BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, February 27, 2012

மௌனமே

       
                 படம் வெளிவந்த புதிதில் ஆங்காங்கே பேசப்பட,படத்தைப் பார்க்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன்,கருப்பு வெள்ளை என்றனர் ஆவல் மிகுந்தது.ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது, பலபேர் பேசிவிட்டனர் ஆகையால் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியதே(!).பொதுவாக ஆஸ்கார் பிடித்ததில்லை,மிகைப் படுத்தப்படும் ஆஸ்கார் திரைப்படத் துறைக்கான உயரிய விருது அல்ல என்னும் ஒரு எண்ணத்தினால்.கிடக்கட்டும்,இதோ ஆஸ்காரையும் வென்றுவிட்டது சிறந்த இயக்குனர்,படம், நடிகர் என எப்போதும் தரப்படும் விருதுகளைத் தாண்டி .சிறந்த அசல் இசை கோர்ப்புக்கான விருதையும் வாங்கியதுதான் இன்றே பார்த்துவிட வேண்டும்  என்று முடிவு செய்ய வைத்தது.நான் படத்தை பார்த்த சூழல் இதுவே ,மதியம் தூங்கி எழுந்த எனது மாமா பையன்,மூன்று வயது சுட்டி.நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது அறியாது என்னிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த என் பாட்டி,அத்தை,மூன்று வயது சுட்டியின் தம்பி ,என என்றும் அமைதி மிஞ்சி இருக்கும்  இல்லம் இன்று கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது.இந்த சலசலப்புகளுக்கிடையில் காதுகளில் செவிப்பொறிகளை அணிந்துகொண்டு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அவர்களது கேள்விகளுக்கும்,கோரிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் pause பொத்தான்கள் ஈடுகொடுத்தாலும் மனது ஈடுகொடுக்காமல் "ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு என்ன யாரும் தொந்தரவு செய்யாதீங்க pleeeeeeees! " என்றபடி பார்க்கத் துவங்கினேன்.என்னுடன் பேச்சு இல்லையெனினும் அவர்களிடம் ஏதோ ஒரு முனுமுனுப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.நான்,படத்தை மட்டும் கேட்டிருக்கும்படி உலகம் நிசப்தமானால் எப்படி இருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.படத்தின் கதைக் கருவும் அதுதான்.தனது கலை,தான் வாழ்ந்து சுவாசித்த நடிப்புக் கலை அதை கொண்டு பின்னிய சினிமாத்துறை இதில் ஏற்படும் திடீர் மாற்றங்களை அவன் எப்படிப் பார்க்கிறான் எதிர்கொள்கிறான்  என்று நகர்கிறது கதை.மௌனத்திலிருந்து வேறொரு மொழிக்கு தன்னை பக்குவப் படுத்திக்கொள்ள இயலாத ஒரு கலைஞனின் துடிப்பை மௌனம்,இசை,முகபாவம் என்ற மூன்றின் உதவியோடு செதுக்கி உள்ளார் இயக்குனர்.
            மௌனம்!அமைதி! என்பது பலருக்கு தனிமை என்பதில் மட்டுமே அதிகம் கிடைக்கிறது.ஒரு கலைஞன்  ஏன் தனிமையைத் தேடுகிறான்.மௌனத்திலும், அமைதியிலும்,தனிமையிலும் மட்டுமே ஏன் பெரும்பாலான கலைஞர்களின் படைப்பு உருபெருகிறது.விதையிலிருந்து வளர்ந்து,மலர்ந்து,கனிந்த பழம் வேறு ஒரு வளர்தலுக்கான விதியினை கொண்டிருப்பது போல திரையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்கையில் கேள்விகள் அதிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்துகொண்டு இருந்தது. நம் மனதை அசைத்துப் பார்த்துவிடும் கலையை தன்வசம் வைத்திருப்பவனிடம் வெண்மை போர்த்தப் பட்ட ஒரு மனப்போர் நிச்சயம் உண்டு.கற்களில் நடக்கவிடும்,மலர் அள்ளி வீசிவிடும்,காற்றுக்கு உருவமிட்டும்,மண் எழும் புழுதி தற்செயலாயினும் அதற்கும் உயிர் கொடுத்து உனக்கெதிராய் திருப்பிவிடும் மனப்போர்.கலைஞன்,சுயநலவாதி கூட தன் உணர்வுகளை வெளிப்படுத்தி தன் மனச் சுமையை குறைக்க, ரசிகன் என்று சக இனத்தானையே தேர்ந்தெடுத்தானே.இவ்வரி எழுதுகையில் திரைப்படத்தில் வந்த கதாநாயகன் மீது ஒரு சந்தேகக் கேள்வி எழுகிறது, அவனுக்கு ஐந்தறிவு ஜீவனான நாயும் ஒரு ரசிகன்.அந்த கதாநாயகன் எத்தகையான கலைஞன்?. அவன் மௌனத்தில் நடிப்பை உணர்ந்த அக்காலத்து உயிர்களின் ரசிப்புத் தன்மை.ஆனால்  மெய் யாதெனின் ஒரு ரசிகனின் மனப்பாங்கிற்கு ஏற்ப காலம் காலமாக தன் உண்மைத்துவத்தை அழித்துக்கொண்டு தன்னை  புதுப்பித்துக் கொண்டிருக்கிறது கலை,சிறந்த உதாரணம்: நான் இப்போது எழுதி, பழகி,பேசி ரசிக்கும் தமிழ் என் முப்பாட்டனுக்கு முன் பிறந்த தமிழல்ல.இவற்றிடையில் இக்காலத்து ஜீவனாகிய நான் எவ்வகையில் என்னை ரசிகை என்று சொல்லிக்கொள்ளலாம்.அண்டை வீட்டுக்காரனின்  ரசிகத்தனம் அடுத்தவீட்டு சண்டையின் ஒலி-ஒளியை ரசிப்பதோடு குன்றிவிட்டதை அளவீடாகக் கொண்டா?!.வீட்டிலிருப்போரின் ரசிகமணி புகழாரங்கள் கொண்டா?!.உணர்ச்சிகள்  பொங்க புன்னகை,கண்ணீர்,ஆனந்தம்,ஆத்திரம் என எழும் நவரசங்களை அளவாகக் கொண்டா?!.யான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தில் சிறிதில் ஒரு பங்கேனும் பெறவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்பொழுது எழுவதாலா?!.எனுள் இருப்பது ரசிகையில்லை,இருப்பதாகத் தோன்றின்?!என்றோ ஒருவர் செய்து சென்ற மாற்றங்களுக்கு தானறியாமல் அடிமைப்பட்ட ஒரு நிழல் அவள்.ஆதி கலை ஒன்று வேண்டும் எனுள் ரசிகையினை உணர என்றேன்.தேடல்கள் கண்டது மௌனம் ஒன்றையே.மௌனத்தை உணர ஏதொன்றும் தேவையில்லை அம்மௌனம் தவிர.இருப்பினும் அதன் அமைதிக்கு உருவம் தேடுகிறது மனம்.                       
        

Wednesday, February 1, 2012

கண்டேன் கண்டேன்..

நீண்ட நெடுஞ்சாலை இல்லை,
பூத்திருக்கும் கிளைகள் இல்லை,
செவியனைக்கும் அமைதி இல்லை,
கண்டதெல்லாம் 
பல உருவம்,
பல நிறங்கள்,
இரயிலடியின் சலசலப்பு ,
இருப்பினும் அதில் கண்டேன்
நிறமொத்த கரம் இரண்டில்,
பிணைவு மொழியை.  
அவன் நோக்கி அவள் நிமிர்ந்தும்,
அவள் பார்த்து அவன் சாய்ந்தும்,
புன்னகை மட்டும் முகம் பூக்க,
பேசின யாவும் கரங்கள் மட்டுமே.
இல்பொருளாய் அங்கு கண்டேன்,
நெடுஞ்சாலையும்,
பூமரமும்,
கரங்கள் நமதும்,
காதல் அதிலும்.