BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, November 5, 2013

நீ! நான்! நிமிடங்கள்..-2

இது மழைப் பருவம்.இப்போது நம் குரல்களுக்கிடையே நிலவும் அமைதியை, மழைத்துளியின் சிதறல்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.இந்த மழைதான் எவ்வளவு அழகானது, இசை போல.இசையும் இசை சார்ந்தும் தன பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கின்றனர் பலர்.'மழை' என்று ஏன் எவரும் பெயர் வைப்பதில்லை?.எனக்கு என்னவோ இசையும் ,மழையும் ஒரே பெயர் போல்தான் ஒலிக்கும் என்று தோன்றுகிறது .இலையுதிர் காலங்களில் நான் நடந்து சென்ற அதே பாதையில் எனக்கும் உன் நினைவுகளுக்கும் குடை பிடித்தபடி நான்.குடையின் மேல் பட்டும் படாமல் துளிர்த்திருக்கும் அந்த மழைத்துளிகளும் உன் போல்தான்,பட்டும் படாமல்.துளிகள் ஒவ்வொன்றும் என் சிறு சிறு உலகங்களாக.மழை நின்றது.குடைமீது துளிர்த்திருந்த என் உலகங்களும் நழுவிச் சென்று விழுகின்றன,இலையுதிர் காலத்துச் சருகுகளின் மேல்.  

நீ! நான்! நிமிடங்கள்..-1

இந்த இயற்கையின் ஒவ்வொரு பருவமும்  தன் துவக்கத்தில் ஏதோ ஒன்றை உடன் அழைத்து வருகிறது,முந்தைய பருவத்தின் தேய்பிறையில் மறைந்த உன் நினைவுகள் மீண்டும் வளர்ந்தபடியாய்,இதோ இந்த இலையுதிர் காலத்தின் சாலைகளில் கீழே உதிர்ந்து கிடக்கும் சருகுகளின் மெல்லிய உரசல்கள்,சில நேரங்களில் நம் பேச்சுகளிடையே நிலவிய மௌனங்களும் இவ்வாறுதான் இருந்தன. ஆனால் அது என்ன சட்டென இலைகள் வெவ்வேறு திசை நோக்கி நகர அங்கு ஒரு சஞ்சலம் மிக்க அமைதி நிலவுவது ஏன்?.இந்த இலையுதிர்வுகளுக்கு நடுவே அங்காங்கே முகம் கவனிக்கபடாத மனிதர்களின் குரல்களும் ஒலிக்கின்றது.எனோ உன்னைப் பற்றிய சிந்தனைகள் அவர்களது குரல்களையும் கவனிக்கத் தவிர்க்கிறது.அந்த குரல்களுக்கும் என் சிந்தனைகளுக்கும் இடையேதான் எங்கோ தொக்கி நிற்கிறது சிறு அமைதியும்.விளக்கமளிக்க முடியாத கேள்விகள் போல் விவரிக்க முடியாத இந்த அமைதி.அந்த அமைதியை தாங்கியபடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,இந்த சாலையில் என் கண்முன்னே சருகுகள் உதிர்ந்தபடி.  

Saturday, April 13, 2013

லாவண்டர் கனவுகள்

       அடர் பனிப்பாதையிலே  உதிர்ந்து  கிடக்கும் லாவண்டர் மலர்களை உற்று நோக்கியபடி நடந்துகொண்டிருக்கிறேன்.நடப்பது எனக்கு பிடிக்கும்.கால்கள் நடந்துகொண்டிருக்க இந்த மனது மட்டும்,கரைதொடும் புது அலைகள் போல் ஒவ்வொருமுறை எட்டித் தொடும்போதும் ஒரு புதிய உலகத்தை விட்டுச் செல்லும்.நான் என்னைத் தேடத்துவங்கி உன்னில் தொலையும் உலகம் அது.நடப்பது மிகப் பிடிக்கும்.ஒவ்வொரு லாவண்டர் மலர் உதிரும்போதும் உன்னை நோக்கி நான் எடுத்துவைக்கும் அடுத்த தடத்தை நிர்ணயித்துவிடுகின்றன.அந்த வெண்படர்தலின் வழியே  உன்னைத்  தேடியபடி என் விரல்கள் அலைந்துகொண்டிருக்கின்றன.மனதின் மெல்லிழை அது தொட்டுவிடும் தூரத்தில் எங்கோ நீ.
          என் தேடல்களிடையே அவ்வப்பொழுது நான் கடந்து வந்துவிட்ட பாதையையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என் கடந்தகாலம் அது .உன்னுள் நான்..என்னுள் நீ... என்று கூறினாலும் நான் வேறு..நீ வேறு.. என்று நிமிடக்கணக்கில் நினைவுபடுத்தும் தருணங்கள் நிரம்பியது.நான் உன்னுள் கலந்துவிட எத்தனிக்கும் ஒவ்வொரு கணமும் அந்த கடந்தகாலம் என் நினைவுகளில் இருந்து எங்கோ கரைந்துகொண்டிருக்கிறது.இதோ நான் திரும்பிப் பார்க்கையில் இருள் படர்ந்த ஏதோ ஒரு சூன்யத்தில் அவை சுருங்கிக் கொண்டிருக்கின்றன.
                                  புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் இந்த மண்ணுக்கும் கொஞ்சம் புசியுமாம் என்று தோழியுடன்  பாடிக்கொண்டே கட்டிய மணல்வீடுகளுக்கு இன்று விலாசம் இல்லை.அவர்கள் கண்டதிலேயே  நான் சிறந்த பெண் என்று கூறி சிறிதாய் என்னை ஆணவம் கொள்ளச்செய்த அண்டைஅயல் வீட்டிலிருந்த நரைமுடிகளும்  தளர்தோள்களும், ஏனோ அந்த தாத்தாக்களும் பாட்டிகளும் இறந்து போனபோது நான் அழவில்லை.என் தாத்தாவும் அவரது ரேடியோப்போட்டியும் இருந்ததற்கான அடையாளமாய் அந்த ரேடியோவின் கொரகொரப்புகள் மட்டும் இன்னும் எங்கள் வீட்டுச்சுவர்களில் எதிரொலித்தபடி.தொலைந்த அவர்கள் இளமை நினைவுகளை என்னிடம் பகிரும் அப்பாவும் அவரது நண்பர்கள் வட்டமும்.ஒருநாள் அந்த வட்டத்தில் நானும் ஒருபுள்ளியாய்.அந்த நட்பு வட்டத்தின் மிகச்சிறிய உறுப்பினர்.நாளடைவில் எனக்கான நட்பு வட்டம்,எந்தன் நட்பு வட்டம் என் இருவேறு வட்டத்தின் இடைப்புள்ளியாய் நான் மாறியிருந்தேன்,அந்த வட்டம் உன்னையும் அணைத்துச்செல்லும் என்று நான் அன்று அறிந்ததில்லை.பாடப்புத்தகங்களின் பின்னட்டைகள் பாரதியை நான் வரைவதற்காகவும்,எதையேனும் கிறுக்குவதற்க்காகவும் எனக்காக காலியாய் விடப்பட்டிருந்தன.அப்போதெல்லாம் உன் பெயரை நான் அதில்  எழுதியதில்லை.எதிர்காலம்,லட்சியம் என்ற வார்த்தைகள் என்னுள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கும்.யாருமற்ற அந்த பூங்காவில் அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய யோசித்ததுண்டு,அப்போது  என் பின்புறம் நீ அங்கே நின்றிருந்ததில்லை.முதன்முதலில் தொலைபேசி என்ற ஒன்றைப் பார்த்து வியந்தது, உருவம் அறிந்துகொள்ளமுடியாத அதில், ஏதோ ஒரு உறவினரிடம்  ஹலோ என்றது,அப்போது எனக்குத் தெரிந்திருந்ததில்லை, அலைபேசியில்  உன் முகம் பார்த்துக் கொண்டு பேசாது இருக்கமுடியுமென.நான் முன்னோக்கி வந்ததில் ஆங்கங்கே சிதறுண்டு விட்ட கோர்வைகள்  பல,உதிர்ந்துகொண்டிருக்கும் இந்த மலர்கள் போல். இந்த மலர்களை மீண்டும் அந்த மரங்களிடம் சேர்க்கக் கையில் எடுத்தேன்,அங்கு வேறு ஒன்று பூத்துவிட்டிருந்தது.அவைகளை ஏந்தியபடி இதோ நான் உன்னை நோக்கி.உன்னிடம் நெருங்க நெருங்க அவைகள்  நிறம்மாறிக் கொண்டிருக்கின்றன.லாவண்டர் மெல்லிதழ்கள் கொஞ்சம் கடினம் மிக்க ஊதாவாக,எங்கிருந்தோ நீ அவைகளை ஸ்வாசித்துக்கொண்டிருப்பது போல.என் கடந்தகாலமும் நீயும் இரு துருவங்களைப் போல,நான் அந்த துருவங்களை இணைக்கும் கோட்டில் எங்கோ இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன் முற்றிலும் ஊதாவாகிவிட்டிருக்கும் அந்த லாவண்டர் மலர்களை பார்த்தபடி.அங்கே நீ!.மற்றுமொரு கடந்தகாலம் தான் பிறப்பதற்கு  காத்துக்கொண்டிருக்கிறது.


Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - இதுவல்ல



               'அன்பே சிவம் படம் போல்  கமல் நடித்து வெளிவந்த படம் அதற்கு முன்னும் பின்னும் ஏதும்  இல்லை' என்று எப்படியும் விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டு வந்து த்விட்டரிலும் முகநூலிலும் பதிவிட்டுவிடவேண்டும் என்று படத்தை பார்ப்பதற்கு இரு நாட்கள் முன்பே முடிவு செய்துகொண்டேன்,.ஏறக்குறைய எல்லா திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் நாள் மூன்றாம் காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது என் முந்தைய பிறப்பின் புண்ணிய பலன்.

                திரையின் முன்புறத்திலிருந்து  மூன்றாவது வரிசை,'எதுக்கு பிரன்ட்ல டிக்கெட் புக் செஞ்ச' என்று நண்பர்கள் கேள்வி!.ரஜினி படங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் படத்தின் துவக்கம் முதலே விசில் பறந்துகொண்டிருந்தது தியேட்டரில்(ரஜினியின் சிவாஜி படத்திற்கு படம் துவங்கும் முன் வரும் விளம்பரங்களில் இருந்தே விசிலடிக்கத் துவங்கிவிட்டனர்). நண்பர்கள் 'இப்படி விசிலடிச்சா?! டயலாக் ஒழுங்காவே கேக்க மாட்டேங்குது'.நான், 'பின்னாடி எங்கயாவது உட்கார்ந்திருந்தா இதுகூட கேட்காது'(அவசரமாக முன் வரிசையில் டிக்கெட் புக் செய்து நான் செய்த தவறை மூடிமறைத்த பெருமிதம் என்னுள்).
              
              திரைப்படம் இரண்டு பெண்மணிகளின் விவாதங்களுடன் தொடங்கியது. நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் மற்றும் மிஸ்ஸஸ்.விஸ்வநாத்தாக நிரூபமா.ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள் போலவே சுற்றித்திரியும் பெரும்பாலான விஞ்ஞானிகளைப் பார்த்துப் பழகிய எனக்கு எழுந்த முதல் கேள்வியே ஒரு விஞ்ஞானி (அதுவும் நியூகிலியர் ஆங்காலஜிஸ்ட் வேறு)இவ்வாறெல்லாம் யோசிக்க முடியுமா? என்பதுதான்.ஆண்ட்ரியா,எம்மாதிரியான தமிழை அவர் பேசுவது என்று முடிவெடுப்பதற்க்குள்ளாகவே படம் முடிந்துவிடுகிறது.        
      
               ராகுல் போஸ்,விக்ஸ்-தொண்டையின் கீச் கீச் என்பது போன்ற குரலில் பேசினாலும் ,அவரே தமிழ் பேசி நடித்திருக்கிறார்,கொடூரமாகப் பார்ப்பது கத்துவது  என்ற தமிழ் சினிமாவின் வில்லன்கள் சமுதாயத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு,தனக்குள் அமைதியான ஒரு கருப்பு உலகத்தை உருவாக்கிக் கொண்ட ஒரு குரூர மனிதன் போன்ற பாத்திரம்,ஆரவாரமற்ற வில்லனாக மிகக் கச்சிதம் , பாராட்டுக்கள்!. 

               கர்னல் ஜகன்னாத்!,விஸ்வநாத்தின் மாமாவாக,சேகர் கபூர்.ஆண்ட்ரியாவைப் போல் இவரும் இக்கதைக்குத் தேவையா? தேவை இல்லையா? என யோசிக்க வைத்தாலும்,'ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துடக் கூடாதுல்ல' எனும்போது தையற்காரன் நறுக்கென்று சீறாக ஒரு துணியைத் தைப்பதற்காக வெட்டுவது போன்ற  நடிப்பு.நிருபமாவை க்ளோசப் ஷாட்களில் காண்பித்த நொடிகளில் இவரை காண்பித்திருக்கலாம் .நடிப்பை இன்னும் ரசித்திருப்போம்.ஆமாம் இவருக்குத் தமிழ் பேசியது யார்?.


            கமல், விஸ்வநாதனாகவும்,வசீமாகவும் ,நடனத்திலும் நடிப்பிலும் நேர்த்தியோ நேர்த்தி.கமலின் படங்களுக்கே உரித்தான நாத்திகமும் சாடல்களும் கதையின் போக்கினூடே ஆங்காங்கே நகைச்சுவையும்.  'உன்னைக் காணாது' பாடல்,வாலியின் ஆனந்த விகடன் பக்கங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு எழுதிவிட்டார் போல நம் கவிஞர் கமல்.விக்ரமன் படத்தில் எஸ் .ஏ.ராஜ்குமாரின் லாலாலாக்கள் போல படம் முழுக்க ஒலிக்கிறது 'யாரென்று புரிகிறதா?'பாடல்.படம் ஹாலிவுட் தரம் என்று சொல்லும் நண்பர்களுக்கு,அமெரிக்கர்கள் எவரும் ஆப்கானிஸ்தான் அவலங்களைப் படம்பிடிக்க இன்னும் முன்வரவில்லை.ஆனால் கதையின் அந்த ஒரு பகுதிக்காக  மட்டுமே அவரின் ரசிகையான எனக்கு மதிப்பும் பெருமிதமும்  தோன்றுகிறது . ஒசாமாவின் உயரம் முதற்கொண்டு நுணுக்கமாகப் பார்த்து தேர்வு செய்திருக்கும் கமல் மீதமுள்ள கதையை விஸ்வநாதன் என்னும் நடனக்கலைஞன் நடனத்தினூடே சம்பந்தமில்லாமல் சமைத்த சிக்கன் போல ஆக்கிவிட்டார்.அதன் விளைவு  பாஷாவிற்கு பம்பாயின் மார்க் ஆண்டனி என்றால்,விஸ்வநாதன் அமெரிக்காவில்  வசிப்பதால் அவருக்கு ஒசாமாதான் சரிப்படும் என்பது போல ஆக்கிவிட்டது. கமலின் ரசிகையாக விஸ்வரூபம்-2 வெளிவருவது நல்ல விஷயம் என்று எண்ணினாலும்.ஒரு சினிமா பார்வையாளராக இக்கதைக்கு இரண்டாம் பாகம் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது. தொடக்கத்தில் சொன்ன அன்பே சிவம் பற்றிய குறிப்பையும் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.தசாவதாரம் வரிசையில் வந்த கமலின் வாரிசு இப்படம் என்பதால்.      

        உலகில் உள்ள அனைவராலும் உயரத்தில் தூக்கிவைக்கப்பட்டு தனித்துவிடப்பட்ட ஒருவன் தன்னை அவர்களுள் ஒருவனாக நிலையின் திரியாது திணித்துக்கொள்ள முயன்று  உருபெற்ற தோற்றமே இந்த விஸ்வரூபம்.இருப்பினும் கமலின் விஸ்வரூபம் இதுவல்ல.