயே மாசக் கணக்குல  பேசாம இருந்தவ நீ, ஞாபகம் இல்ல போலருக்கு?!"

"சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கே,ரம்யா!என்ன பத்தியும் உனக்கு தெரியும்,என்ன நடந்துதுனும் உனக்குத் தெரியும் "                     
 
எதுக்கெடுத்தாலும் பதில் ஒன்னு,உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது!.
       
பள்ளிக்கு சென்று,விளையாடித் திரிந்த அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்த நந்தினியை தூக்கிக் கொண்டு வீடு வந்தாள் ரஞ்சனி.ரம்யாவிற்கு வழியிலேயே விடைகொடுத்துவிட்டு.

வசந்த்,அன்று இரவு கூட நந்துவிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்,இவள் பேசினாலும் பதில் இல்லை.ஊருக்குச்சென்று வருகிறேன் நான்கு நாட்களாகும் என்று சொன்னபோது கூட "சரி" என்ற ஒரு வார்த்தைதான்.கிளம்பும்பொழுது கண் சற்றுக் கலங்கித்தான் போனது,காட்டிக்கொள்ளவில்லை.மாலை அவன் அலுவல்களை முடித்து வந்ததும் அவனிடம் சென்றுவருவதாகச் சொல்லிவிட்டு நந்துவிற்கு கன்னத்தில் சிறு முத்தம் கொடுத்துவிட்டு புறப்பட்டாள்.

இதோ இன்று வீட்டுத் தோட்டத்தில்,முன்பெல்லாம் அதன் அழகை எண்ணி வியந்தபடி நடந்தது போக,இன்று மனம் பல எண்ணங்களைச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தது.

பின்னிலிருந்து அப்பாவின் குரல் கேட்டது,"ரஞ்சு,மா! என்ன செய்யறே?!"

ஒன்னுமில்லப்பா!,உனக்கு தெரியாதா என்ன,எனக்கு இங்க நடக்கறது ரொம்ப பிடிக்கும்னு.

அது செரி! அதுக்குன்னு யாரும் மொபைல இந்த பாடு படுத்திட்டே நடக்கமாட்டாங்க.என்று மொபைலை வாங்கியவரின் கரங்களில்,தான் சிறுவயதில் கண்ட அதே நம்பிக்கையும் திடமும்.வாங்கி எப்பொழுதும் போல் அதனை வெறுமனே பரிசோதித்துக் கொண்டிருந்தார்.ஏனோ அவரை பார்க்கையில் அவளுக்கு வசந்தின் ஞாபகம் தோன்றிவிடும். வசந்திடம் கூட இதனை பலமுறை சொல்லி இருக்கிறாள்."நீ அப்படியே எங்க அப்பா!உன் ஒவ்வொரு நடவடிக்கையிலும்,அப்போ அப்போ உன் ப்ரெண்ட்ஸ் கூட உன்     போட்டோஸ் பாத்தாக்கூட திடீர்னு உன் முகம் என் அப்பாது மாதிரி தெரியும்",என்று அதற்க்குகூட வசந்த் கேலியாக "அது ஒன்னும் இல்ல ரஞ்சனி நீ என்னையே இருபத்தி நாலு மணி நேரமும் நெனச்சிட்டே இருக்கேயா?!அதான்,எல்லாம் ஒரு பிரமை" என்பான்.பெரும்பாலும் அதற்க்கு ரஞ்சனியின் பதில் "யே!சீ போ!ஸ்டுபிட்"  என்னும் நான்கு வார்த்தைகளிலும் ஒரு சிறு புன்னகையிலும் முடிந்துவிடும்.
ஆனால் உண்மை அதுதான் அவள் பார்த்தறிந்து உணர்ந்தது வரை.

                                   இப்போதும் அவள் மனதுக்குள் தன் தந்தையை நோக்கியபடி  எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன "அப்படியே நீங்கதான்பா அவன், உங்க குணம் ஒவ்வொன்னும், "தன்னையே தன் நெருக்கமானவங்க எல்லாரும் பம்ப்பர் பண்ணனும்-னு நெனைக்கறது,சட்டுன்னு டென்ஷன் ஆகறது.நீங்க என்ன வளர்த்த மாதிரியே அவன் நந்துகிட்ட காண்பிக்கற அன்பு. நான் ஏதாவது ரொம்ப சோகமா இருந்தா திடீர்னு அவன் என்கிட்டே காண்பிக்கற அன்பு, அம்மாவுக்கு நீங்க அவங்க தூங்கபோறப்போ போர்வை போர்த்திவிடுவிங்களே அழகா அதே மாதிரி.ஏனோ அந்த மாதிரி சமயத்துலலாம் வசந்த்தை அப்படியே இறுக்க கட்டிக்கணும்னு தோணும்,ஆனா சொன்னது இல்ல. எனக்கு ஏதோ ஆபரேஷன் செய்யனும்னு டாக்டர் சொன்னதும் அவ்வளவு மென்டலி ஸ்ட்ராங் நீங்க திடீர்னு அழுதீங்களே "ரஞ்சு உனக்கு மனசு தைரியம் ஜாஸ்தி ஆனா என் பொண்ணுக்குன்னு வரப்போ நான் அப்படிஇல்லன்னு"சொல்லிக்கிட்டே.உங்கள மாதிரியே சென்சிடீவ்ப்பா அவன்.இன்னும் பல விஷயத்துல அவன் உங்கள மாதிரியேப்பா".மனதுக்குள் பேசிக்கொண்டாள்,கண்களில் ஏனோ நீர்த்துளி,அவர் கவனிக்கவில்லை.
                                       உள்ளிருந்து அம்மாவின் குரல் "என்னங்க!வாட்டர் டாக்ஸ் கட்டசொல்லி பில் வந்துதே கட்டிடீன்களா?".

ரஞ்சனி சிரித்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டு "என்னப்பா வரீங்களா முனிசிபாலிடி வரைக்கும் ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாம்!",என்றாள்.

அவர்,"ஓ!தாராளமா உன்கூட வாக் போயே பல மாசம் ஆகுது".

வழியில்,அவள்  மனதுக்குள் "இடியட்!இரு ஊருக்கு வந்ததும் கவனிச்சுக்கறேன்",புன்னகை.